Followers

Monday, August 22, 2011

தமிழர்களாகிய நாம் அன்னா அசாரேவை ஆதரிக்கலாகாது...ஏன்.?

22.8.11

தமிழர்களாகிய நாம்  அன்னா அசாரேவை ஆதரிக்கலாகாது...ஏன்.?




அன்னா அசாரே தற்போதைய சூடான தலைப்பு. எல்லோரும் அவருக்கு ஆதரவாக கொடி பிடிக்கிறார்கள். (தேசியக் கொடிதான் என்றாலும் அதைப் பிடிப்பது அவருக்கு ஆதரவாகத்தானே..!)

இந்தச் சமயத்தில் நான் இது குறித்து சில சங்கதிகளை பேச விரும்புகிறேன். நாம் ஏன் அன்னாவை..( அண்ணாவை அல்ல..) ஆதரிக்கலாகாது என்பதற்கான காரணங்களை பட்டியலிடுகிறேன்.

1.      அன்னா அசாரே காந்தி குல்லாய் அணிந்திருக்கிறார்.

2.      அவர் பெயர் அன்னா அசாரே.. அண்ணா அல்ல.

3.      அன்னா, தமிழரல்ல.

4.      அன்னா பேசும் மொழியும் தமிழல்ல.

5.      தமிழின சாதிக் காவலர், முக்கனிகளில் ஒன்றை தனது கட்சியின் சின்னமாக வைத்திருக்கும் வீரத் தமிழர் அன்னா அசாரே யாரென்றே தெரியாதெனக் கூறியிருக்கிறார். (நமது தமிழினத் தலைவர்களை விட நாம் விடயம் அறிந்திருக்கலாகாது.)

6.      வடக்கே வாழ்கிறது தெற்கே தேய்கிறது என்று சொல்லி இங்கு கட்சியை வளர்த்த உண்மைத் தமிழர்கள் தற்போதுதான் வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்  (2 G - CAG reportல சொல்லியிருக்கே, அது எவ்வளவுங்க..ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி உரூபாய்களா..?). இது பொறுக்காத இந்த குல்லாக்காரர் இப்போது எல்லாவற்றையும் கெடுக்க ஆரம்பிக்கிறார். இன்னமும் எவ்வளவு இருக்கிறது.. தமிழகத்தின் கிழக்கு, மேற்கு, தெற்கு என எல்லாப் பகுதிகளும் வாழ வேண்டாமா..?

7.   எல்லாவற்றிர்க்கும் மேலாக அன்னா தமிழினத்திற்கோ அல்லது தமிழீழத்திற்கோ குரல் கொடுத்தவரல்ல. (ஆனால் இங்கிருக்கும் தமிழினத்தலைவர்கள் இவரை விட பிரமாதமாக உண்ணாவிரதம் இருந்தே ஈழப் போரை நிறுத்தியவர்கள்.)

8.      இது மட்டுமல்ல. தமிழகத்தின் திராவிடத் தலைவர்தான் முதன் முதலில் ஊழலை எதிர்த்து சட்டம் கொண்டு வந்தாராமே.. அப்படி இருக்கையில் குல்லாக்காரர் எப்படி இத்துனை அலட்டல் விடலாம்? (இவர்கள்தான் அற்புதமாக ஊழல் செய்தனர் என்பது வேறு. ஒரு தொழிலை கற்றுத் தேர்ந்தால் தானே அதைச் செய்பவனைப் பிடிக்கவோ அல்லது தடுக்கவோ முடியும்..?எனவே இவர்கள் ஊழலைச் செய்ததெல்லாம் அதைத் தடுக்க அவர்கள் எடுத்த முதல் முயற்சியே தவிர வேறல்ல..)

9.    இவர் தலித்துகளுக்கு ஆதரவாய் எந்தப் போராட்டமும் நடத்தவில்லை. மாறாக இவர் தலித்துமல்ல.

10.  இத்துனைக்கும் மேலாக  இந்த ஊழல் என்பது நமது தமிழ் நாட்டில் அறவே இல்லை. அதனால் மக்கள் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை.

11.  இவரை ஆதரிப்போர் தேசியக் கொடியைப் பிடித்திருக்கின்றனர்.

12. இவை எல்லாவற்றையும் விட  இவருக்கு குடும்பமோ, ஸ்விஸ் வங்கியில் கணக்கோ இல்லை.


மேலே சொன்ன காரணங்களை படித்தீர்களல்லவா?

சரி. இப்போது இவரை ஏன் நாம் ஆதரிக்க வேண்டும் என்று ஒரே ஒரு காரணம் சொல்கிறேன், கேளுங்கள்.




நமது தமிழ்நாட்டில் பிறந்து மிகப் பெரும் அறிவாற்றல் பெற்று, எந்த ஒரு தனியார் நிறுவனத்திலும் ஒரு பெரும் பதவியிலோ  அல்லது தானே தனியாக ஒரு தொழிலதிபராகவோ  பரிமளித்திருக்கக்கூடிய தகுதி பெற்றும் இந்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி அனைத்து இந்தியனும் தலை நிமிர்ந்து நிற்கும்படிக்கு உலக அரங்கிலே இந்தியாவை உயர்த்தியவர்; வலுவான இந்து மதக் கோட்பாட்டையே தனது கட்சியின் செல்வாக்கைப் பெருக்க பிரச்சாரம் செய்து வந்த ஒரு இந்துக் கட்சியே, இஸ்லாமியரான இவரை நாட்டின் மிகப் பெரும் பதவியான இந்திய ஜனாதிபதியாக அமர்த்தி அழகுபார்க்கும் படி உயர்ந்தவர்; குழந்தைகளையே எதிர்கால இந்தியாவாக பாவித்தவர்; சாதி, மதம், கட்சி, கொள்கை என்று இல்லாமல் இந்தியாவைப் பார்த்தவர்; நமது நாட்டைத் தாயாக பாவித்தவர், மாபெரும் மனிதர், இளைஞர்,  டாக்டர். அப்துல் கலாம் சொன்னாரே, ‘இளைஞர்களே.. கனவு காணுங்கள்..’ என்று..

அதன்படி வலிமையான இந்தியாவைப் பெறவிழையும் இளைஞர்களே..! ஊழல் என்ற உயிர்க் கொல்லி நோயிலிருந்தும், தன்னலமிக்க அரசியல்வாதிகளான நோய்க் கிருமிகளிலிருந்தும் இந்தியாவைக் காத்து அதனை வல்லரசாக்க விரும்பினால்…அப்துல் கலாம் என்னும் மா மனிதரின் கனவை நனவாக்க விரும்பினால்...காந்தியம் மறுபடியும் உயிர்த்து நமது நாட்டையும் உயர்த்த விரும்பினால்....



தயவு செய்து அன்னா அசாரேவை ஆதரியுங்கள். இந்தியா வளம் பெற்றால் தான் தவறாது தமிழகமும் வளம் பெறும்.  இன்றைய இளைஞர்களின் முன் மாதிரி - Icon of today’s youth - அன்னா அசாரேதான்.


இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.





Related Posts Plugin for WordPress, Blogger...