Followers

Wednesday, July 29, 2015

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IV


29.7.15

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IV



 முந்தைய பகுதிகளுக்கு:

1.  தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I

2. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II


3. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III

நண்பர் தொடர்ந்தார்.

“உதவி ஆணையரிடமிருந்து கிடைத்த ஒரு நேர்மறை உந்துதலினால் வந்த ஏதோ ஒரு வேகத்தில் உணவகத்தில் பேசிவிட்டேனே ஒழிய மனதிற்குள் ஒரு பதட்டம் இருந்தது. ஆனாலும் நான் ஒரு முடிவு எடுத்தாகவேண்டும். இந்தச் சொத்தை பிள்ளைக்கு விட்டுவிட்டுப் போவது பெரிதல்ல அதோடு பிரச்சினையையும் விட்டு விட்டு போகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இதில் என்ன ஒரு சிக்கல் என்றால் எந்த ஒரு ஆவணமும் எங்களிடம் கிடையாது. இது மிகவும் எதிர் மறையான செய்திதான் என்றாலும் இதில் உள்ள ஒரு பெரிய அனுகூலம் என்னவென்றால் ஆவணங்களை இனி நாங்கள்தான் உருவாக்கியாக வேண்டும் அல்லது பெற்றாக வேண்டும் என்பதே. ஆகையால் நான் அதைப் பற்றி யோசித்தேன். அன்று இரவு தூக்கமே இல்லை.

கட்சிக்காரனின் முதல் ஆயுதம் முடக்கப்பட்டதும் சற்று அடங்கினார்ப்போல் தெரிந்ததே ஒழிய அவன் முடங்கிப் போகவில்லை. காவல் நிலைய ஆய்வாளர் அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இதற்கிடையே எங்கள் மேல் விற்பனையாளர் போட்டிருந்த வழக்கு Assisstant City Civil Court ஆல் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பானது. உடனே விற்பனையாளர் அந்த தீர்ப்பை எதிர்த்து Additional City Civil Court ல் அப்பீல் செய்தார். ஆனாலும் இந்த சாதகமான தீர்ப்பு எங்களுக்கு கிடைத்த முதல் ஆவணமாகும்.

அடுத்த ஒரு மாதத்திலேயே விற்பனையாளர் அந்த அப்பீலை திரும்பப் பெற்றுக் கொண்டார். எங்களுக்கு குழப்பமாக இருந்தது ஆனால் அடுத்த பதினைந்து நாட்களுக்குள் விற்பனையாளரிடமிருந்து வீடுகளை வாங்கிய கட்சிக்காரனால் அதே வழக்கு திரும்பவும் எங்கள் மீது தொடுக்கப்பட்டது.

இதற்குள் எங்களது குடியிருப்பின் அனுமதி பெறப்பட்ட வரைபடம், மற்றும் விற்பனையாளரது வீடுகளின் பதிவு ஆவணம் கையில் கிடைத்தது. அதைப் பார்க்கையில்தான் தெரிந்தது உண்மையில் விற்பனையாளர் முதல் தளம் (கட்சிக்காரனது தந்தையார் பெயரில் பதிவாகி இருக்கிறது) மற்றும் மூண்றாம் தளத்திலுள்ள வீடு (கட்சிக்காரனின் மனைவியின் பெயரில் பதிவாகி இருக்கிறது) களை மட்டுமே கிரயம் செய்து கொடுத்திருக்கிறார். எங்கள் மீது வழக்குத் தொடுத்த கட்சிக்காரனின் பெயரில் எந்த வீடும் பதிவாக வில்லை. நாங்கள் நினைத்திருந்ததைப்போல கீழே தரை தளத்தில் உள்ள வீடு கட்சிக்காரனது பெயருக்கு விற்கப் படவில்லை.

அந்த ஆவணங்களைப் பார்த்த பிறகுதான் விற்பனையாளருக்கும் கட்சிக்காரனுக்கும் உள்ள ஒப்பந்தம் புரிந்தது. தரை தளத்தில் உள்ள வீட்டை ஒட்டியுள்ள பொது உபயோகத்தில் உள்ள நிலத்தையும் சேர்த்து அதிக விலைக்கு விற்று இருவரும் பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளனர் என்பது புரிந்தது.

இதையே நாங்கள் நீதி மன்றத்தில் பதிலாக தாக்கல் செய்தோம். மேலும் எங்கள் குடியிருப்பில் எந்த வீடும் வழக்கு தொடுத்திருந்த கட்சிக்காரனுக்கு கிரயம் செய்து கொடுக்கப்படாததால் அவர் இந்த வழக்கு தொடுக்க அருகதையற்றவர் என்றும் தாக்கல் செய்தோம்.

இந்த பதிலைக் காட்டி கட்சிக்காரன் விற்பனையாளரிடம் உடனே கீழுள்ள வீட்டை தன் பெயரில் கிரயம் செய்து வைக்கச் சொல்லி வற்புறுத்த கிரயமும் அவன் பேரில் நடந்தது.

அங்குதான் விதி விளையாடியது.

கட்சிக்காரன் விற்பனையாளருக்கு இந்த விற்பனையில் முழுவதும் பணமாக செட்டில் செய்யாமல் தன் வசமிருந்த ஏதோ ஒரு நிலத்தைக் காட்டி அது சம மதிப்புள்ளது என்று சொல்லி விற்பனையாளர் தலையில் கட்டிவிட்டான். அந்த நிலம் புறம்போக்கு நிலமென்று பத்திரப்பதிவு முடிந்து வெகு நாட்களுக்குப் பின்னர்தான் விற்பனையாளருக்குத் தெரிந்தது. இதனால் விற்பனையாளர் மொத்தமாக ஏமாற்றப் பட்டார்.

இது குறித்து விற்பனையாளர் கட்சிக்காரன் புறம்போக்கு நிலத்தை தனக்கு பதிவு செய்து ஏமாற்றி விட்டதால் அதற்கு பதிலாக பணம் தரச்சொல்லி கேட்டதாகவும், ‘பணம் கேட்டு வந்தாயானால் உனது ஓரே பையன் இனி உயிரோடு இருக்கமாட்டான்’ என கட்சிக்காரன் மிரட்டியதாகவும் அதனால் ஏமாந்த விற்பனையாளர் கட்சிக்காரன் மீது மோசடி வழக்கு பதிந்து அது நடந்து கொண்டிருப்பதாகவும் பின்னாளில் கேள்விப்பட்டேன்.

இது எங்களை மேலும் அச்சுறுத்தும் செய்தியாக இருந்தது. ஆனாலும் மனம் தளராமல் கட்சிக்காரனிடமிருந்து எங்கள் குடியிருப்பை காப்பாற்றும் முயற்சியில் நம்பிக்கையுடன் செயல்பட்டோம்.

 
 
ஒரு SWOT ANALYSIS மாதிரி ஒரு Ground state analysis செய்தேன்.

எங்களுக்கு கட்சிக்காரனால் சொத்துக்கும் உயிருக்கும் ஆபத்து வரலாம். ஆக நாங்கள் பாதுகாக்க வேண்டியவைகளுக்காக நாங்கள் செய்ய வேண்டியதை யோசித்தேன். தீவிர யோசனைக்குப் பிறகு பட்டியலிட்டேன்.

முதலில், எங்கள் உயிருக்கு அபாயம் இருப்பதாக காவல் துறையினருக்கு மனுச்செய்து குறைந்த பட்சம் ‘நாங்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்கிறோம் என்பதைக் காட்டினாலே அது கட்சிக்காரனுக்கு ஒரு deterrent ஆக இருக்கும் என நினைத்தேன். அப்படி எங்களுக்கு ஏதேனும் நடந்தால் முதலில் சந்தேக வலைக்குள் அவன்தான் வருவான் என்பது அவனுக்கும் தெரியுமாதலால் இதில் ஓரளவுக்கு பாதுகாப்பு எங்களுக்கு இருக்கும் என தோன்றியது.

இரண்டாவதாக எங்களது குடியிருப்பை (apartment) அவன் அப்படியே வாங்கிவிட வேண்டும் என்கின்ற நோக்கம் எவ்வகையிலும் நிறைவேறாது என அவன் புரிந்து கொள்ளும்படி செய்யவேண்டும். இவைகளை எப்படி செய்யமுடியும் என்பதை தீர்மானிக்க நான் என் கையிலிருந்த ஆவணங்களை கூர்மையாக பரிசீலிக்க ஆரம்பித்தபோது பல தகவல்கள் தெரியவந்தது.

அவைகள்:

1.   குடியிருப்பில் உள்ள மூண்றாவது மாடியில் கட்டப்பட்டு விற்பனையாளரின் வசம் இருந்த 2000 சதுர அடிகள் கொண்ட வீடு CMDA வின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்தது.

2.   குடியிருப்பில் உள்ள 10 வீடுகளும் 30 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டிருந்தாலும் 7 வீடுகளுக்கு மட்டுமே ஆவணங்கள் தயார் செய்யப் பட்டு விற்கப்பட்டிருக்கின்றன. மீதி 3 வீடுகளும் விற்பனையாளரின் அனுபவத்தில் இருந்திருக்கிறது.

3.   விற்பனையாளர் தன் வசமிருந்த 3 வீடுகளை கட்சிக்காரனிடம் தற்போதுதான் விற்றிருக்கிறான். அவைகளுக்கான ஆவணங்களும் விற்பனையாளரால் தற்போதுதான் உருவாக்கப் பட்டிருக்கின்றன. 3 வீடுகளில் மூண்றாவது மாடியிலிருக்கும் அனுமதி பெறாத கட்டிடம் கட்சிக்காரனின் மனைவியின் பெயரிலும், முதல் மாடியில் இருக்கும் ஒரு வீடு கட்சிக்காரனின் தகப்பனார் பெயரிலும், தரை தளத்திலுள்ள வீட்டை கட்சிக்காரன் தனது பெயரிலுமாக விற்பனை ஆவனங்கள் தயாரித்து சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

4.   விற்பனையாளர் தற்போது விற்றுள்ள இந்த மூண்று வீடுகளுக்கான ஆவணங்களில் புதிதாக கார் நிறுத்துமிடமும் (Car parking) மற்றும் பொதுவிடத்தின் அளவுகளாக தற்போது உள்ள உண்மையான அளவில் 4 அடிகள் குறைவாகவும் Schedule B யில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது மறைமுகமாக தரை தளத்தில் இருந்த அவனது வீட்டை ஒட்டி உள்ள இந்த 4 அடிகளை உபயோகிக்கும் உரிமை கீழ் வீட்டிலுள்ள கட்சிக்காரனுக்கு மட்டுமே உள்ளது.

இதைத் தவிர கட்சிக்காரனைப்பற்றி விசாரித்ததில் அவனது மனைவியின் தாயாரோ, தாயார் வழி பெண் உறவினரோ ஒருவர் மதுராந்தகத்தில் அப்போதைய ஆளுங்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவராகவும் அவரது இடையூரால்தான் காவல் நிலையத்தில் இருக்கும் ஆய்வாளர் இந்தக் கட்சிக்காரருக்கு ஆதரவாய் இருக்கிறார் எனவும் தெரிந்தது.

இது மட்டுமல்லாது வேளாச்சேரியிலும் இதே போன்று  ஒரு பெரும் சொத்தை வளைத்துவிட இந்தக் கட்சிக்காரனே பிரயத்தனப்பட்டுக் கொண்டிக்கிறான் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒரு ஆவணமும் எங்கள் கையில் கிடைத்தது.

உடனே கையில் இருந்த ஆவணங்களையும் மற்றும் இதுவரை காவல் நிலையத்தில் கட்சிக்காரன் மற்றும் விற்பனையாளர் ஆகியோர் மீது நாங்கள் கொடுத்த புகார்கள் அவைகளின் CSR நகல்கள் ஆகியவைகளையும் வைத்து எங்கள் குடியிருப்பில் நிலவும் அசாதாரணமான நிலைமை குறித்து விரிவாக ஒரு புகாரை தயார் செய்து காவல் துறை ஆணையரை நேரில் சந்தித்து புகார் மனுவை கொடுத்தோம்.

இந்த Defensive action எடுத்து முடிந்தவுடன் Offensive action ஆக எங்களது குடியிருப்பில் இருக்கும் அனுமதி பெறாத மூண்றாவது தளத்தினை இடிப்பதற்கான நீதிமண்ற ஆணையையும் அது குறித்து CMDA வுக்கு ஒரு அறிவுறுத்தலையும் கேட்டு ஒரு வழக்கு Assistant City Civil Court ல் தொடர்ந்தோம். அந்த மனுவிலேயே எதிராளியான கட்சிக்காரர் குடியிருப்பின் பொது இடத்தை ஆக்கிரமிக்க செய்யும் முகாந்திரங்களையும் விளக்கி அதைத் தடுக்கவும் கோரி வழக்கு தொடுத்தோம். அதே வழக்கிலேயே குடியிருப்பின் பொது இடத்தில் ஏதும் கட்டுமானப்பணி நடக்காமல் தற்போதைய நிலையே நீடீக்கும்படி ஒரு Status Quo உத்தரவும் பெற்றோம்.

ஆனால் எங்களது இந்த முயற்சிகளால் கட்சிக்காரன் சற்றும் சளைத்ததாய்த் தெரியவில்லை.

நாங்கள் தயாராகும் முன்னரே வேறு ஒரு சம்பவமும் நடந்தது.

 
ஒரு நாள் காலை லாரியில் வந்திறங்கிய கூலி ஆட்கள் எங்களது குடியிருப்பின் பொது இடத்தில் சுவர் கட்டும் நோக்கில் தோண்டத் தொடங்கினர். குடியிருப்பின் வாயிலில் மணலும், சிமெண்டும் செங்கல்லும் வந்து இறங்கியது.

கட்சிக்காரனும் அவனது மனைவியும் குடியிருப்பின் வாயிலில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றனர். கூடவே ஒரு பத்து அடியாட்களும் இருந்தனர்.

எதுவும் செய்ய இயலாமல் எங்கள் குடியிருப்பில் இருந்தோர் கைகளைப் பிசைந்து கொண்டு கலக்கத்துடன் இருந்தோம்.”

பேசியபடியே இருந்த நண்பர் மறுபடியும் பதட்டத்திற்குள்ளானார். நான் சற்று நீர் அருந்துங்கள் என அவரது கவனத்தை திருப்பி அவரை ஆசுவாசப் படுத்தினேன்.

 

என் கையிலிருந்த தம்ளரை வாங்கி நீர் அருந்தியவர் வெகுநேரம் கழித்தே மறுபடி தொடர்ந்தார்.

நண்பர் தொடர்ந்தது அடுத்த பதிவில்.
 

அன்பன்,

வேதாந்தி.

 

 

Friday, July 24, 2015

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III


24.7.15

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III

 
முந்தைய பகுதிகளுக்கு:

1.  தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I

2. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II

 
அந்த நேரத்தில் நண்பருக்கு என் மனைவி காபி எடுத்துக் கொண்டு வந்தாள். நண்பரது குடும்ப நலனை விசாரித்தாள். பிறகு நண்பரது முகத்தைப் பார்த்து ஏதோ சங்கடமான செய்திகளை பேசிக்கொண்டிருக்கிறோம் என்று யூகித்தவள் மறுபடி எங்களை தனியே விட்டு வீட்டினுள் சென்றுவிட்டாள்.

நண்பர் தொடர்ந்தார்.

“விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு சென்ற நான் ஏற்கனவே விற்பனையாளர் மீதும் கட்சிக்காரன் மீதும் கொடுத்திருந்த புகார்களை கையோடு எடுத்துச் சென்றேன்.

காவல் நிலையத்தின் ஆய்வாளர் எங்களை மிகக் கடுமையாக நடத்தத் தொடங்கினார். ‘இங்கேயே காத்திருங்கள்’ என்று சொல்லி அங்கிருந்த ஒரு நீளமான மர இருக்கையில் இருக்கச் செய்தார். அவரது நடவடிக்கை கட்சிக்காரரின் பக்கமாகவே இருந்தது. சற்று யோசித்த நான் உடனே என்னுடன் வந்திருந்த ஒருவரை மட்டும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

‘என்ன சார், என்ன?’ என்று பதட்டத்துடன் வினவிய அவரை சமாதானப்படுத்தி அவரது இரு சக்கர வாகனத்தை எடுக்கச் சொன்னேன். ‘எங்க சார்?’ என்றார். ‘ஒன்றுமில்லை நேரே அசிஸ்டண்ட் கமிஷனர் ஆபீசுக்கு விடுங்க’ என்றேன். சற்றே குழம்பிப் போனவர் வேறேதும் பேசாமல் வண்டியை அருகிலிருந்த உதவி ஆணையர் அலுவலகத்திற்கு விட்டார். அலுவலகத்தை  அடைந்ததும் நான் அவரை வெளியிலேயே இருக்கச் சொல்லிவிட்டு உதவி ஆணையரை பார்க்கச் சென்றேன்.

உதவி ஆணையரின் உதவியாளரிடம் சொல்லியனுப்பியதும் சற்று நேரத்தில் என்னை உள்ளே வரச்சொன்னார். உள்ளே சென்றவன் உதவி ஆணையருக்கு வணக்கம் சொன்னவுடன் திரும்ப வணக்கம் சொல்லியவர் என்னை அவருக்கு முன்னே இருந்த இருக்கையில் அமரச் சொன்னார்.

அமர்ந்தவன் அவரிடம் என்னைப்பற்றி அறிமுகம் செய்து கொண்டேன். தற்போது எங்கள் குடியிருப்பில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினையைச் சொன்னேன். அதில் விற்பனையாளருக்கும் கட்சிக்காரருக்கும் இருக்கும் நோக்கத்தையும் சொன்னேன். இவருக்கு பயந்து கொண்டு ஓய்வு பெற்ற TVS group MD வீட்டை விற்றுவிட்டு சென்ற கதையையும் சொன்னேன். இவற்றுக்கெல்லாம் கையிலிருந்த ஆதாரங்களையும் காட்டினேன். அவைகளை தன் கையில் வாங்கிப் பார்த்தவர் முகம் சுளித்தார்.

‘சரி இப்போது என்ன?’ என்றார்.

‘இதன் விளைவாக எங்கள் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கிறார்கள் சார். அதன் விசாரணைக்குத்தான் இப்போது காவல் நிலையம் வந்திருந்தோம். ஆனால் எங்களது வயதையும் கூட பொருட்படுத்தாது எங்களை அவமானப் படுத்துகிறார்கள். உங்களைப் பார்த்து இதைப் பற்றி சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன். மற்றபடி ஆய்வாளர் மீது நாங்கள் சொல்லும் புகாராக இதை எடுத்துக் கொள்ளவேண்டாம்’, என்றேன்.

சட்டென்று உதவி ஆணையரது முகம் இறுகியது. ‘சற்று நேரம் வெளியே காத்திருங்கள்’ என்று சொல்லிக்கொண்டே யாரையோ தொலைபேசியில் அழைத்தார். நான் வெளியே வந்தேன்.

சிறிது நேரம் கழித்து நாங்கள் விசாரணைக்கு சென்றிருந்த காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் வந்தார். அவர் உதவி ஆணையரது அறைக்குள் சென்ற சிறிது நேரத்திற்குள் எனக்கு அழைப்பு வந்தது. நான் உடனே எழுந்து அறைக்குள் சென்றேன்.

‘என்னய்யா..? என்ன இதெல்லாம்?’, என என்னைக் கைகாட்டி அதட்டலாய்க் கேட்டதும் தலமைக்காவலர் நடுக்கத்தில் அதிர்ந்து போனார். ‘சார்.. அதெல்லாம் ஒன்னுமில்லை சார். சாரைப் பற்றி எங்களுக்கு நல்லாத் தெரியும். சும்மா பதில் எழுதி வாங்கத்தான் வரச்சொன்னோம்..’ என்றவரைப்பார்த்து, ‘சும்மா அவன் சொன்னான் இவன் சொன்னான்னு ஏதேனும் பண்ணுணீங்க.. அப்புறம் பார்த்துக்க..’ என்று தனது ஒற்றை விரலை உயர்த்தி எச்சரிக்கைத் தொனியில் பேசினவரது கண்களில் இறுக்கம் தெரிந்தது.

அதற்குப்பிறகு சட்டென என்பக்கம் திரும்பி, ‘ நீங்க போங்க சார். வேறேதும் பிரச்சினைன்னா வாங்க.’ என்று என்னை போகச் சொன்னார்.

உதவி ஆணையரது அறையிலிருந்து தலைமைக்காவலர் வெளியேவர சற்று நேரம் பிடித்தது.

வெளியே வந்தவர், ‘நீங்க ஏன் சார் இங்கெல்லாம் வர்றீங்க.. எனக்குத் தெரியாதா? என்னிடம் சொன்னால் நான் பார்த்துக்க மாட்டேனா?’ என்றார். அவரது பேச்சில் நடையில் மாற்றம் நிறையவே தெரிந்தது. ‘சும்மா ஸ்டேசனுக்கு வந்து எழுதி கொடுத்துட்டு போங்க சார். நான் பார்த்துக்கறேன்.’ என்று சொல்லியபடியே தனது இரு சக்கர வாகனத்தில் ஏறி புறப்பட்டார்.

என்னுடன் வந்தவருக்கு ஒரே வியப்பு. ‘என்ன சார் நடந்தது?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். ‘ஒண்ணுமில்லை. நீங்க வண்டியெடுங்க போலாம்.’ என்றேன். உதவி ஆணையர் எங்கே என்னை அவர் முன் அவமானப்படுத்தி விடுவாரோ என்ற பயத்தில் அவரை நான் வெளியிலேயே இருக்கச் சொன்னது அவருக்குத் தெரியாது. உதவி ஆணையரின் அறைக்குள் நுழையும் முன்னர் என்னுள் இருந்த அந்த desperate feelings, helpless nature and all gone attitude எல்லாம் உதவி ஆணையரைப் பார்த்து பேசியவுடன் மறைந்து போனது.

என் முகத்தில் தெரிந்த மாற்றத்தைப் பார்த்து, ‘என்ன சார் சட்டுனு மாறிட்டீங்க..!’ என்றார். அவரது இரு சக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்தபடியே, ‘இனிமே எல்லாமே மாறப்போகுது பாருங்க.’ என்றேன்.

காவல் நிலையம் வந்தடைந்தோம். காவல் ஆய்வாளர், தலைமைக் காவலரைப் பார்த்து, ‘என்னவாம்யா?’ என்று வெறுப்பாய் கேட்டார். தலைமைக் காவலர் அவரது அறைக்குள் சென்று  ஏதோ சொல்ல சற்று நேரத்தில் வெளியே வந்தவர் எங்களைப்  பார்த்து , ‘சார் வந்து எழுதிக் கொடுத்துட்டுப் போங்க சார்..நான் பார்த்துக்கறேன்..’ என்றார்.

உள்ளே நுழைந்து அவர் சொன்னபடி எங்களுக்கும் இந்தப் புகாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது நோக்குடன் கொடுக்கப்பட்ட ஒரு பொய்ப்புகார் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்தோம்.

என்னுடன் வந்தவர்கள் இத்தனை பெரிய பிரச்சினை மிகச் சாதாரணமாக முடிந்தது கண்டு ஆச்சரியப்பட்டனர்.

காவல் நிலையத்திலிருந்து திரும்பும் வழியில் ஒரு உணவகத்தில் அமர்ந்து இறுக்கம் தளர பேச ஆரம்பித்தோம். அது ஏறக்குறைய ஒரு Action Plan meeting போலவே இருந்தது. முதல் வெற்றி தந்த உற்சாகத்தில் பேசினேன்.




‘ நம்ம அபார்ட்மெண்ட் அப்ரூவ்டு ப்ளான் காபி வேண்டும். இந்த கட்சிக்காரனைப்பற்றி எல்லாத் தகவலும் வேண்டும். மேலும் உண்மையாலுமே இந்த விற்பனையாளர் கட்சிக்காரனுக்கு தனது மூன்று வீடுகளையும் விற்றிருக்கிறானா என உறுதி செய்ய அந்த மூன்று வீடுகளின் காபி ஆப் த டாகுமெண்ட் கேட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் உடனே விண்ணப்பம் செய்யவேண்டும்….’ என்று நான் மட மட வென பேசியபோது ஒருவர் இடை மறித்து, ‘சார் நான் விசாரித்தேன். இந்தப் பிரச்சினை தீரவேண்டுமானால் இப்போதுள்ள மின்சாரத் துறை அமைச்சரை பார்த்தால் போதுமென்று எனக்குத் தெரிந்தவர் சொன்னார்..’ என்றார்.

‘இல்லை. அப்படியெல்லாம் நாம் போகக் கூடாது. அங்கே போனால் பிறகு திரும்ப வர முடியாது. கட்டைப் பஞ்சாயத்து நடத்தி காரியமும் முடியாமல் பணத்தையும் சொத்தையும் இழக்க வேண்டி வரும். அதனால் வேண்டாம்..’ என்றேன்.

தீவிரமாய் யோசித்தபடியே, ‘நமக்கும் நமது சொத்துக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அரசு என்பது அரசியல்வாதிகளுடையதல்ல அரசு அதிகாரிகளுடையது. அந்த அரசும் நம்மைக் காக்க வில்லையென்றால் அதற்கும் மேலே நீதி கிடைக்க நீதி மன்றங்கள் இருக்கிறது.’ என்று சொல்லி முடித்தேன்.

எனது குரலில் தெரிந்த தீர்க்கம் என்னுடன் இருந்தவர்களை உற்சாகப்படுத்தியது. அன்று வீடுதிரும்பிய ஒவ்வொருவருக்கும் தங்கள் மனைவிமார்களிடம் சொல்ல ஒரு உற்சாகமான கதை இருந்தது.”

தன்னையறியாமலேயே உற்சாகமான மன நிலைக்குச் சென்றிருந்தார் எனது நண்பர்.

அவரது திட்டங்களையும் அதை அவர் செயல் படுத்திய முறைகளையும் தொடர்ந்து கேட்க ஆவலாய் இருந்தேன்.

YES,  FAITH NEVER LETS YOU DOWN.

அவர் தொடர்ந்தது அடுத்த பதிவில்.

இதைத் தொடர:  தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IV
அன்பன்

வேதாந்தி.

 

 

Thursday, July 23, 2015

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II


23.7.15

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II
 

இது வரை எனது நண்பர் சொன்னதைக் கேட்டு எனக்கு ‘திக்’ கென்றது. சென்னையில் ஒரு சொத்து வாங்குவதென்பது என்ன அத்துனை சாதாரண காரியமா? அதுவும் நேர்மையான தனது வாழ்நாள் உழைப்பின் சேமிப்பைக் கொட்டி வீடு வாங்கி அதில் இத்தனை கொடிய சிக்கலா?

எனது நண்பர் தொடர்ந்தார்.

“நான் இந்த வேலையில் இறங்குவதற்கு முன்னரே இப்படி ஏதேனும் நடக்கலாம் என்று தெரிந்தே நம்பிக்கைக்குரிய இருவரிடம், ‘இதோ பாருங்க நான் வயதானவன். என்னால் அலைய முடியாது. நீங்கள் கடைசிவரை ஒத்துழைப்பீர்களென்றால் இதில் இறங்குகிறேன் இல்லையென்றால் நான் தனியே என் பிரச்சினையை சமாளிக்கும் வழி தேடிக்கொள்கிறேன்’ என்றேன். அதற்கு அவர்கள், ‘சார் எங்களை நம்புங்கள். நாங்கள் கடைசிவரை உங்களுடன் இருக்கிறோம். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் உங்களுக்கு ஒத்துழைக்கிறோம். அலைவதைப்பற்றி கவலை வேண்டாம். என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள் செய்கிறோம்’, எனச் சொல்லியிருந்தனர்.

இப்படி நாங்கள் ஒன்று சேர்ந்துவிட்டோம் எனத் தெரிந்ததும் விற்பனையாளர், நாங்கள் குழுவாய்ச் சேர்ந்து கொண்டு அவரை தொல்லைப்படுத்துவதாகவும் காரை வீட்டின் முன் நிறுத்தி அடாவடி செய்வதாகவும் ஏற்கனவே எங்கள் மீது தனித்தனியாக வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் அறிவிக்கை நீதிமன்றத்திலிருந்து வந்ததுமே எங்கள் ஒற்றுமை புகைய ஆரம்பித்தது. சொல்லிவிட்டோமே என்று பல்லைக் கடித்துக் கொண்டிருந்தனர். இப்போது இந்த குண்டர்களை பார்த்ததும் எல்லோரும் தாங்கள் எடுத்த முடிவு சரியானதுதானா என மனச் சஞ்சலம் கொண்டனர்.

இந்த நிலைக்கு மற்றொரு காரணமும் இருந்தது. அனுபவமின்மையால் நேருக்கு நேர் சண்டை போட்டு எதிரியை  பணியவைத்தாலொழிய ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண இயலாது என்று அவர்கள் நம்பியதும் ஒரு காரணம்.

ஆனால் பிரச்சினை இத்தனை தீவிரமடையும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

அடியாட்களைப் பார்த்ததும் உள்ளுக்குள் எல்லோரும் கலங்கிப்போனோம். அதுவரை இந்தப் பிரச்சினையை முடித்துவிடலாம் என நினைத்து ஒன்று சேர்ந்தவர்கள் இப்போது இதை விட்டு எப்படி விலகலாம் என்று தனித்தனியே யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

 
கட்சிக்காரன் அன்றே தான் புதிதாய் வாங்கிய கீழ்வீட்டில் ஒரு பதினைந்து பேருக்கு குடியோடு பார்ட்டி வைத்தான். இரவு முழுக்க ஒரே சத்தம் சிரிப்பு. ‘எவனாயிருந்தாலும் போட்டுத் தள்ளிட வேண்டியதுதான்’ என்று பெருங்கூச்சலிட்டு கொக்கரித்துக் கொண்டிருந்தனர். இதனையெல்லாம் விற்பனையாளர் மிகுந்த மகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

அடுத்த நாளே இது குறித்து காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தோம். அந்தப் புகாரில் விற்பனையாளரையும் சேர்த்திருந்தோம். அன்றுதான் என் வாழ்நாளில் முதன் முறையாக காவல் நிலையத்தின் படியை மிதித்தேன். அன்று இரவு முழுதும் தூக்கம் வரவில்லை. இது மிகவும் சிக்கலானதைப்போல் தோன்றியது. வீட்டை விற்றுவிடத் துணிந்தாலும் மற்ற யாரையும் வாங்குவதற்கு அந்த ரவுடி விடமாட்டன் என்பது தெளிவாகத் தெரிந்தது. எங்கள் தெருவிலேயே பத்து குடியிருப்புகள் தள்ளி ரிலையன்ஸ் பிரஷ் வந்திருந்ததனாலும் எங்கள் குடியிருப்பை ஒட்டிய சாலை 70 அடி சாலை என்பதாலும் எங்கள் குடியிருப்பின் 10 வீடுகளையும் வாங்கிவிட்டால் நல்ல லாபத்திற்கு விற்று விடலாம் என கணக்குப் போட்டு கட்சிக்காரன் உள் நுழைந்து விட்டான் போலிருக்கிறது. உருட்டி மிரட்டியே எங்களை வெளியேற்றிவிடலாம் என சரியாக திட்டம் போட்டிருக்கிறான்.

அதுவும் ஒரு வகையில் நிறைவேறியது. எங்கள் கீழ்த்தள குடியிருப்பில் இருக்கும் ஒருவர், சுந்தரம் குழுமத்திலிருந்து (TVS Group) M.D ஆக ஓய்வு பெற்றவர், தனது வீட்டை விற்கும் முயற்சியில் இறங்கினார். இதைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தோம். அவரைச் சந்தித்து பேசுகையில், “நான் பெங்களூரிலிருக்கும் என் பிள்ளையுடன் போய் செட்டிலாகப் போகிறேன். அதனால் தான் இந்த வீட்டை விற்கிறேன்..” என்று மழுப்பினார். சென்னையில் இருப்பவர்க்கு வீட்டை விற்றால் வில்லங்கம் இருப்பது தெரிந்துவிடும் என்று மதுரை TVS ல் சொல்லி வைத்து அன்றைய விலைக்கு அந்த மதுரைக்காரரிடம் விற்றுவிட்டார். கடைசியில் அவர் பெங்களூருக்கெல்லாம் போகவில்லை. எங்களுக்கு நாலாவது தெருவில் இருந்த ஒரு வீட்டை வாங்கி அண்ணாநகரிலேயே இருக்கிறார்.

என்ன செய்வதெனப் புரியாது நாட்கள் சங்கடத்துடன் கழிந்தன.

கட்சிக்காரன் மொட்டை மாடியையும் பூட்டி தண்ணீர்த் தொட்டியையும் தன் வசம் வைத்துக் கொண்டான். ஒரு தீபாவளியன்று தண்ணீர்க்குழாயை மூடிவிட்டு, மொட்டை மாடியையும் பூட்டிவிட்டு இரண்டுநாட்கள் வெளியே சென்றுவிட்டான். குளிக்கத் தண்ணீரில்லாமல் அவதிப்பட்டோம்.

அந்த அடவடி கட்சிக்காரன் கீழ் வீட்டில் குடியிருந்ததால் போவோர் வருவோரையெல்லாம் வம்புக்கு இழுத்தான். அதிலும் அவன் வெளி வருவதில்லை. அவன் வாசலிலேயே நின்று சிரித்துக் கொண்டு பார்க்க, படத்தில் வரும் காஞ்சனா போல் அவனது மனைவி தனது புடவையை முழங்காலுக்கு மேல் அள்ளித் தூக்கிவைத்துக் கொண்டு ஜங்கு ஜங்கு என குதித்து , ‘வாடா, வாடா..” என்று எல்லோரையும் வம்புக்கு இழுத்தாள். அந்த மாதிரியான சமயங்களில் நான் அனைவரையும் அமைதி காக்கச் சொன்னேன். இதனாலேயே அவர்களுக்கு என் மேல் நம்பிக்கை போய்விட்டது.
 

“பொறுமையாய் இருங்கள். இதில் ஏதோ சூது இருக்கிறது”, என்று சொல்லிவந்தேன். அதே போலவே அந்த கட்சிக்காரனின் மனைவி எங்கள் குடியிருப்பில் இருக்கும் நான்குபேர் (என் உள்பட) தன்னை இரவு 11 மணிக்கு வீடு புகுந்து மான பங்கப் படுத்திவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாள். இதில் என்ன வேதனை என்றால் அவள் குறிப்பிட்டிருந்த அத்தனைபேரும் 65 – 75 வயதிற்குட்பட்டவர்கள்.

 
 
புகாரை பெற்றுக் கொண்ட காவல் நிலையத்தார் எங்களை எங்களது குடியிருப்புக்கு வந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். எங்களுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. எங்களது மனைவியர், ‘வீடு எதற்கு? நிம்மதியாய் வாழத்தானே.. நிம்மதி போனதற்கப்புறம் வீடு இருந்தென்ன போயென்ன’ என பேச ஆரம்பித்து விட்டனர். அவர்கள் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் ‘எந்த நேரத்தில் இந்த ஓநாய்கள் அத்துமீறி நம் வீட்டுக்குள் நுழைந்து விடுவார்களோ’ என்ற பயம் அவர்களது கண்களில் தெரிந்தது. குடும்பத்தின் பாதுகாப்பைப் பற்றிய பயம் அவர்களது குரலில் தெளிவாய்ப் புலப்பட்டது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போவது நிதரிசனமாய்த் தெரிந்தது.”

இது வரை பேசிய நண்பர் சற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.

அவர் மிகப் பெரிய சிக்கலில் வீழ்ந்து மீண்டிருக்கிறார் என்பது அவர் முகத்தைப் பார்க்கும்போதே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அமைதியாய் நண்பர் தொடர காத்திருந்தேன்.

நண்பர் தொடர்ந்தது அடுத்த பதிவில்.

தொடர:   தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III

அன்பன்,

வேதாந்தி.

 

Tuesday, July 21, 2015

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I


21.7.15

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I




இது சென்னை அண்ணா நகரில் வசிக்கும் எனது நண்பரது சமீபத்தைய சொந்த அனுபவம்.

அவர் சென்ற மாதம் என்னைப் பார்க்க வந்திருந்தபோது அரசியலைப் பற்றியும் வரும் தேர்தல் எதிர்பார்ப்புகளைப் பற்றியும் பேச்சு திரும்பியது. அப்போதுதான் சொன்னார்.

“இந்த கட்சிக் காரர்களின் அராஜகம் தாங்க முடியவில்லை. படித்தவர்கள் அமைதியாய் இருப்பதை இயலாமையின் அடையாளமாய் எடுத்துக் கொள்கிறார்கள். அடித்துப் பறிக்கும் வேலையை கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல் அநியாயத்திற்குச் செய்கிறார்கள்,” என்று அங்கலாய்த்துவிட்டு சொல்லத் தொடங்கினார்.

“இது எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஒரு நிகழ்வு. எங்களது அடுக்கு மாடி 35 வருட பழமையானது. அந்த குடியிருப்பு கட்டும்போது அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுவதற்கு CMDA போடும் நிபந்தனைகளாக கார் நிறுத்துவதற்கான இடம் (car parking) கட்டாயமாக்கப்படாத காலம்.

குடியிருப்பின் விற்பனையாளரும் அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் 3 வீடுகள் வைத்திருந்தார். அவர் ஒரு காரும் வைத்திருந்தார். குடியிருப்பின் விற்பனையாளர் (Promoter) மூன்று வீடுகள் வைத்திருந்ததாலும் குடியிருப்பில் மொத்தம் 10 வீடுகள் மட்டுமே இருந்ததாலும் குடியிருப்புச் சங்கம் ஒன்று ஏற்படுத்தப் படவில்லை. எல்லாமே அவரது ராஜ்ஜியம்தான். அனைவரையும் மிரட்டி பராமரிப்புக்காக அவர் நிர்ணயித்த தொகையை வசூலிப்பதிலிருந்து, கணக்கை காட்டாமல் தவிர்ப்பது மற்றும் குடியிருப்பின் பொது இடத்தை அவர் ஆக்கிரமிப்பு செய்து கொள்வது போன்ற பல செயல் களில் இறங்கி இருந்தார்.

நான் அந்தக் குடியிருப்பில் எட்டு வருடங்களுக்கு முன்னர்தான் ஒரு வீடு (second sales) வாங்கி இடம் பெயர்ந்திருந்தேன். எனது வீட்டின் முதல் உரிமையாளர் அமெரிக்காவிற்கு நிலையாய் குடிபெயர்ந்து விட்டாதால் வீட்டை என்னிடம் விற்று விட்டார். என்னுடன் மற்றுமொரு புதியவரும் வீடு வாங்கியிருந்தார். மற்றையோர் எல்லாம் முதல் உரிமையாளர்கள்.

நான் அங்கு குடி பெயர்ந்ததிலிருந்தே அந்த விற்பனையாளரது நடவடிக்கைகளை கவனித்து வந்தேன். ஆனாலும் அனைவரும்  அமைதியாய் இருக்கையில் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவரது அராஜகம் எல்லை மீறியது. குடியிருப்பைச் சுற்றியுள்ள பொது இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார். அவரது வீடு ஒன்று தரைத் தளத்தில் இருந்தது. அது சாலையை ஒட்டி இருந்த வீடாகையால் அதை ஒட்டி இருந்த பொது காலியிடத்தை ஆக்கிரமித்துக் கொண்டார். மற்ற யாரையும் அங்கு புழங்க விடவில்லை.

இப்படி இருக்கையில் என்னுடன் வீடு வாங்கிய புதியவர் கார் ஒன்றை வாங்கினார். அதை நிறுத்துவதற்கு இடமில்லாததாகையால் விற்பனையாளர் ஆக்கிரமித்திருந்த இடத்தில் நிறுத்தினார். உடனே அதை விற்பனையாளர் ஆட்சேபிக்க, பெரும் பிரச்சினையாகிப் போனது. அந்தக் பொதுவிலான காலியிடத்தை யார் உபயோகிப்பது என்பதில் பிரச்சினை.

விற்பனையாளர் ‘எனக்கு மூன்று வீடுகள் இருக்கின்றன. மேலும் உங்களை விட எனக்குத்தான் பகுபடாத பங்கு அதிகமாக இருக்கிறது. எனவே இதை நான் தான் உபயோகப் படுத்துவேன்’ என்று வாதிட்டார். பிரச்சினை அடிதடி அளவுக்குப் போனது.

இந்த நிலையில்தான் புதிதாய் வந்தவர் என்னிடம் வந்து பேசினார். ஏதாவது செய்யவேண்டுமென்று சொன்னார். இது உங்கள் கருத்து மட்டும்தானா இல்லை மற்றவர்களும் இதையே விரும்புகிறார்களா என்றேன். இல்லைசார் எல்லோரும் இதைத்தான் விரும்புகிறார்கள் என்றார்.

உடனே நாங்கள் மூன்று பேர் உடன் சேர்ந்து திட்டமிட்டோம். உடனடியாக பராமரிப்புக்கான பணத்தை அந்த விற்பனையாளரிடம் தருவதை நிறுத்தினோம். எங்கள் குடியிருப்பில் இருக்கும் 10 வீடுகளுக்கும் Copy of the Document கேட்டு அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். அதில் 7 வீடுகளுக்கு மட்டும் பத்திரப் பதிவு நடந்திருந்தது தெரிந்தது. மீதி 3 வீடுகள் விற்பனையாளரே வைத்திருந்ததனால் அந்த வீடுகளுக்கு பத்திரங்களே உருவாக்கப் படவில்லை.

இந்தப் பிரச்சினை உருவானது 2006 ல். அதற்குப் பிறகு காவல் நிலையத்திற்கு சென்று புகார்களை கொடுத்தோம். விற்பனையாளருக்கு பல விதங்களிலும் தொல்லை வந்ததால் விற்பனையாளர் மனம் வெறுத்துப் போனார்.

அதே நேரத்தில் நாங்கள் வழக்கறிஞர்களின் உதவியையும் நாடினோம். தி. நகரிலுள்ள Rank Associates என்ற பிரபலமான வழக்கறிஞர்களின் குழுமம் அப்போது வழக்கமாக தி ஹிந்து நாளேட்டில் சனிக்கிழமை தோறும் ரியல் எஸ்டேட் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தது. அந்தக் குழுமத்தின் சட்ட ஆலோசனையைப் பெற்றோம்.

எங்களது பத்திரங்களை ஆராய்ந்த அந்தக் குழுமம் இந்தப் பிரச்சினை முடியவேண்டுமென்றால் உரூபாய் ஒரு கோடி செலவாகும் என்றார்.

நாங்கள் இதைக் கேட்டு விக்கித்துப் போனோம்.

வழக்கறிஞரை பார்த்து விட்டு வந்தபோது எங்களது குடியிருப்பில் மோட்டாவான வெளியாட்கள் ஒரு பதினைந்து பேர் சினிமாவில் வரும் வில்லன்களின் அடியாட்களைப்போல எங்களுக்காக காத்திருந்தனர்.

 
நாங்கள் வந்தவுடன், “உங்களைத்தாங்க பார்க்க காத்திருக்கிறோம். இப்போ இருக்கிற கரண்ட் ரேட்ல உங்க வீடுகளை வாங்க ரெடியா இருக்கிறோம். இந்தாங்க கார்டு. போன் பண்ணா உடனே வந்துடுவோம். இம்மீடியட் செட்டில்மெண்ட். ரொம்ப யோசிக்காதீங்க..” என்றனர்.

அதற்குப்பிறகுதான் தெரிந்தது, எங்கள் குடியிருப்பின் விற்பனையாளர் எங்களது தொல்லை தாளாமல் அவரது மூன்று வீடுகளையும் அப்போது ஆளுகையில் இருந்த ஒரு கட்சிக் காரனிடம் விற்றுவிட்டார் என்று. அந்த கட்சிக்காரன் எங்கள் வீட்டையும் விலைக்கு கேட்டு மிரட்டல் விட்டான்.

வழக்கறிஞர் சொன்னது, ரவுடிகள் மிரட்டினது எல்லாமாய்ச் சேர்ந்து எங்கள் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு கலங்கிப்போய் நின்றோம்.”

நண்பர் தொடர்ந்தது அடுத்து வரும் பதிவில்.

தொடர: தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II

அன்பன்,

வேதாந்தி.

 
Related Posts Plugin for WordPress, Blogger...