Followers

Wednesday, October 29, 2014

வெறும் கட்டியா அல்லது கேன்சரா?





29.10.14


வெறும் கட்டியா அல்லது கேன்சரா?


அற்புதங்களும் அற்புத மனிதர்களும் - 2


 
நண்பர் தொடர்ந்தார். “நானும் எனது மனைவியும் வெளியில் மழை கொட்டிக்கொண்டிருக்க வேகமாகச் சென்றுகொண்டிருந்த ஆம்புலன்சில் எதிரெதிரே உட்கார்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஹாஸ்பிடல் வந்து சேரும் வரை மௌனமாகவே பயணத்தை முடித்தோம். வழியெல்லாம் அவள் ஜெபம் செய்தபடி வந்தது எனக்குப் புரிந்தது.

வாசலில் வந்து நின்ற ஆம்புலன்சைக் கண்டதும் ஹாஸ்பிடல் பாய்ஸ் வீல் சேரை தள்ளிக் கொண்டு வந்தனர். நான் எவ்வளவோ மறுத்தும் வீல் சேரில் அமர்த்தி நகர்த்திக் கொண்டு உள்ளே சென்றனர். ஆம்புலன்ஸ் டிரைவர் வரவேற்பாளரிடம் டாக்டர் கிருஷ்ண குமார் கொடுத்த கடிதத்தை கொடுத்தார். உடனே என்னைச் சுற்றி இரண்டு செவிலியர்கள். என்னை அங்கிருந்த ஒரு படுக்கையில் படுக்கவைத்தனர். உடனடியாக எனக்குச் சொல்லியிருந்த பரிசோதனைகளை எடுக்க ஆரம்பித்தனர். எனக்குச் சற்று கலவரமாகியது. என் மனைவி வரவேற்பாளரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அதற்குள் எனது உடைகளை கழற்றி மருத்துவ மனை உடையை அணியச் செய்தனர். இரத்த மாதிரிகள் எடுத்தனர். இதயத் துடிப்பை அளக்கும் கருவியை எனக்குப் பொருத்தினர்.

சற்று நேரம் கழித்து என்னிடம் வந்த என் மனைவி, ‘டாக்டர் அறுவைச் சிகிச்சைக்கு உங்களை தயார் செய்யத் தேவையான மருத்துவ சோதனைகளை உங்களுக்குச் செய்யச் சொல்லியிருக்கிறார். அனஸ்தடிசியனுக்கும் நியூரோ சர்ஜனுக்கும் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்கிறாராம் கிடைத்துவிட்டால் காலை ஆறு மணிக்கே ஆபரேஷன் ஃபிக்ஸ் பண்ணச் சொல்லியிருக்கிறாரம். ஆபரேஷன் தியேட்டரையும் காலை ஆறு மணிக்கே தயாராக இருக்கும் படிக்கு வைக்கச் சொல்லியிருக்கிறார். அனேகமாக இன்னும் இரண்டு மணி நேரத்தில் நமக்கு ஒரு அறை கிடைக்கலாம். மற்றபடி எந்த ஒரு செய்தியையும் தன்னைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் படி அறிவுறுத்தியிருக்கிறார்..’ என்று சொன்னாள்.

ஒரு அரை மணி நேரத்திற்குள் எங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டது. அதற்குப் பின்னர் ஆம்புலன்ஸ் டிரைவர் எங்களிடம் வந்து, “உங்களுக்கு சாப்பிட வேண்டுமென்றால் கேண்டீனில் அறை எண்ணைச் சொல்லி சாப்பிட்டுக் கொள்ளுங்கள். காலையில் டாக்டர் வந்து உங்களைச் சந்திப்பார். இதைத் தவிர உங்களுக்கு வேறேதேனும் வேண்டுமா?” எனக்கேட்டு எங்களுக்கு ஏதும் தேவைப்படாது என்பதை உறுதி செய்தபின்னரே விடை பெற்றுச் சென்றார்.


அன்றிரவு எனக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. என் மனைவியும் தனக்கு ஒன்றும் வேண்டாமென்றாள். அவள் பட்டினி கிடக்கக் கூடாதென்பதால் நான் இரண்டு இட்டிலிகள் வாங்கிவரச் சொன்னேன். அவளுக்கும் இரண்டு இட்டிலிகள். இரவை நகர்த்துவது கடினமாயிருந்தது.

எத்தனை நேரம் யோசித்தபடி விழித்திருந்தோமோ தெரியவில்லை. அப்போதுதான் அயர்ந்தோம். காலை அய்ந்து மணிக்கு செவிலியர் வந்து எங்களை எழுப்பினார். கூடவே ஒரு ஆண் செவிலியரும் வந்தார். அறுவைச் சிகிச்சை தாடையில் என்பதால் மழிக்கவேண்டும் என்றார். கலக்கத்தோடு அமர்ந்து முகத்தைக் காட்டினேன்.

மட மடவென குளித்துவிட்டு மருத்துவமனை உடைக்கு மாறினேன். Stretcher ல் படுக்க வைத்து ஆபரேஷன் தியேட்டருக்கு தள்ளிக் கொண்டு சென்றனர். அங்கு தியேட்டரின் இன்னொரு பகுதியில் டாக்டர்கள் மூவரும் டிஸ்கஷனில் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. செவிலியர் என்னை அதே இடத்தில் இருத்திவிட்டு உள்ளே சென்றார். முப்பது நிமிடங்கள் கழிந்திருக்கும் பின் செவிலியரும் ஒரு டாக்டரும் வந்தனர். வந்தவர் சிரித்துக் கொண்டே என் பெயர் என்னவென்று கேட்டுக்கொண்டே செவிலியருக்கு சைகை காட்ட செவிலியர் எனது இடது கையில் vein ஐ தேடி  I V tube ஐ சொருகினார். பின்னர் சலைன் பாட்டிலில் ஒரு ஊசியை சொருகி மருந்தைச் செலுத்தினார். டாக்டர் என்னைப் பார்த்து “will you count, please..” என்றவுடன் நான், ஒன்று, இரண்டு, மூன்று என்ற போதே Black out  ஆகி விட்டது. நினைவு தப்பினேன்.

அவ்வளவுதான்.

அடுத்து நான் கண் விழித்தது மூன்று மணி நேரம் கழித்துத்தான். கண்ணாடிக் கதவுக்கு வெளியே என் மனைவி கலக்கத்துடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. சுத்தமாக நினைவு திரும்பி ஆபரேஷன் தியேட்டரை விட்டு அறைக்கு வரும்போது மணி இரண்டாகி இருந்தது.

தாடையில் பெரிய கட்டு. தாடையை பெரிதாய் அசைக்க முடியவில்லை. அன்றைய பொழுது சலைன் பாட்டிலோடு ஓடியது.

மறுநாள் காலை என்னை வீல் சேரில் வைத்து டாக்டர் இருந்த இன்னோரு கட்டிடத்திற்கு என்னை தள்ளிச் சென்றனர். சிரித்த முகத்தோடு என்னை வரவேற்றவர், “ How do you feel now?” என்றார். மெதுவாக சிரித்துக் கொண்டே தலையாட்டினேன். கட்டை அவிழ்த்து தாடையில் அறுவைச் சிகிச்சை செய்த இடத்தை பரிசோதித்தவர் தாடையை அசைக்கச் சொன்னார். பின்னர் முகத்தை சாடை காட்டும் பாணியில் முகத் தசைகளை அசைக்கச் சொன்னார். பின்னர் அங்கிருந்த பயிற்சி டாக்டரிடம், purging done. facial nerve intact ..என்றபடி ஏதேதோ சொல்ல அந்த பயிற்சி டாக்டர் குறிப்பெடுத்துக் கொண்டார். அதற்குப் பின் தாடையில் சிறியதொரு கட்டைப் போட்டு அறைக்கு அனுப்பி வைத்தார்.


என்னை அறைக்கு கொண்டு வந்து சேர்த்த செவிலியர்,  சாப்பாடு வேண்டுமென்றால் கேண்டீனில் வாங்கி சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். என் நிலையைப் பார்த்து என் மனைவி சாப்பாட்டுடன் ரசம் கலந்து கேண்டீனில் மிக்சியில் அடித்துக் கொண்டு வந்தாள். ஒவ்வொரு ஸ்பூனாய் சாப்பாட்டை உள்ளே தள்ளினேன். டாக்டரின் குறிப்புப் படி செவிலியர் நேரத்திற்கு வந்து மருந்து கொடுத்து ஊசி போட்டுச் சென்றார்.

இப்படியே அடுத்த நாளும் கடந்தது.

ஆபரேஷன் முடிந்து மூன்றாம் நாள்.

டாக்டர் formal check up க்குப் பிறகு, ‘நாளை நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகலாம். நான் எழுதிக் கொடுக்கும் மருந்தை தினமு உங்கள் அருகில் உள்ள டாக்டரிடம் கொடுத்து முப்பது நாட்களுக்கு ஊசி போட்டுக் கொள்ளுங்கள். என்னை அடுத்த வாரம் அடையாரில் வந்து பாருங்கள்.’ என்றார்.

எனது மைத்துனர் அன்றுதான் என்னை வந்து பார்த்தார். வெளியூரில் இருந்ததால் தாமதம். மருத்துவமனை பில்லை செட்டில் செய்ய வேண்டியிருந்தது. மொத்த பில் என்பதாயிரத்துச் சொச்சம். எனது மைத்துனர்தான் தன்னிடம் இருந்த credit card மூலமாக செலுத்தினார். என் மனைவி கையிலும் கொஞ்சம் பணம் கொடுத்துச் சென்றார்.

பில்லை செட்டில் செய்யும் போதுதான் தெரிய வந்தது. அந்த மருத்துவமனையில் குறைந்தது அய்ம்பதாயிரமாவது முன் பணம் கட்டினாலொழிய அட்மிட் செய்ய மாட்டார்களாம். டாக்டர் கிருஷ்ணகுமார் தனது சொந்த சிபாரிசிலேயே அட்மிஷன் நடந்து மற்ற சோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது. இத்தனைக்கும் எங்களை அவருக்கு பரிச்சயமில்லை. அது மட்டுமல்ல. மருத்துவ மனைச் செலவுகளை கட்டி முடிக்க எங்களுக்கு சக்தி இருக்கிறதா இல்லையா என்பதும் தெரியாது. எங்கள் பேச்சிலிருந்து நாங்கள் படித்தவர்கள் என ஒருவேளை யூகித்திருக்கலாம். அவ்வளவே. அவர் எங்களுக்குச் செய்த உதவி எத்துனை பெரிது!

அடுத்த நாள் டிஸ்சார்ஜ் ஆக தயாராகினோம்.

டிஸ்சார்ஜ் ஆக மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. என் மனைவி call taxi க்கு book செய்து பயணத்திற்கு தயாரானோம். Call taxi யில் ஏறி வீடு வந்து சேரும் வரை நாங்கள் மௌனமாகவே வந்தோம். வீடு வந்து சேர்ந்ததும் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, எல்லாம் ஏதோ கனவு போல் இருந்தது. என் மனைவி முழங்காலிட்டு ஜெபம் பண்ணத் தொடங்கினாள். நான் மௌனாமாக கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

எனது நிலையின் அசுரத் தன்மையே நான் அடுத்த வாரம் டாக்டர் கிருஷ்ணகுமாரை அடையாரில் சந்தித்தபோதுதான் புரிந்தது.

எங்களை வரவேற்ற டாக்டர் தன் கையிலிருந்த லேப் ரிப்போர்டுகளைக் காட்டி பேசத்தொடங்கினார்.

“நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். லேப் ரிப்போர்ட் உங்களது கட்டி கேன்சர் கட்டி இல்லையென்று சொல்கிறது. நான் நீங்கள் என்னை சந்தித்த போது கட்டி வலிக்க வில்லை என்று சொன்னபோதே கட்டி கேன்சராய் இருக்குமோ என சந்தேகப் பட்டேன். ஆனால் உங்களை தொடர்ந்து சந்திக்க முடியாததால் சிகிச்சையை தொடர முடியவில்லை. உங்களை அடையாரில் மறுபடியும் சந்தித்த போது கட்டி மிகவும் மோசமாக infection ஆகி இருந்தது. நின நீர் சுரப்பி அருகில் இருந்ததால் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வில்லையென்றால் தொற்று மூளைக்கு சடுதியில் பரவி விடக்கூடிய அபாயம் இருந்தது. அதனால் தான் உங்களை அன்றே மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்து அறுவை சிகிச்சை செய்து முடிக்க வேண்டியிருந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பின் மாதிரியை biopsy க்கு அனுப்பி வைத்திருந்தேன். அதனுடைய ரிசல்ட்தான் இது. Tumor is not malignant. எனவே நீங்கள் இனி கவலைப் படவேண்டாம். அது மட்டுமல்ல. நானும் நீயூரோ சர்ஜனும் அறுவை சிகிச்சைக்கு முன்னர் கலந்து பேசி முகத்தில் வடு வராமல் இருக்க incision செய்யாமல் கட்டியை purge செய்து விட்டோம். இப்போது ஒரு சிறிய புள்ளிதான் உங்கள் தாடையில் இருக்கும். இந்தக் காயம் ஆறும் வரை முகச் சவரம் செய்யும் போது சற்று கவனமாக இருங்கள்…” என்றார்.

டாக்டர் சொல்லச் சொல்லத்தான் எங்களது நிலைமையின் அசுரத்தனமும், சமயத்தில் கிடைத்த உதவியின் தெய்வாதீனமும் புரிந்தது. எங்களுக்கு கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. கையெடுத்துக் கும்பிட்டோம். என் மனைவி அடக்க மாட்டாது தேம்பினாள்.

எத்தகைய ஆபத்திலிருந்து ஆண்டவர் எங்களைக் காப்பாற்றியிருக்கிறார்!

எல்லா டாக்டர்களும் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொழில் செய்கின்றனர் என்கின்ற எனது அபிப்ராயம் அன்று மாறியது.


அது மட்டுமல்ல எதுவுமே என் மனைவிக்குத் தெரியாது. அவள் பெண் என்பதால் அவளுக்கு அனுபவமும் முதிர்ச்சியும் போதாது என்கிற இன்னுமொரு அபிப்ராயமும் மாறியது. எனது மனைவி ஆம்புலன்சில் என்னை ஏற்றி அமர வைத்ததிலிருந்து கால் டாக்சி பிடித்து வீடு வந்து சேரும் வரை என்னை ஒரு குழந்தை போல் பாவித்து பாதுகாத்து எல்லாச் சேவைகளையும் செய்து, கவுன்டரில் பில்லை செக் செய்து, இன்சூரன்ஸ் பற்றி வினவி அனைத்து முடிவுகளையும் எடுத்து, படுக்கைக்கு அருகிலேயே அடைகாக்கும் கோழி போல தூங்காமல் எனது ஒவ்வொரு தேவையையும் உணர்ந்து… அடாடா…It is such a beautiful thing to think over it again and again. She was so over protective and a definite decision maker. I was happy to see that. That has brought me an unfathomable peace to know that she is definitely a good decision maker to depend on.

என் வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவத்தைச் சொன்னாலும் நம்புவாரில்லை. ஊழலுக்கு பேர் போன எனது அலுவலகத்தில் அதற்கு எதிரான என்னை ‘பிழைக்கத் தெரியாதவன், நாளைக்கு காசில்லாமல் பட்டாத்தான் தெரியும்’ என்று பேசித் திரிந்தவர்களிடையே தன்னைச் சேர்ந்தவரை கைவிடமாட்டார் கடவுள் என்பதற்கு சாட்சியாக இன்றளவும் நான் இருக்கிறேன்..”

 

நண்பரின் நீண்ட பேச்சு என் சிந்தனையை மட்டுமல்ல கடவுளின் அற்புதத்தையும் அற்புத மனிதர்களின் இருப்பையும் நினைத்து கண்களில் கண்ணீரையும் கசியவிட்டது.

 

இன்னமும் பேசுவோம்.

 

அன்பன்,

வேதாந்தி.

 

 

Saturday, October 25, 2014

அற்புதங்களும் அற்புத மனிதர்களும்.


25.10.14

அற்புதங்களும் அற்புத மனிதர்களும்.-1



நான், நமக்குப் புரியாத சில செய்திகளையும் நம் சூழல் நமக்குச் சொல்லும் சில அடையாளங்களையும் பற்றி பேசியிருக்கிறேன்.

எனது நண்பர், சென்னை வாசி, என்னிடம் பகிர்ந்துகொண்ட இந்தச் செய்தி உண்மையாலுமே என்னை யோசிக்க வைத்தது. நாம் சில முடிவுகளை எடுப்பதற்கு நமக்கு கிடைத்த அனுபவங்களே போதும் என்கிற சித்தாந்தத்தை கேள்விக்குள்ளாக்கியது மட்டுமல்லாது நமக்கு ஒரு உதவி தேவைப்படும் போது வெறும் உண்மையை மட்டுமே நம்பியிருப்போருக்கு உதவி எத்திசையிலிருந்தும் வரும் எனக் காட்டியது எனது நண்பரது அனுபவம். அதை இன்றைய பேச்சாக அப்படியே அவரது வாய்மொழியில் கொடுத்துள்ளேன்.

“ சில நாட்களுக்கு முன் விஜய் tv யில் வந்த நீயா நானா TALK SHOW வில் தற்காலத்தில் இருக்கும் டாக்டர்களைப் பற்றியும் அவர்களது தொழில் தர்மத்தைப் பற்றியும் மக்களது பார்வையை விவாதப் பொருளாக வைத்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலார் டாக்டர்கள் பணத்தை மட்டுமே குறியாக வைத்து தங்கள் தொழிலை நடத்துவதாகவும், தொழில் தர்மத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை எனவும் பேச்சு நகர்ந்தது.

இது குறித்து எனக்கு நேர்ந்த அனுபவத்தை நான் சொல்லியாக வேண்டும். ஐந்து வருடங்களுக்கு முன் எனக்கு தாடையில் வலது காதின் கீழ் ஒரு கட்டியைப் போல வந்தது. அந்த இடத்தில் நினநீர் சுரப்பி (LYMPHATIC GLAND) இருப்பதால் அது நினநீர் சுரப்பியின் வீக்கம் என நினைத்து சாதாரணமாக இருந்து விட்டேன். நாட்கள் செல்லச் செல்ல கட்டி சற்று பெருக்கவே எனது மனைவி பயந்து விட்டாள். பின்னர் டாக்டரிடம் போய் காட்டியே ஆகவேண்டும் என வற்புறுத்தி அருகில் இருந்த SMF (Sundaram Medical Foundation) ல் appointment fix செய்து ஒரு ENT டாக்டரின் opinion பெறச்சென்றோம். நாங்கள் பார்த்தது Dr.  கிருஷ்ண குமார், ENT specialist. என்னை பரிசோதித்த டாக்டர் எல்லாச் சோதனைகளையும் எழுதித் தந்தார். ஏற்கனவெ நான் audiogram எடுத்திருந்ததனால் அது வேண்டாமே என்றேன். அதைக் கேட்டு டாக்டர் சிரித்துக் கொண்டார். மேலும் CT Scan எடுக்கவும் எழுதிக் கொடுத்தார்.

எனக்கு விருப்பமில்லையெனினும் என் மனைவியின் வற்புறுத்தலுக்காக வேண்டி அத்துனை சோதனைகளையும் செய்து முடித்தோம். கட்டி இருந்த இடத்தில் வலி இல்லாததால் நான் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என நினைத்தேன். ஆனால் டாக்டருடைய கருத்து வேறாக இருந்தது.


எனது மருத்துவ சோதனைகளது முடிவுகளைப் பார்த்த டாக்டர், “ இதை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விடலாம்” எனச் சொல்லி மறுபடியும் வந்து பாருங்கள் என்றார்.

அத்தோடு சரி. நான் என் மனைவி மீது கோபம் கொண்டு “ஒன்றுமில்லாததை பெரிதாக்குகிறாய். இது தானாகவே சரியாகிவிடும். அல்லது வேறேதேனும் மாத்திரை கொடுத்து சரி செய்யும் டாக்டரை பார்த்துக் கொள்ளலாம்” என்று இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

நாட்கள் நகர்ந்தன. நானும் அலுவலக வேலையில் மூழ்கிவிட்டேன். என் மனைவியும் பணிக்கு சென்று வந்தபடி இருந்தாள். ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. திடீரென ஒரு நாள் அந்த வீக்கம் இருந்த இடத்தில் வலிக்க ஆரம்பித்தது. நேரம் செல்லச் செல்ல வலி அதிகரிக்கவே டாக்டரை இன்று பார்த்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து எனது மனைவிக்கு தொலைபேசியில் நிலமையைத் தெரிவித்தேன். அப்போது நேரம் மதியம் இரண்டு மணி.

செய்தியைக் கேட்ட என் மனைவி பதறிப்போய் உடனே தொலைபேசியில் டாக்டரை தொடர்பு கொண்ட போது டாக்டர் கிருஷ்ண குமார் தற்போது SMF க்கு வருவதில்லை என்று தகவல் வந்தது. டாக்டர் கிருஷ்ண குமாருக்குத்தான் case history தெரியும் என்பதால் எங்களுக்கு வேறு டாக்டரை பார்க்க மனமில்லை. டாக்டர் கிருஷ்ண குமாரை ஒருவழியாக தேடிப் பிடித்ததில் அவர் அப்போது அடையாரில் ஒரு தனியார் மருத்துவ மனையில் பணியில் இருப்பது தெரிந்தது. உடனே என் மனைவி இது குறித்து எனக்கு தகவல் அளித்து அலுவலகத்திலிருந்து அப்படியே ஆட்டோ பிடித்து மருத்துவ மனைக்கு வரச்சொன்னாள். அது போலவே செய்தேன். என் மனைவியும்  அலுவலகத்திலிருந்து மருத்துவமனை வந்து சேர்ந்திருந்தாள்.

டாக்டருக்கு என் நிலைமை குறித்து அந்த மருத்துவ மனையின் வரவேற்பாளர் மூலமாக செய்தி சொன்னோம். வழக்கமாக மாலை 7.30 மணிக்கு வருபவர் அன்று என்னைக் குறித்த செய்தி கிடைத்ததும் மாலை 6.30 க்கே வந்து விட்டார். வந்தவர் என்னைச் சோதித்துப் பார்த்து உடனே அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார். நாங்கள் கலந்தாலோசித்து முடிவெடுக்க சிறிது நேரம் கேட்டோம். இங்கேயே வரவேற்பறையில் அமர்ந்து ஆலோசியுங்கள் என்றார்.

கையில் பணம் இல்லை. இருவரிடமும் ஒற்றை அய்ம்பது உரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்தது. பணம் இருப்பில் இருந்தாலும் எங்களிடம் டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட் வைத்துக் கொள்ளும் பழக்கமில்லை. பணம் எடுக்க வேண்டுமென்றாலும் அல்லது எங்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்யும் மனம் படைத்தோரை சந்திக்க வேண்டுமென்றாலும் எங்களுக்கு 24 மணி நேரம் தேவைப்பட்டது. இப்போதைக்கு வீட்டுக்கு வர  ஆட்டோ சார்ஜ் மட்டும்தான் கையிருப்பு. இதை எல்லாம் யோசித்தோம். அடுத்த நாள் மாலை மருத்துவ மனையில் அட்மிட் ஆகலாம் என முடிவெடுத்தோம்.

எங்களது முடிவை டாக்டரிடம் சொன்னோம். வலி உயிர் போகிறார்போல் இருந்தாலும் எங்களது தவிர்க்க முடியாத சூழலில் இந்த முடிவெடுக்க வேண்டியதாயிற்று.


எத்துனையோ நோயாளிகள் காத்திருந்த போதும் எங்களது முடிவை அமைதியாகக் கேட்டார் டாக்டர். என் மனைவி, “ டாக்டர், நாங்கள் இன்று வீடு சென்று தயாராகி நாளை வந்து அறுவைச் சிகிச்சைக்கு அட்மிட் ஆகிறோம்..” என்று டாக்டரிடம் கூற அதற்கு அவர்,

“என்னம்மா தயாராக வேண்டும்..”

“இல்லை.. துணி மணிகளை எடுத்துக் கொண்டு….”

“துணி மணிகளெல்லாம் வேண்டாமே..”

“இல்லை… பணம் ஏற்பாடு செய்து கொண்டு…”

“பணத்தைப் பற்றி இப்போது கவலை வேண்டாமே…”

“இல்லை.. நாங்கள் இங்கு வந்ததே யாருக்கும் தெரியாது.. எல்லோருக்கும் சொல்லிவிட்டு…

“அதை போன் பண்ணிச் சொல்லிவிடம்மா…

“இல்லை டாக்டர். நீங்கள் சொல்லும் குளோபல் மருத்துவமனை இங்கிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவு. அங்கு செல்ல ஆட்டோ சார்ஜ் கூட இப்போதைக்கு எங்களிடம் இல்லை…”

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாமம்மா..போன் போட்டுச் சொல்வதானால் வரவேற்பறையிலுள்ள போனை உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள்..”

“ஆபரேஷனுக்கு எவ்வளவாகுமெனத் தெரியவில்லை…”

“அதைப் பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள்…”

உரையாடல் நேரத்தைக் கடத்தக் கடத்த டாக்டர் மிகவும் கவலைப்பட்டார். ஒருவழியாக நாங்கள் சம்மதம் சொல்லித் தலையாட்டினோம். அதற்காகவே காத்திருந்ததைப் போல மருத்துவமனை வாசலில் நின்றிருந்த ஆம்புலன்சின் ஓட்டுனரை வரவழைத்தார். தனது லெட்டர் பேடில் ஏதேதோ எழுதினார். அதைக் கவரில் போட்டு ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் கொடுத்தவர்,

“இவர்களை பத்திரமாக ஹாஸ்பிடல் கொண்டு சேர்த்து அட்மிட் செய்து வரவேற்பாளரிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்து எல்லா பார்மாலிடீசையும் முடித்த பிறகு இவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் நீங்கள் கிளம்பி வரவேண்டும்” என்றார். அவருடைய ஒவ்வொரு செயலிலும் ஒரு அவசரமும் பதட்டமும் இருந்தது.

எங்களை மருத்துவமனை வாசலுக்கு வந்து ஆம்புலன்சில் ஏற்றி விட்டார்.

ஆம்புலன்சில் நானும் என் மனைவியும் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். வெளியே மழை கொட்டியது என் மனைவியின் முகத்தில் கலவரம். என்னையே பார்த்துக் கொண்டு வந்தாள். அவளது பார்வையும் ஆம்புலன்சின் வேகமும், வண்டியின் அசைவுகளுக்கு ஆடியபடி நாங்கள் ஒருவரை ஒருவர் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தாலும் எங்களிடையே இருந்த ஆயிரம் கேள்விகள் ஓலத்தை எழுப்பிக் கொண்டிருந்தது.


அந்தப் பயணம் நான் வாழ்வில் கொண்டிருந்த அபிப்பிராயங்களில் மிக முக்கியமான இரண்டை மாற்றியது.

அது என்னவென்று அடுத்த பேச்சில் பார்ப்போம். 

அன்பன்,

வேதாந்தி.

 இதன் தொடர்ச்சிக்கு: வெறும் கட்டியா அல்லது கேன்சரா?

 

 

 

Saturday, October 18, 2014

வந்ததும் வராததும். (அ) பப்பாளியும் பலாப் பழமும்.


18.10.14

வந்ததும் வராததும். (அ) பப்பாளியும் பலாப் பழமும்.
 

ஒரு சமயம் ஒரு அரசன் தன் அரசவையிலிருந்தோரை நோக்கி “ நான் நேற்று கனவில் ஒரு கனியைக் கண்டேன் அந்தக் கனி என்னவென்று யாராவது சொல்ல முடியுமா?”, எனக் கேட்டான். அவையிலிருந்த அனைவரும் என்னவாயிருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கும் போது,  “அமைச்சரே நான் கனவில் கண்ட கனியைக் கொண்டு வருவோருக்கு அந்தக் கனியின் எடைக்குச் சமமான தங்கத்தை சன்மானமாக தரப்போவதாக அறிவியுங்கள்.” என்றான். “அதே சமயம் நான் கனவில் கண்ட கனியல்லாது வேறேதும் கனியைக் கொண்டுவந்தால் தண்டனை கடுமையாய் இருக்கும்”, எனவும் அறிவித்தான்.

இந்த அறிவிப்பைக் கேட்டு பேராசை கொண்டவர்கள் அரசனை ஏமாற்றி பெரும் தங்கத்தை தட்டிச்செல்லும் பொருட்டு தங்கள் மனதில் தோன்றிய பழத்தை கையில் எடுத்துக் கொண்டு அரசவைக்குச் சென்றார்கள். தங்களது ஊகம் தவறாக இருந்தால் கிடைக்கும் தண்டனையைப் பற்றி கவலை கொண்டவர்களாய் தெரியவில்லை. அரசனோ ஒவ்வொருவராய் வரவழைத்து அவர்கள் கொண்டுவந்த கனியைப் பார்த்து, ‘இதுவல்ல நான் கனவில் கண்ட கனி’ என்று சொல்லி அருகிலிருந்த காவலாளிக்கு கண்ணசைவால் உத்தரவிட அந்தக் காவலாளி கனியைக் கொண்டுவந்தவரிடமிருந்த கனியைப் பிடுங்கி அதை அவர்களது ஆசனவாயில் வைத்து உள்ளே திணித்து பின் வாசல் வழியாக அனுப்பிவைத்தபடி இருந்தான்.

திராட்சைக் கனியும், கொய்யாக் கனியும் கொண்டுவந்தவர்கள் தப்பித்தோம் என தண்டனை பெற்றுக் கொண்டு தலை தெறிக்க ஓட தன் கையில் ஒரு பெரிய பப்பாளிப் பழத்துடன் இருந்த ஒருவன் தண்டனையைக் கண்டு மிரண்டு போனான். அரசன் நினைத்தது பப்பாளியும் அல்ல என்று தெரிந்தவுடன் அவனும் தண்டனைக்குள்ளானான். ஆசனவாயில் இரத்தம் சொட்டச் சொட்ட தண்டனையை அனுபவித்தவன் தண்டனையின் போது பெரும் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தது அரசனுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவே, “நீர் எதற்காக இப்படிச் சிரிக்கிறீர்?” என்று வினவ, தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தவன் சொன்னான்,




“பப்பாளிப்பழம் கொண்டுவந்த எனக்கே இந்தக் கதி என்றால் என் பின்னால் ஒருவன் பலாப்பழம் கொண்டுவருகிறானே அவனது நிலையை நினைத்தேன் சிரிப்பாய் வந்தது”

அது சரி.

பப்பாளியை விட பலாப்பழம் பெரிசுதான். பார்ப்போம்.

என்ன ஜீ! நான் சொல்வது சரிதானே? ஓ! 2 ண்டு G போடணுமோ?

 இன்னமும் பேசுவோம்.

 

அன்பன்,

வேதாந்தி.

 

 

Wednesday, October 15, 2014

பொருந்துமா…?

15.10.14

பொருந்துமா…?
என் நண்பரது பிள்ளைக்கு பத்து வயது இருக்கும்போது அவன் புரிந்த சாகசங்களை நினைவு கூர்ந்து அவனுக்கு ஒரு பரிசளிக்க என் நண்பர் நினைத்தார். அவன் பள்ளி சென்று வருவதாலும் இரட்டைச் செலவை குறைக்கும் விதமாகவும் அவனுக்கு பள்ளிச் சீருடை ஒன்றை உயர் ரக துணியில் தைத்துத் தர விரும்பினார்.

இந்த எண்ணம் தோன்றிய உடனே ஒரு தையல் காரரை அனுகி பையனையும் அழைத்துச் சென்று அளவு கொடுக்கவைத்து துணியையும் கொடுத்து வைத்தார். அவரது நேரம்... உடனே அவருக்கு இட மாறுதல் வந்தது. குடும்பத்துடன் வேற்றூருக்குச் சென்று தனது பணியைத் தொடர்ந்தார்.

கடமை தவறாத தையல்காரர் அவரது பிள்ளையை அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களுக்கான சட்டை தைத்து முடித்தாகிவிட்டது நீங்கள் உடனே வந்து பெற்றுக் கொள்ளலாம் என பல முறை அழைத்தார். ஆனால் பிள்ளையோ தனது தந்தை தனக்களித்த ஆடை தான் விரும்பாத பள்ளிச் சீருடை என்பதால் அந்த தையல்காரரை தட்டிக் கழித்தார்.


காலம் உருண்டோடியது. தந்தையும் அதை மறந்து விட்டார். சட்டைக்குரிய பிள்ளையும் இனி தான் அந்தச் சீருடை அணிய வேண்டியிருக்காது எனவே நினைத்தான். தையல்காரர் கடமை தவறாது பிள்ளையை அவ்வப்போது தொடர்பு கொண்டு சட்டையை நினைவூட்டிக் கொண்டிருந்தார்.

பதினெட்டு வருடங்கள் உருண்டோடின. 

திடீரென ஒருநாள் தையல்காரர் தான் தயாராக தைத்து வைத்திருந்த சட்டைத் துணியை எடுத்துக்கொண்டு எனது நண்பரது வீட்டிற்கே வந்து எதிரில் நின்றார். தையல்காரரை பார்த்தவுடனேதான் தான் தைக்கச் சொன்ன சீருடையைப் பற்றி நினைவு வந்தவராக, ‘’அடேடே வாங்க.. வாங்க.. “ என்று தையல்காரரை விசாரித்தவர் அவரது கையில் வைத்திருந்த சீருடையைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
“ஊரை விட்டு வந்தாலும் மறக்காம உங்க கடமையைச் செய்ய இத்தனை தூரம் வந்திருக்கிறீங்களே… உங்களை பாராட்டம இருக்க முடியல”, என்றார்.
 “பின்னெ சும்மாவா நீங்க எனக்கு தையல் கூலியா கொடுத்தத விட அதிகமா செலவுபண்ணி இங்க வந்தது எதுக்குங்கறீங்க… என் பேர் கெட்டுடக் கூடாது பாருங்க அதுக்குத்தான். இந்தாங்க உங்களுக்காக நான் தயாரித்த சட்டை. அளவு மாறாம தெச்சிருக்கேன். பிள்ளையை போட்டுப் பாக்கச் சொல்லுங்க. கண்குளிர பாத்துட்டுத்தான் போறதா இருக்கேன்..” என்று சொல்லி தன் கையிலிருந்த சட்டையைக் கொடுத்து பெருமிதத்தோடு கடமை தவறாமை தன் முகத்தில் மிளிர கையைக் கட்டிக் கொண்டு நின்றார்.

 
தனது தந்தையின் பேச்சுக்கு வெளிப்படையாய் எதிர்ப்பைக்காட்டத் துணிவில்லாமல் தன் கையில் திணிக்கப்பட்ட சட்டையை வெறித்துப் பார்த்தான் பிள்ளை. பதினெட்டு வருடங்கள் ஆனாலும் இந்தத் தையல்காரரை தவிர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம், பத்து வயதில் போட்டிருந்தால் பொருந்தியிருக்கும் சட்டை தான் கடத்திய பதினெட்டு வருடங்களில் தான் வளர்ந்து மாறுதலடைந்த பிறகு தனக்கு பொருந்தாமல் இருக்கும் நிலையில் தான் உடுத்தியே ஆகவேண்டிய சூழலின் நிர்ப்பந்தம் என பிள்ளை திகைத்துப் போயிருந்தான்.
தந்தையும் தையல்காரரும் பெருமிதத்தோடிருந்தனர்.
சட்டை பொருந்தவில்லை.
அது சரி… கதை பொருந்திச்சோ…!


இன்னமும் பேசுவோம்.

அன்பன்,
          வேதாந்தி.





 
Related Posts Plugin for WordPress, Blogger...