Followers

Monday, January 24, 2011

எனக்கு மட்டும் ஏன் இப்படி?

24.1.11
எனக்கு மட்டும் ஏன் இப்படி?




எனக்கு மட்டும் ஏன் இப்படி? உங்களுக்கு என்றேனும் இப்படித் தோன்றியதுண்டா? இன்றைய பேச்சில் இந்த சுய பச்சாதாபத்தின் விளைவைப் பற்றி பேசப்போகிறோம்.

இந்த சுய பச்சாதாபம் ஒருவனை நிச்சயமாய் நொறுக்கிப் போடும். பொதுவாகவே இந்த சுய பச்சாதாபம் என்பது அண்டிக் கெடுக்கும் நட்பைப் போல. அதுவும் கருணை பொழியும் பாசத்துடன் மிக அக்கறை கொண்ட நட்பைப் போல் நமக்குள் இருந்து நெஞ்சை வருடிவிட்டு நம்மை அழித்துவிடும் செயலை இது சத்தமின்றி செய்துவிடும்.

நம்மை இது சிந்திக்கவே விடாது. நமது சூழலையும் ஆராய விடாது. ஆக நமது சூழலில் இருக்கும் சாதகமான காரணிகள் எவையும் கண்ணில் படாது மாறாக பாதகமான காரணிகளாக நாம் கருதுபவைகள் மட்டுமே நம்மை அச்சுறுத்திக்கொண்டு பூதாகர வடிவெடுப்பதோடு மட்டுமல்லாது நாம் கொண்டுள்ள தன்னம்பிக்கையை சுத்தமாய் உறிஞ்சி இழுத்து நம்மை செயலிழக்கவும் செய்துவிடும்.மேலும் நமக்குள் தாழ்வு மனப்பான்மையைத் தூண்டிவிடுவதோடு மட்டுமல்லாது உலகமே நமக்கு எதிராக இருக்கிறது என்னும் நினைப்பையும் நம்முள் வளர்த்துவிடும்.



இந்த சுய பச்சதாபம் - self pity - என்பது நம்மை ஏறக்குறைய ஒரு பக்கவாதம் தாக்கியவரைப்போல நம்மை கிடத்தி நாம் எப்போதும் மற்றவரது உதவியையே நாடி இருக்கும் படி செய்வதோடல்லாமல் மன ரீதியாக நாம் இப்படி இருப்பதும் மற்றவர்கள் நமக்கு உதவி புரிவதும்சரி என்று காரணம் கற்பிப்பதோடல்லாது நமது இந்த நிலைக்கு காரணம் நம்மைச் சுற்றியுள்ளவர்கள்தானே தவிர நாம் அல்ல என்னும் மாயையினை உருவாக்கி மற்றவர்களை விரொதிகளைப்போல நம்மை பார்க்கத் தூண்டி சமுதாயத்திற்கும் நமக்கும் இடையே பெரும் இடைவெளியை உருவாக்கிவிடும்.

இப்படி ஒருவரை தனிமைப்படுத்தும் இந்த சுய பச்சாதாபம் உள்ளிருந்து பெருகி வெறுப்புக் குவியலாய் சமயம் கிடைக்கும்போது வெடித்து வெளிப்படும். இந்த வெறுப்பு தனக்கெதிராகவோ அல்லது தன்னைச் சுற்றி இருப்பவர்க்கு எதிராகவோ கிளம்பும்போது அது மிகப் பெரிய பின்விளைவுகளை விளைவிக்கும் . எனவேதான் இதைக்குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது.

இத்தகைய சுயபச்சாத்தாபம் நிறைந்தவர்களை சாதரணமாக இருக்கும் மனிதர்களிடமிருந்து பிரித்துக் காட்ட  நான் ஊடகங்களில் படித்தறிந்த ஒரு கதையை கீழே சொல்லியிருக்கிறேன்.

ஒரு தனவந்தன் தனக்குப் பிறந்த இரு பிள்ளைகளிடமும் மிகுந்த வேறுபாட்டைக் கண்டான். அது, மூத்த பிள்ளை எப்போதும் மிகுந்த மகிழ்வுடனும், வாழ்வை அனுபவிக்கும் தாகத்துடனும் இருக்க இளையவனோ எப்போதும் ஒருவித சோகத்துடனும், தன்னைக் குறித்து ஒரு சுய பச்சாத்தாபத்துடனும் இருந்ததோடு மட்டுமல்லாது எல்லாச் சூழலிலும் தான் இரக்கமின்றி கொடுமைக்கு உள்ளாக்குவதைப்போல் மிகுந்த துயரத்துடனே வாழ்வைப் பார்த்தான்.

இதைக் கண்ட தனவந்தன் இவர்களது குணங்களை மாற்றும் எண்ணத்துடன் ஒருநாள் பிள்ளைகள் அறியாதவாறு மூத்த மகனது அறையை  குதிரைச்சாணக் குவியலாலும்  இளைய மகனது அறையை விளையாட்டு பொம்மைகளாலும் நிரப்பிவிட்டு அடுத்த நாள் அவர்களது நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்தான்.



தனவந்தன், தனது இளைய பிள்ளை மகிழ்வுடன் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பான் எனவும் மூத்த பிள்ளை குதிரைச்சாணக் குவியலைக் கண்டு மனம் வெறுத்து அதை சுத்தப் படுத்தும் வேலையில் இருப்பான் எனவும் நினைத்தான். ஆனால் நடந்ததோ இவனது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தது.

இளைய பிள்ளை மிகுந்த வருத்தத்துடன் இருந்தான். இவனைக் கண்டதும், “ பாருங்கள் யாரோ எனது அறையில் பொம்மைகளை நிரப்பி வைத்திருக்கின்றனர். யார் இத்தனை பொம்மைகளுக்கும் சாவி கொடுத்து இயக்குவது? இவைகளுக்கு சாவி கொடுத்து இயக்கி மாளாது போலிருக்கிறதே.. யாருக்கும் என் மேல் இரக்கமே இல்லை..” என்று சொல்லி அழுதானாம்.



மூத்த பிள்ளையோ இவனைக் கண்டதும் மிக்க மகிழ்வுடன், “ எத்துனை அதிசயம் பாருங்கள். என் அறை நிறைய குதிரைச்சாணம் இருக்கிறது. இதைப் பார்க்கும் போது இங்கேதான் எங்கேயோ ஒரு குதிரைக் குட்டி இருப்பதாகத் தெரிகிறது. நான் எப்படியும் இன்று மாலைக்குள் அந்தக் குதிரைக் குட்டியைத் தேடிப்பிடித்து அதன் மீது சவாரி செய்து விளையாடப் போகிறேன் ..” என்றானாம்.



இப்படித்தான் நமது பார்வைகள் நமது வாழ்வை மாற்றக்கூடிய சக்தி படைத்தவைகள். அப்படிப்பட்ட வல்லமை கொண்ட  பார்வைகளையே திருகலாக்கி நமது வாழ்வைக் கெடுக்க வல்லன நாம் கொள்ளும் சுய பச்சாத்தாபம். எனவே இத்தகைய வாழ்வைக் கெடுக்கும் மன நிலையை விட்டு வெளிவந்து நமது வாழ்வை வளம் பெறச்செய்ய வல்ல ஒளியைக் காண்போம், சிறக்க வாழ்வோம்.

இன்னமும் பேசுவோம்..

அன்பன்,

வேதாந்தி.


Thursday, January 6, 2011

தலைமுறை இடைவெளி உருவாகிறதா அல்லது உண்டாக்கப் படுகிறதா?

6.1.11
தலைமுறை இடைவெளி உருவாகிறதா அல்லது உண்டாக்கப் படுகிறதா?



தலைமுறை இடைவெளி என்பது இரு தலைமுறையினருக்கிடையே இருக்கும் புரிதலில் விழும் இடைவெளியைக் குறிப்பதாகும்.

குடும்பம் என்கின்ற குறுகிய அமைப்பில் இந்தத் தலைமுறை இடைவெளியை பார்த்தோமானால், பெற்றோர் பிள்ளைகள் ஆகியவர்களுக்கிடையே இருக்கும் நோக்கம், பார்வை, உணர்வுகள் மற்றும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதம் ஆகியவைகளுக்கிடையே இருக்கும் இடைவெளியைத்தான் நாம் தலைமுறை இடைவெளி என்கின்றோம். பெரும்பாலும் இந்த தலைமுறை இடைவெளி மனிதர்களுக்கிடையே புரிதலை சிரமப் படுத்தும் அல்லது புரிதலை தடுக்கும்.

இந்த தலைமுறை இடைவெளி தானாக உருவாகிறதா அல்லது நம்மால் உண்டாக்கப் படுகிறதா என்பதுதான் இன்றைய பேச்சு. தானாக உருவாதல் என்பது இந்த தலைமுறை இடைவெளிக்கு காலத்தையும் அதன் மாற்றங்களையும் காரணப்படுத்துவது. நாமாக உண்டாக்குவதென்பது நம்முடன் இருக்கும் சம காலத்தோரிடையே உள்ள கருத்து அல்லது கொள்கை குறித்த  வித்தியாசங்களைப்போலவே இந்த தலைமுறை இடைவெளியும் நம்மால் உருவாக்கப் பட்டதாக குறிப்பது. 

இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால் தலைமுறை இடைவெளியில் கலாச்சாரத்தின் பங்கு என்ன என்பதுமாகும்.



பொதுவாகவே மனிதன் தன் வாழ்வின் எல்லா பகுதிகளிலும் ஒரு தொடர்ந்த கற்றல் நிலையில் இருக்கிறான் ; இருக்க வேண்டும்.  இந்த கற்றல் நிலையில் தொய்வு ஏற்படும் போது அவனது புரிதல்களில் மாற்றங்கள் நிகழ்வதில்லை, மாறாக அவனது புரிதல்களில் ஒருவித resistance - எதிர்ப்புணர்வு தோண்ற ஆரம்பித்து விடுகிறது.  இந்த தொடர்ந்து கற்றல் நிலை அவனுக்கு தனது சூழலைப் பற்றிய, சூழலின் மாற்றங்களைப்பற்றிய ஒரு விழிப்புணர்வையும் - awareness -  அதைத் தொடர்ந்து விளையும் காரியங்களுக்கான காரணங்களையும் - reasoning - நம்மை அறியச் செய்வதொடுமட்டுமல்லாது  அதற்கேற்றார்ப்போல் நம்மை தகவமைத்துக் கொள்ளத் தூண்டும். இது மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிரிகளுக்கும் பொதுவான ஒரு செயல் நிலையாகும். இதுதான் உயிர் வாழ்தலின் ஒரு அடிப்படைத் தத்துவம்.  It is the basic concept of survival.

இந்த  basic concept of survival  ஐ அணையாமல் தூண்டிவிடுவது தன் சூழலில் வாழ்வதற்கு உள்ள  ஒருவித அச்ச உணர்வுகளே. The threats in the environment keeps the survival instinct of an individual sharp.  இந்த அச்ச உணர்வுகள் - threats -  குறையும் போது கற்றல் நிலையில் தொய்வு ஏற்படுகிறது. இந்த நிலை தனியே வாழும் உயிரிக்கு மிகவும் அபாயகரமானது. ஆனால் மனிதன் ஒரு சமுதாயம் சார்ந்து வாழும் உயிரி - social animal - என்பதனால் இந்த கற்றல் நிலையில் தோய்வு ஏற்படும் போது  மனிதனுக்கு இதனால் விளையும் அபாயம் மிக மிகக் குறைவு. இந்த அபாயமற்ற நிலையே மனிதர்களுக்கு ஒரு comfort zone ஐ உருவாக்கி விடுவதனால் மனிதர்களுக்கு தொடர்ந்து கற்றலில் ஒரு சரியான தூண்டுதல்- motivation - கிடைப்பதில்லை. ஆனால் இந்த கற்றலில் ஒரு incentive எப்போதும் உண்டு. இருப்பினும் இந்த கற்றலுக்கான compulsion -  கட்டாயம் - threat ல் தான் அதிகம் உள்ளதே தவிர incentive ல் அல்ல.

சரி. இப்போது நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி ஒரு தலைமுறையினரின் பார்வை, நோக்கம் மற்றும் உணர்வுகளை நிச்சயிப்பது எது?



இந்த பார்வை நோக்கம் , உணர்வுகள் மற்றும் அவைகளை வெளிப்படுத்தும் முறைகள் ஆகியவற்றை நிச்சயிப்பது ஒருவர் வாழும் சூழல் காரணிகள் (ஓரளவுக்கு இதனை கலாச்சாரச் சூழல் காரணிகள் எனவும் சொல்லலாம்),
மற்றும் அவரது தனிப்பட்ட கடந்த கால அனுபவங்கள் மட்டுமே. இந்த சூழல் காரணிகளை பெரும்பாலும் தான் வாழும் சமுதாயத்தின் நோக்கம் மற்றும் அந்த நோக்கத்தினை அடைய ஒருவருக்குத் தேவையான தகுதிகள் ஆகியவைகளே ஆளுமை செய்கின்றன.


மேற்சொன்னவைக்கு உதாரணமாக வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் வாழ்ந்த முன்னவர்கள் ஒரு பெரு நோக்கோடு வாழ்ந்தனர். அந்த நோக்கு மற்றும் அதனை அடைய அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அதனைச்சார்ந்தவைகளே அந்தத் தலை முறையினரின் பார்வைகளையும், எல்லைகளையும் வரையறை செய்தன. சுதந்திர வேட்கை மற்றும் அதனை அடைவதற்கான தனிமணிதனின் தியாகம் ஆகியவைகளே பொதுவான வரையறையாக இருந்தது. சுதேசி இயக்கம் மிகப் பெரிதாக போற்றப்பட்டது.



ஆனால் தற்போதைய சூழலில் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு இதன் மகத்துவமும், புனிதத்துவமும் புரிவதில்லை. இது அவர்களுடைய குற்றமல்ல. மாறிவரும் காலச் சூழலில் அவர்களின் கற்றலும் வேறுபடுகிறது. தற்போதைய இளைஞன் மேலை நாடுகளுக்குச் சென்று கல்வி பயிலுவதையும் அங்கேயே பணிபுரிவதையும் மிகப் பெரிதான வாய்ப்பாகக் கொள்கிறான். இந்த மாறிவரும் கருத்தின் பரிணாமத்தைக் கண்டுணராத முந்தைய தலைமுறையினர் பின் தள்ளப் படுகின்றனர். தலைமுறைக்கிடையே மிகப் பெரிய இடைவேளி உருவாகிறது.


மேற்காட்டிய நிலையைத் தவிர வேறு பல துறைகளிலும் அல்லது மாற்றங்களிலும் கூட இத்தகைய இடைவெளியைப் பார்க்கலாம். ஆனால் கலாச்சாரம் சார்ந்த தலைமுறை இடைவெளி மட்டுமே வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. இந்த கலாச்சாரம் சார்ந்த இடைவெளி,  கலாச்சார மாற்றங்களை ஊக்குவிக்கும் சமுதாய மற்றும் சூழல் காரணிகளின் பரிணாம மாற்றங்கள் மற்றும் அதைக் குறித்த மக்களின் கற்றலும் தொடர்ந்து அதற்கு தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறன் அல்லது மாற்றங்களை குறித்த கற்றலைத் தவிர்க்கும் அவர்களின் செயல்பாடு ஆகியவைகளே இது குறித்த தலைமுறை இடைவேளியினை தவிர்த்தலையோ அல்லது தலைமுறை இடைவெளியினையோ   உருவாக்குகின்றன.



ஆனால் மூத்த தலைமுறையில் சிலர் வளர்ந்துவரும் கால மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது கற்றலையும், கால மாற்றத்தின் கட்டாயத்தையும் புரிந்து கொள்வதால் தங்களது உணர்வுகளிலும் அதன் வெளிப்பாடுகளிலும் வளர்ச்சியை  பெற்றுக் கொள்கின்றனர். சம காலத்தினரிடையே கூட இத்தகைய கற்றலினால் ஏற்படும் வளர்ச்சி, இந்த கற்றலால் வளர்ந்தொர் மற்றும்   இந்த கற்றலைத் தவிர்ப்போர் ஆகியோரிடையே புரிதலில் இடைவெளி உருவாகக் காரணமாகிறது. தொடர்ந்து கற்றல் மற்றும் கற்றலைத் தவிர்த்தல் என்பதாலே சம தலைமுறையினரிடையே கூட இந்த இடைவெளி உண்டாகிறது. தற்கால மூத்தோர்களில் இணையத்தை வெறுப்போரும் இணையத்தைக் கற்று அதனை வசப்படுத்தி வலைப்பூக்களை தொடுப்போருமே இதற்கு உதாரணம். இருவரில் பின்சொன்னவர்கள் எளிதாக இளைய தலைமுறையினறை தங்களது கருத்துக்களால் கவர்ந்திழுக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த கற்றலைத் தவிர்த்தலே தலைமுறை இடைவெளியை உண்டாக்குகிறது.



எனவே மூத்தோர்களது தொடர்ந்து கற்றலே இளையதலைமுறையினர் மற்றும் அவர்களின் உணர்வுகள் குறித்த புரிதலையும் அதிகப் படுத்தி தலைமுறை இடைவெளியினை தவிர்க்க உதவும். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் இந்த தொடர்ந்து கற்றலினால் தலைமுறை இடைவெளி உருவாதல் தடுக்கப்பட்டு மிகவும் தெளிவான புரிதலை இரு தலைமுறைக்கிடையேயும் உருவாதலால், என்றென்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய நமது ethical sense and moral sense ஆகியவைகளை எந்த வித எதிர்ப்புகளுமின்றி இளைய தலைமுறையினருக்கு நாம் பரிமாற முடியும். இது கற்றலினாலும் புரிதலினாலும் மூத்த தலைமுறைக்கு கிடைக்கும் ஒரு பரிசு.

தொடர்ந்து பேசுவோம்..

அன்பன்,

வேதாந்தி.
Related Posts Plugin for WordPress, Blogger...