Followers

Tuesday, December 9, 2014

நவீன நள புராணத்தின் சுப முடிவு…!


9.12.14
நவீன நள புராணத்தின் சுப முடிவு…!


 
மறுபடியும் ஒரு நேர்முகத் தேர்வு. இதற்கு நண்பர் எப்படி வினை செய்தார் எனத் தெரிந்து கொள்ள ஆர்வமானேன். நண்பர் தொடர்ந்தார்.
“அந்தக் கல்லூரி திண்டுக்கல்லில் இருந்து எரியோடு செல்லும் வழியில் இருந்தது. அது ஒரு தனியார் கல்லூரி. GTN Arts College என்பது. முற்றிலுமாக ஆண்களுக்கான கல்லூரி. பின்னால் அது  Co education college ஆக மாறிவிட்டது என அறியவந்தேன்.
திண்டுக்கல்லை வந்தடைந்து எரியோடு செல்லும் பேருந்தை பிடித்து கல்லூரி வாசலிலேயே இறங்கினேன். எனக்கு முன்னரே பலர் வந்தடைந்திருந்தனர். ஏறக்குறைய ஒரு முப்பது பேர் இருந்திருப்பர். நானும் அவர்களது வரிசையில் சென்றடைந்தேன். வந்திருந்தவர்களில் பழைய முகம் ஏதேனும் தெரிகிறதாவெனப் பார்த்தேன். யாரும் காணவில்லை. எல்லோருக்கும் வேலை கிடைத்திருக்குமோ அல்லது என்னைப் போலவே மனமொடிந்து ஒதுங்கிவிட்டிருப்பார்களோ.. மனம் சிறிது கலங்கியது.
நேர்முகத் தேர்வு நடந்தது. கல்லூரி முதல்வர் மற்றும் மூன்று மூத்த பேராசிரியர்கள் இருந்தனர். சான்றிதழ்கள் ஒப்பீடு முடிந்ததும் அனைவரையும் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆங்கிலம், வணிகவியல் ஆகிய துறைகளிலும் உதவிப் பேராசிரியர் பணிக்கு ஆட்கள் தேவைப்பட்டது போலிருந்தது. அவர்களுக்கும் நேர்முகத் தேர்வு முடிந்தது. முடிந்தவுடன் மதியச் சாப்பாட்டிற்கு பிறகு தேர்ந்தெடுத்தவர்களைத் தவிர மற்றையோரை செல்லலாம் எனச் சொல்லி அனுப்பி விட்டனர். நல்ல வேளை இங்கு மற்ற கல்லூரிகளைப் போல சாதிப் புராணம் படிக்கவில்லை.
எனது துறையில் காலியாக இருந்த ஒரு உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்திருந்தனர். என்னிடம் சற்று காத்திருந்து பணி ஆணையை பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள்
நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன் எனக் கேட்டதும் மரத்துப் போன என் மனதில் எந்த ஒரு உணர்வுகளும் எழவில்லை. பணி ஆணைக்காக அலுவலகத்தில் காத்திருந்தேன். நான் தொலைவிலிருந்து வந்ததனால் என்னை முதலில் அனுப்பும்படியாக எனது பணி ஆணையை தயார் செய்து கொண்டிருந்தார் தலைமை எழுத்தர்.
தனியார் கல்லூரி என்பதால் சம்பளம் எப்படிக் கொடுப்பார்கள் என ஒரு சந்தேகம் எழவே, தலைமை எழுத்தரிடம் சென்று, “அய்யா, எனக்கு பணியில் சேர்ந்தால் சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?” என்று கேட்டேன். அதற்கு அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, “உடனே கிடைக்காதப்பா.. இது பல்கலைக் கழகத்திற்குப் போய் அங்கீகரிக்கப் பட்டதற்குப் பின்னர்தான் உங்களுக்கு சம்பளம் கிடைக்கும். அதற்கு ஒரு எட்டு மாதங்களாவது ஆகலாம்.” என்றார்.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
பதறிப்போய், “அப்படியென்றால் எனக்கு இந்த வேலை வேண்டாம்” என்றேன்.
நான் சொன்னதைக் கேட்டு தலைமை எழுத்தரும் திகைத்துப் போனார். “ஏன்? ஏன் வேண்டாமென்கிறீர்கள்?”. அவரது திகைப்பு வார்த்தைகளிலே வெளிப்பட்டது.
“என்னால் சம்பளம் இல்லாமல் வேற்றூரில் காலம் கடத்த முடியாது சார்…”
“எட்டு மாதங்கள் கூடவா சமாளிக்க முடியாது.?”
“இல்லை சார். ஒரு மாதம் கூட முடியாது. இப்போது நேர்முகத் தேர்வுக்கே வழிப்பயணச் செலவை எனது பேராசிரியர் கொடுத்ததால்தான் வர முடிந்தது. அதனால்தான் சொல்கிறேன் …” என்று இழுத்தேன்.
நான் சொன்னதைக் கேட்டு யோசித்த தலைமை எழுத்தர், “அவசரப் பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். சற்று காத்திருங்கள்.. இதோ வருகிறேன்.”, என்றபடி எழுந்து கல்லூரி முதல்வரின் அறைக்குள் நுழைந்தார். சற்று நேரம் கழித்து வெளியே வந்தவர், “பிரின்சிபால் உங்களை வரச் சொல்கிறார் அவரைப் போய் பாருங்கள்,” என்றார். நான் தயங்கியபடியே உள்ளே சென்றேன்.

 
கல்லூரி முதல்வர் என்னைக் கண்டதும் வரவேற்று அமரச் செய்தார். பிறகு சற்று நேரம் அமைதி. அதற்குப் பிறகு மெதுவாக, “ உங்களால் பணி ஏற்க இயலாதென தலைமை எழுத்தர் வந்து சொன்னார். காரணத்தை நான் அறியலாமா?” என்றார். நான் என்னை சற்று நிதானித்துக் கொண்டு,”அய்யா, நான் ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். First generation learner. நான் தான் மூத்த பிள்ளை. எனது பெற்றோர் மிகவும் வயதானோர். அவர்களால் எதுவும் செய்ய முடியாது. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களுக்கு உதவியாய் இருப்பதனால் என்னை சுமையாக கருத வாய்ப்பில்லை. ஆனால் அவர்களை விட்டு இங்கு தனியே வருமானம் ஏதுமின்றி இருக்கும்போது அவர்களுக்குச் சுமையாய் இருப்பேன். மேலும் இந்த வயதிலும் அவர்களை சிரமப்படுத்துவதில் எனக்கு விருப்பமில்லை அவ்வளவுதான்.” என்றேன்.
“உங்களுக்கு மாதம் எவ்வளவு பணம் தேவைப்படும்?’
“அதிகமாக ஒன்றும் வேண்டாம் அய்யா. எனது சாப்பட்டுச் செலவு மற்றும் எனது துணிகளை வெளுக்க சோப்புச் செலவு அவ்வளவுதான்”.
“அவ்வளவுதானே.. நான் உங்களுக்கு மாதம் உரூபாய் அய்நூறு தரச் செய்கிறேன். இப்போது பணியேற்கச் சம்மதமா?” என்றார். இதைக் கேட்டதும் எனக்கு கண்களில் நீர் வந்துவிட்டது. கையெடுத்துக் கும்பிட்டேன். நாத்தழுதழுக்க, “ அய்யா இந்த உதவியை நான் என்றும் மறக்கமாட்டேன்.” என்றேன்.
உடனே ப்யூனை அழைத்து “ கோபாலன் சாரை வரச் சொல்.” என்றார். கோபாலன் சார் வேதியியல் துறையில் பணிபுரியும் ஒரு மூத்த பேராசிரியர். அவர் தான் ஹாஸ்டல் வார்டன். கோபாலன் சார் வந்ததும் அவருக்கு என்னை அறிமுகம் செய்துவைத்து ஹாஸ்டலில் என்னை அக்காமடேட் செய்யச் சொல்லி சொன்னார்.
அந்தப் பணி நியமன ஆணை என் வாழ்க்கையையே மாற்றிப் போட்டது.
எனது திறமைகளை கல்லூரி முதல்வர் மிகுந்த கவனத்துடன் கவனித்தார். எனது வகுப்பிலிருந்த பிள்ளைகள் நான் பேச ஆரம்பித்தாலே உற்சாகமடைந்தனர். மாத முடிவில் என் கையில் கிடைத்த அய்நூறு உரூபாய்களை வெறித்து நோக்கினேன். எனக்கு என்னவோ மனம் துள்ளவில்லை. எனது வயதில் அந்தப் பணத்தைப் பார்க்கும் ஒரு சாதாரண மனிதனுக்கு ஏற்படும் உணர்வுகள் எனக்கு ஏற்படவில்லை.
எனது எட்டு வருடங்களின் கடுமை பணத்தைப் பற்றிய ஆசை, அதைப் பார்க்கும் போது ஏற்படும் ஒரு மகிழ்வு ஆகியவைகளை சுத்தமாக பொசுக்கியிருந்தது. இனிமேல் இந்த உணர்வுதான் எனது வாழ்வை வழிநடத்தப் போகிறது என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. பிற்காலத்தில் நான் முக்கியமான அரசுப் பணி வகிக்கும்போது எனது பணியில் எத்துனை பணத்தைக் காட்டியும் என்னை அசைக்க முடியாத ஒரு நிலையை, ஒரு தெளிவை, ஒரு திட மனதை எனக்கு இந்தக் கடுமையான காலங்கள்தான் பரிசளித்தது என்பதை என்னால் உணர முடிந்தது. அதற்கு இன்றுவரை நான் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
எனக்கு உதவியாக அய்நூறு உரூபாய்கள் அளிக்கப் பட்டது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. இதுவரை G T N சரித்திரத்திலேயே இல்லாத ஒரு நிகழ்வு என வியந்தனர். ஹஸ்டல் வார்டன் கோபாலன் சார் எனக்கு மெஸ் பில் கட்டவேண்டியதில்லை பின்னால் உங்கள் சம்பளத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்றார். நான் அதனை மறுத்து விட்டு பில்லைக் கட்டினேன். அந்தக் காலத்தில் மெஸ் பில் நூறு உரூபாய்களைத் தாண்டவில்லை.
அதற்குப்பிறகு ஒரே மாதத்தில் மற்றுமொரு மாற்றம் நடந்தது.
ஹாஸ்டலில் இருந்த resident warden ஒரு இள வயதுக் காரர். அவரால் பேச்சைக் கட்டுப்படுத்த முடியாமல் ஒருமுறை விடுதிப் பணியாளர்களிடம் (விடுதிப் பணியாளர்கள் பக்கத்திலிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள். விடுதியும் கிராமமும் ஒன்றாய் இருந்ததனால் அவர்களுக்கு பணி செய்ய வசதி ) மிகையாய் வாயைக் கொடுக்க அது முற்றி அந்தக் கிராமத்திலுள்ளோரெல்லாம் resident warden க்கு எதிராய் வேல்கம்பு, கட்டைகளுடன் விடுதியைச் சூழ்ந்து கொள்ள கொஞ்சம் விட்டால் பெரும் சாதிப் பிரச்சனையாக வெடித்துவிடக்கூடிய சூழல் உருவாகிவிட்டது.
அந்த நேரத்தில் என்னையறியாமலேயே நான் இடையே புகுந்து பேசி ஒற்றை ஆளாய் அனைவரையும் சமாதானப் படுத்தி பிரச்சனையைத் தீர்த்துவைத்தேன். நடுங்கிப்போய் விடுதி அறைகளை பூட்டிக் கொண்டிருந்த பிள்ளைகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
அடுத்த நாள் இந்த நிகழ்வை கேள்விப்பட்ட கல்லூரி முதல்வரும் கோபாலன் சாரும் அந்த resident warden ஐ நீக்கி விட்டு என்னை resident warden ஆக நியமித்தனர். அந்த மாதத்திலிருந்து மெஸ் பில்லும் எனக்கு இல்லை. கிடைத்த பணத்தை அப்படியே ஊருக்கு அனுப்பி வைத்தேன்.
அடுத்த சில மாதங்களிலேயே எனக்கு எனது கல்வித் தகுதிக்கேற்ப ஒரு அரசுப் பணிக்கு நேர்முகத்தேர்வு வந்தது. பணியும் கிடைத்தது. அதற்குப்பின் என் திருமணத்திற்கு பெற்றோர் முயற்சி செய்ய நான் எனது பெற்றோரிடம், “திண்டுக்கல் காந்தி கிராமத்தில் இருக்கும் பெண்களில் ஆதரவற்றோர் மற்றும் அனாதைகள் எத்துனையோ பேர் நன்கு படித்திருக்கின்றனர். எனது கல்லூரி முதல்வரிடம் சிபாரிசுக் கடிதம் பெற்று அத்தகைய ஒரு பெண்ணை நான் திருமணம் செய்து கொள்கிறேன்”, என்றேன். என்  பெற்றோர்கள், இத்தகைய முற்போக்கான எண்ணங்களுக்கு பழக்கப் படாதவர்களானதால், பதறிப்போய் “அப்படியெல்லாம் வேண்டாம். உன் படிப்பையும் உத்தியோகத்தையும் இந்த துண்டுச் சீட்டில் எழுது. எங்களால் ஒரு மாதத்திற்குள் எந்தப் பெண்ணையும் பார்க்க முடியவில்லையென்றால் நீ சொன்னபடி செய்து கொள்ளலாம்.” என்றனர். நானும் அப்படியே செய்தேன்.
அன்றே என் தந்தையார் வீட்டைவிட்டு கிளம்பினார். அதற்கப்புறம் இருபது நாட்கள் கழித்து ஒரு பெரியவருடன் என்னை எனது அலுவலகத்தில் சந்தித்தார். வந்த பெரியவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டு,” Your father stays with me. Please come after your office hours to our house. You can have your tea and get him with you.” என்று சொன்னார்.


 
அவரது சரளமான ஆங்கிலம் மற்றும் மற்றைய பக்குவப்பட்ட நடத்தை அவரை வித்தியாசப் படுத்திக் காட்டியது. எனது தந்தை நான் எழுதிக் கொடுத்த சீட்டை வைத்துக் கொண்டு தேனியில் எனக்காக பெண்தேடி அலைந்திருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு திருமண வீட்டில் சந்தித்த ஒரு பெரியவரிடம் இந்தச் சீட்டைக் காண்பிக்க அவர் உடனே என் தந்தையை உபசரித்து, உடனே சென்று இவரைப் பாருங்கள் என்று சொல்லி விலாசம் தந்து வண்டி ஏற்றிவிட எனது தந்தையும் அதுபடியே செய்ய பிறகுதான் தெரியவந்தது அவரது பெண்ணுக்கு தகுந்த வரனை தேடிக்கொண்டிருக்கிறார் என்று. தன்னைத் தேடி வந்த என் தந்தையை வரவேற்று உபசரித்து பின் இருவரும் என்னைப் பார்க்க எனது அலுவலகம் வந்திருக்கின்றனர்.
அவரது அழைப்பின்படியே அவரது வீட்டிற்கு என் தந்தையை அழைத்துவரச் சென்றேன். அப்போதுதான் அவர், ஒரு பிரபல கல்லூரியில்  உதவிப் பேராசிரியராக பணி புரியும் தன் மகளை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். ஏறக்குறைய அது ஒரு informal பெண்பார்க்கும் படலமாகவே நடந்தது.
 பிறகென்ன. என் பெற்றோருக்கு பெண்ணையும் பெண் வீட்டாருக்கு என்னையும் பிடித்துப் போக அடுத்த மூன்று மாதங்களில் திருமணம் நடந்து முடிந்தது.
இத்தனையும் எப்படி நடந்ததென இப்போது நினைத்தாலும் வியப்பாய் இருக்கிறது. என் வாழ்க்கையில் நடந்தவைகளே நான் என் பணிக்காலத்தில் நேர்மையாகவும் உண்மையாகவும் எதற்கும் பயந்து கொண்டு யாருக்கும் வளைந்து கொடுக்காமலும் இருக்கும்படிக்கு என்னை உறுதிப்படுத்தியது.
 

என்னை ஒருக்காலும் ஆண்டவர் கைவிடவில்லை என்பதை முற்றிலும் உணர்ந்து கொண்டேன். இனியும் கைவிடமாட்டார் எனவும் நம்புகிறேன்….”
நண்பர் முடிக்கவும் நான் சிந்தனையில் ஆழ்ந்தேன்.
 
இன்னமும் பேசுவோம்.
 
அன்பன்,
வேதாந்தி.
 
 

Monday, December 1, 2014

நவீன நள புராணம் (அ) கை விடாத ஆண்டவர்!!!


1.12.14

நவீன நள புராணம் (அ) கை விடாத ஆண்டவர்!!!





 

ஏழரைச்சனியின்  பிடியிலிருப்போர் நள புராணம் கேட்டால் நல்லது என்பார்கள். வரும் இடர்கள் தங்களை மனம் தளர விடாது விருப்பு வெறுப்பின்றி, வருவதை எதிர் கொள்ள ஒருவரை தயார் படுத்தும் வகையில் நள புராணம் இருக்கும்.  நண்பரது கதையும் ஒரு நவீன நள புராணம் போலவே இருந்தது.

தொடரும் சோகமாக இருந்தது நண்பருடைய கதை. இந்த நிலையிலிருந்து எப்படி மீண்டார் என்று எனது மனதில் எழுந்த கேள்வி அவரது உரையாடலை சுவராசியப் படுத்தியது. மிகுந்த ஆர்வத்தோடு கவனிக்கலானேன். நண்பர் தொடர்ந்தார்.

“வெண்நுரை தள்ளிய கடலைப் பார்த்து நின்றுகொண்டிருந்த நான் ஒரு முடிவுக்கு வரவேண்டியிருந்தது. இனிமேல் இந்தப் போராட்டம் வேண்டாம் என முடிவு செய்தேன்.

தற்கொலை முடிவு கோழைத் தனமானது என்பதில் உறுதியாய் இருந்தேன். அதுமட்டுமல்ல எனக்குள் ஒரு லேசான ஆர்வமும் கிளம்பியது. நான் முடிவாக நினைத்ததெல்லாம் முடிவல்லவென்றால் எனக்காகக் காத்திருக்கும் முடிவுதான் எது? என்பதுதான் அது.

மணலில் அப்படியே உட்கார்ந்து யோசித்தேன். இரவு ஊர் திரும்ப வண்டி ஏறுவதற்குள் என்னுள் ஏற்பட்ட குழப்பத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர யோசித்தேன்.

தீவிரமாக யோசித்ததில் எனது வாழ்க்கையில் எனது முயற்சிகள் மட்டுமல்லாது வேறேதோ ஒன்று கூடவே இயங்கி வந்திருப்பது புரிந்தது.

It was obvious that an un accounted factor was playing a bigger role in my life and I was stupid enough to ignore it or un recogonise it. Now after coming to know that, I was feeling a little bit calm and I tried to make every attempt to understand that factor. I have also decided not to be in conflict with the force or the factor that has played a role in directing my course of life.


அமைதியாய் எனக்கிருக்கும் கடமைகளை நினைவுக்கு கொண்டுவந்தேன். எனது வயதான பெற்றோர் மற்றும் மணமாகாத என் தங்கை. இந்தப் பொறுப்புகளுக்கு முதலில் ஒரு வழிசெய்ய வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு இரவு ஊருக்குத் திரும்பினேன். பயணத்தின் போது எழுந்த சிந்தனைகளில், வெறும் 50 செண்ட் விளை நிலத்தை வைத்துக் கொண்டு என்னையும் என் தங்கையையும் படிக்கவைத்த எனது தந்தையாரின் உழைப்பு மிகப் பெரிது என்று எனக்குத் தோன்றியது. நான் ஒரு முதல் தலைமுறை படிப்பாளி (First generation learner ) என்பதைத் தவிர வேறொன்றும் இதுவரை சாதிக்கவில்லை என்பதும் புரிந்தது.

வீடு வந்து சேர்ந்ததும் எனது தாயார் மிகுந்த ஆவலோடு எனக்கு வந்திருந்த ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அதில் இருந்த அரசு முத்திரையும் தபால்காரரது விளக்கமும் எனது தாயாரின் ஆர்வத்தை அதிகரித்திருந்தது. தபாலை பிரித்துப் பார்த்தவன் உள்ளிருந்ததைப் பார்த்தவுடன் வாய் விட்டு சிரித்து விட்டேன். அது ஜனவரியில் நடந்து முடிந்த UPSC யின் Assistant Conservator of Forests தேர்வுக்கான ஹால் டிக்கட். இந்தத் தேர்வுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக என்னை கடுமையாக தயார் செய்து வைத்திருந்தேன்.

ஒன்றுமில்லாத பொங்கல் வாழ்த்துக் கடிதங்களெல்லாம் தவறாமல் கையில் கிடைத்தபோது இது இரண்டுமாதங்கள் தாமதமாக என் கைக்கு கிடைத்திருக்கிறது. நான் முன்பு போல இருந்திருந்தால் மிகவும் நொந்துபோய் வருந்தியிருப்பேன். ஆனால் இப்போதோ மனம் அலை பாயவில்லை. கையிலிருந்த கடிதத்தை தூக்கியெறிந்து விட்டு என் பெற்றோரை அருகில் அழைத்துப் பேசத் தொடங்கினேன்.

“அப்பா, என்னைப் பற்றி கவலைப்படவேண்டாம். நான் எனது படிப்பை வைத்து என் வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறேன். இருக்கும் சொத்தை விற்று தங்கையின் திருமணத்தை முடியுங்கள். மீதி உள்ள பணத்தை உங்கள் பெயரில் வங்கி இருப்பில் போட்டுக் கொண்டு வரும் வட்டியில் உங்களது பொருளாதார பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்…” நான் சொல்ல ஆரம்பித்ததுமே ஏதோ புரிந்தவராக எனது தாயார் உடைந்துபோய் அழ ஆரம்பித்தார். “ஏனப்பா அப்போ உன் கல்யாணம்…” தேம்பலுக்கிடையே என் தாயார் விசும்பியது என் மனதை நொறுக்கியது.

“அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் நான் சொன்னபடி தங்கையின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு முகம் திருப்பி என்னை வேறு பணியில் ஆழ்த்திக் கொண்டேன்.

என் பெற்றோரின் மன நிலையும் வேதனையும் எனக்கு நன்றாகவே புரிந்தது. எனக்கு நேர்ந்த கொடுமைகள் மற்றோரின் உணர்வுகளை மிகவும் நுணுக்கமாக அறிந்து கொள்ளும் அறிவை மிகைப் படுத்தியிருந்தது உண்மைதான்.

நான் வானத்தை நோக்கி முறையிட்டேன்.

“எனது முயற்சிகளை முடித்து விட்டேன். இனி நடக்கப்போவதற்கு நீதான் பொறுப்பு. என்னை கைதூக்கி விடுவதும், கழுத்தை இறுக்கி கதையை முடிப்பதும் இனி உன் கையில். நான் இனி உன்னிடம் சரணாகதி அடைந்தேன்…” என ஒரு சிறிய பிரார்த்தனையுடன் எனது முறையீட்டை முடித்துக் கொண்டேன்.

அதற்குப் பிறகுதான் அதிசயங்கள் நடக்க ஆரம்பித்தன.

எனது தங்கையின் திருமணத்திற்காக என் தந்தை நிலத்தை அறுபதாயிரத்திற்கு விலை பேசியவுடன், எங்களது தோட்டத்திலேயே கல் கட்டிட வேலை செய்தவர், என் தந்தையின் மீது மிக்க மதிப்பு கொண்டவர், நாற்பதாயிரம் ரூபாய்களை கொண்டுவந்து கொடுத்து என் தந்தையிடம், “நிலத்தை விற்க வேண்டாம் விற்றால் நீங்கள் மறுபடி வாங்க முடியாது. இந்த பணத்தைக் கொண்டு பாப்பாவின் கல்யாணத்தை முடியுங்கள். நீங்கள் பணத்தை திருப்பித்தரும் வரை நிலத்தை உழுது அதில் வரும் விளைச்சலை எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.

அறுபதாயிரத்திற்குப் போயிருக்க வேண்டிய நிலம் தப்பியது. அதே நிலம் பின்னாளில் பனிரண்டு லட்சத்திற்கு போனது.

என் தங்கையின் திருமணம் நடந்து முடிந்தது.

அதற்குப் பிறகு நான் எதைப் பற்றியும் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இல்லாமல் நாட்களை கடத்தப் பழகிக் கொண்டேன். எனது பெற்றோர்களும் அதே மன நிலையில் இருக்க பழகிக் கொண்டனர். இப்படி இருக்கையில் ஒருநாள் திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு கல்லூரியிலிருந்து எனக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. நேர்முகத் தேர்வு வெறும் கண் துடைப்பாகத்தான் இருக்கும் என்ற எனது முந்தைய அனுபவத்தில் நான் அதை தூரத் தள்ளி விட்டேன்.

எனது பேராசிரியரிடமும் இதைச் சொன்னேன். அவர் என்னைக் கடிந்து கொண்டார்.


“எப்போ எது மாறும்னு சொல்ல முடியாத ஒரு திரில்லர் தாண்டா வாழ்க்கை. இதை நீ எழுதுவது கிடையாது. எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கையை நிர்ணயிக்கவோ அல்லது வடிவமைக்கவோ முடியும்னா எல்லாருடைய வாழ்விலும் வெற்றி மட்டும் தான் இருக்கும் வேறெதுவும் இருக்காது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம வெறும் கடமையைச் செய்வதுதான் நமது வேலை. எது வருதோ அதை ஏத்துக்கறதுன்னு நீ முடிவெடுத்ததுக் கப்புறம் முயற்சி செய்யறதுல நீ சுணக்கம் காட்டக் கூடாது. எனக்காக இந்த நேர்முகத் தேர்வை நீ அட்டெண்ட் பண்ற. அந்த பிரின்சிபால் எனது நண்பர்னு வெச்சுக்கோ. அவரை பார்த்துட்டு வரச்சொல்லி ஒரு வேலையா உன்னை திண்டுக்கல் அனுப்பறேன்னு வெச்சுக்கோ. உடனே கிளம்பு. வேறேதும் மனசுல போட்டு குழப்பிக்காதே…” என்று சொல்லி என் கையில் மூண்று நூறு உரூபாய்களை வைத்து அழுத்தினார்.

மனதில் எனது முந்தைய அனுபவங்களின் கசப்பு நெருட, கையில் அவர் கொடுத்த பணத்தை வைத்துக் கொண்டு திண்டுக்கல் போவதா வேண்டாமா என யோசித்தேன்..”

நண்பர் பேச்சில் சற்று இடைவெளி விட நானும் மிக ஆவலாக அவரது அடுத்த வார்த்தையை எதிர்பார்த்தேன்.

 

இன்னமும் பேசுவோம்.


அன்பன்,

வேதாந்தி.

 

 

Monday, November 24, 2014

துன்பமும், தொடர்ந்ததும்…!


24.11.14

துன்பமும், தொடர்ந்ததும்…!



சற்று நேரம் அமைதியாய் இருந்த நண்பர் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவந்து பேச்சைத் தொடர்ந்தார்.

“UPASI யில் வேலை கிடைத்துவிடும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்ததால் அந்த ஏமாற்றத்தைத் தாள முடியவில்லை. மனமொடிந்து போனேன். பேராசிரியர் என்னைத் தேற்ற மிகவும் சிரமப்பட்டார். அவரும் சற்று கலங்கித்தான் போனார். அந்த UPASI இயக்குனர் இறந்த பிறகு அடுத்த இயக்குனரை நியமிக்க ஆறுமாதங்களுக்கு மேலாகி விட்டதால் அந்த தேர்வுப் பட்டியலையே நிராகரித்து விட்டனர்.

நான் இதைப் பற்றி பேசும் போது நடந்ததை அப்படியே சொல்கிறேனேயன்றி சுவாரசியத்துக்காகக்கூட கிஞ்சித்தும் உண்மையல்லாதவற்றை சொல்லவில்லை. இவை அத்தனையும் என் வாழ்வில் அப்படியே நடந்தவைகள். நடந்தவைகளை இப்போது நினைத்தாலும் என்னாலேயே நம்ப முடியவில்லைதான்.

நான் எதிர்பார்த்த வேலை எனக்குக் கிடைக்கவில்லை என்பதை அறிந்த எனது பெற்றோர், இனி இவனுக்கு வேலை கிடைக்காது என முடிவுக்கு வந்தனர். திருமணமாவது நடக்கட்டுமென்று அதற்கான முயற்சி எடுத்துக் கொண்டனர். எங்களது உறவினரில் ஒருவர், தன் பெண்ணை நான் மணந்து கொண்டால் எனக்கு சொந்தமாக ஒரு சாயத் தொழிற்சாலை வைத்துத் தருவதாகச் சொன்னார். பெண் அழகாய்த் தான் இருந்தார். ஆனால் எனக்கு மனமொப்பவில்லை. கையில் காசில்லாமல் இன்னொருத்தியை எதை நம்பி கைப்பிடிப்பது

மிகவும் குழம்பிப் போனேன்.

அந்தக் காலம் மிகக் கொடுமையான காலம்.

அது நான் எனது நம்பிக்கையை மட்டுமல்ல சுயத்தையும் இழந்த காலம். பராரியைப் போல் தெருக்களில் சுற்றினேன். என்னுடன் இருந்த நண்பர்கள் அனைவரும் அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப வேலை கிடைத்து வெளியூர் சென்றுவிட்டனர். நான் தனிமைப் படுத்தப் பட்டேன்.

மனமுடைந்து விடுவேனோ என்று எனது நிலை கண்டு தாங்கொனாது எனது நண்பர் கோபால் என்பவர், TWAD Board ல் அப்போதுதான் அவருக்கு பொறியாளராய் வேலை கிடைத்து இருந்தது, எனக்கு மாதாமாதம் நூறு உரூபாய்கள் அனுப்பி வைத்தார். அவர் மனம் கோணலாகாதென நானும் இரண்டு மூண்று மாதங்கள் பணம் பெற்றுக் கொண்டு பிறகு நாசூக்காய் அவருக்குத் தெரியப்படுத்தி அவர் பணம் அனுப்பிவைப்பதை தவிர்த்தேன்.

இந்த நிலையில் இன்னுமொரு கொடுமை எனக்கு நடந்தது. வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு கிடைக்கும் அரசின் நிவாரணத் தொகையாக மாதம் நூறு உரூபாய் ஸ்டேட் பேங்கில் அதற்கென என்னால் ஆரம்பித்து வைக்கப்பட்ட எனது கணக்கில் இட்டு வைக்கப் பட்டது. அதை ஒரு நாள் எனது நேர்முகத் தேர்வுக்கான செலவுக்காக எடுக்கச் சென்றபோது எனது கணக்கிலிருந்த அத்தனை பணத்தையும் ( அதுவரை ஒரு மூவாயிரம் உரூபாய்கள் சேர்ந்திருக்கும்) அந்த வங்கியில் பணி புரிந்த எனது நண்பரின் அண்ணார் பொய்க் கையெழுத்து போட்டு எடுத்திருந்தார்.

நான் பணம் எடுக்கச் சென்றபோது எனது கணக்கில் பணம் இல்லையென்றதும் திகைத்துப் போனேன். என் நண்பரின் அண்ணன் “ நான் தான் பணத்தை எடுத்து விட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக் கொடுத்து விடுகிறேன். இது குறித்து மேலாளரிடம் புகார் செய்யவேண்டாம்” எனக் கெஞ்சினார்.

பெருமாளும் அனுமாரும் என் நினைவுக்கு வர, எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.

எல்லாம் கைவிட்டுப் போன நிலையில் நான் இருந்தபோது என் மனம் சூன்யமாகிப் போனது. அப்போது எனக்குத் தெரிந்த வழி இரண்டுதான். ஒன்று, தற்கொலை செய்து கொள்வது. இரண்டாவது, எதையும் எதிர் நோக்காமல் உயிர் வாழ்வது.

தற்கொலை செய்து கொண்டால் நான் படித்த படிப்பு பயனற்றுப் போய்விடும் எனத் தோன்றியதால் அதைக் கைவிட்டேன்.

அதனாலேயே நான் படித்த படிப்பு மற்ற யாருக்கேனும் பயன்படட்டும் என நினைத்தேன்.

சற்று நிதானத்துடன் யோசித்தபோது எனக்கு ராமகிருஷ்ணா மடத்தினர் நடத்தும் பள்ளி நினைவுக்கு வந்தது. அவர்களது பள்ளி ஒன்று அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் தகவல் எனக்குத் தெரிந்தது. அதுமட்டுமல்ல அங்குள்ள பள்ளியில் ஆசிரியர் பற்றாக் குறையும் உள்ளது எனவும், அங்கு போய் பணி புரிய பணியாளர் யாரும் அத்தனை எளிதில் ஒப்புதல் கொடுப்பதில்லை எனவும் கேள்விப் பட்டேன். உடனே சென்னை கிளம்பினேன். மயிலாப்பூரிலுள்ள விவேகானந்தா கல்லூரிக்கு அருகிலுள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கு வந்தேன். அங்கிருந்தவர்களிடம் எனது நிலையைச் சொன்னேன். அவர்கள் அருகில் விரித்திருந்த பாயில் அமரச் சொன்னார்கள்

ஆசிரமத்தின் முக்கியமான நபருக்காக காத்திருந்தேன்.

சற்று நேரம் கழித்து ஒரு சாமியார் வந்தார். அவரைக் கண்டதும் எழுந்து நின்று கை கூப்பி வணக்கம் சொன்னேன்.

சாமியார்,“சொல்லுங்கள் என்ன வேண்டும்?” எனக் கேட்டார்

“நான் அறிவியலில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்கிறேன். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள உங்களது பள்ளியில் பணி புரிய விரும்புகிறேன். இதை சேவையாகவே செய்ய விரும்புகிறேன். தாங்கள் எனக்கு அதற்கான உத்தரவைத் தரவேண்டும்…” என்றேன்.

என்னைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தவர் மௌனமாக இருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு கண்களை மூடிக் கொண்டார். பதிலேதும் சொல்லவில்லை.

அவர் தயக்கம் காட்டியதால் நானே சற்று நேரம் கழித்து பேசினேன். “அய்யா, கல்விச் சேவை மட்டுமல்ல வேறெந்தச் சேவையாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள நான் சம்மதிக்கிறேன்,” என்றேன்.

பட்டென கண்ணைத் திறந்தவர், “உமது பெற்றோர் உள்ளனரா?” என்றார்.

“ஆமாம் அய்யா…”, என்றேன். அதைக் கேட்டதும் மறுபடி கண்களை மூடிக் கொண்டார்.

மறுபடி அமைதி. அதற்குப் பிறகு கண்களை விழித்தவர் என்னை ஆசீர்வதிப்பதைப் போல் கையை வைத்துக் கொண்டு,

“You have not received your call..” எனச் சொல்லி என்னை ‘எழுந்து போகலாம்’ என்பதைப் போல் சைகை காட்டினார்…

சம்மணம் போட்டு பாயில் அமர்ந்திருந்தவன், சாமியார் சொன்னதைக் கேட்டதும் உறைந்து போனேன்.

அவ்வளவுதானா? எல்லாம் முடிந்து விட்டதா?

உடம்பெல்லாம் சில்லிட்டுப் போனது. மெல்ல முக்கலுடன் எழுந்தவன் மிகுந்த துக்கத்துடன் மடத்தை விட்டு வெளியே வந்தேன்.

ஓ…வென அழவேண்டும் போலிருந்தது. கடற்கரைக்குச் செல்ல பேருந்தில் அமர்ந்தேன். கடற்கரையை அடைந்து கால் மணலில் புதைந்தபோதும் எனக்கு உணர்வில்லை. மரத்துப் போனது போலிருந்தது.

எதிரில் விரிந்து பரந்திருந்த கடலையும் அதைத் தழுவியபடி எழுந்து என்னை நோக்கி நுரைத்து வந்த அலைகளையும் பார்த்தபடி நின்றிருந்தேன். நான் ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பது எனக்குப் புரிந்தது.”

நண்பரது வாய்மொழி வார்த்தைகள் உள்ளார்ந்த உணர்வுகளுடன் வெளிவந்ததால் அதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் மனதைப் பிசைந்தது.

நண்பர் தொடரக் காத்திருந்தேன்.

மீண்டும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.


 

Monday, November 17, 2014

அஞ்ஞாதவாசமும், அதற்குப்பின் நடந்ததும்…!


17.11.14

அஞ்ஞாதவாசமும், அதற்குப்பின் நடந்ததும்…!


முன் நிகழ்வுக்கு: ஏழரைச் சனியும் எடுக்கும் முடிவுகளும்...!
எண்ணத் தெளிவில்லாமல், உணர்வுகள் மட்டுமே முன்னிலையில் நின்று உந்தி ஒரு முடிவெடுத்ததனால் எனது நண்பர் மிகுந்த கடுமையான காலங்களை ஆதரவின்றி கடக்க வேண்டியிருந்தது.
 
முடிவெடுப்பதைப் பற்றி ஏற்கனவே ஒரு பேச்சில் பேசியிருக்கிறேன். அதில் முக்கியமான முடிவுகள் எப்போதும் அறிவு சார்ந்தே எடுக்க வேண்டுமன்றி உந்துதலாலோ அல்லது உணர்வுகளின் மிகுதியாலோ ஒரு முடிவெடுப்பது சிக்கலை உருவாக்கும் என்பதையும் பார்த்திருக்கிறோம்.

நண்பரது நிலையும் அப்படியே ஆனது. அவரது முடிவில் உணர்வுகளே முதல் நிலை பெற்றது. அது மட்டுமல்லாமல் முடிவெடுக்கத் தேவையாண காரணிகளை மறுமுறையும் உறுதிப் படுத்திக் கொள்ள அவர் முயலவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான முடிவுகளுக்குத் தேவையான சிந்தனைக்கு ஒரு incubation time அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் அந்தச் சூழலை ஒரு பொறுமையுடன் அணுகியிருந்தாரென்றால் அவர் எடுத்த முடிவு வேறாயிருக்கலாம்.

எப்படியோ நடந்து விட்டது. அதற்குப் பின்னர் நண்பர் சந்தித்தவைகளை அவர் மொழியாகவே தருகிறேன்.

“நான் எடுத்த முடிவு தவறானது என்பது எனக்கு சற்று காலம் தாழ்த்தியே புலப்பட்டது. வறுமை தன் பிடியினை இறுக்க ஆரம்பிக்க எனது பெற்றோர் எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தனர்.

நேர் முகத் தேர்வுகள் வரும். ஆனால் அங்கு சென்றால் எனது சாதியைக் கேட்டனர். நான் தாழ்த்தப்பட்டவனென்றால் அரசாங்கம் எனை தத்தெடுத்துக் கொண்டிருக்கும். அல்லது சமுதாயத்தில் ஒரு வலிமையான சாதியைச் சேர்ந்தவனென்றால் அந்த சாதிக் கட்டமைப்பு எனைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கும். இது இரண்டும் இல்லாததால் நான் அவதிப் பட்டேன்.

ஒருமுறை கடலூர் அருகே உள்ள ஒரு பள்ளிக்கு மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. நேர்முகத் தேர்வில் வெட்கமின்றிச் சொன்னார்கள். “ இது பருவதராஜ குலத்தினர் நடத்தும் பள்ளி. எனவே எங்களுக்கு அந்தச் சமூகத்திலிருந்துதான் ஆட்கள் வேண்டும்..” என்றனர். “அப்படியென்றால் என்னை ஏன் நேர்முகத் தேர்வுக்கு அழைத்தீர்கள்?” என்றேன். “ அதுதான் procedure. அதனால் தான் அழைத்தோம்”, என்ற அவர்களைப் பார்த்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. அந்த நேர்முகத் தேர்வுக்கான பயணச் செலவுக்கு நான் எத்துனை சிரமப் பட்டிருப்பேன் என்பதை கொஞ்சமும் நினைத்துப் பாராத அநாகரிகம் மற்றும் தங்கள் சமூகத்தினர் படிக்கும் பள்ளிக்கு ஒரு நல்ல ஆசிரியரைப் போட்டால் வளரும் மாணவர்களில் அதிகமான பேர் பலனடைவார்கள் மாறாக தமது சமூகத்தைச் சார்ந்தவர் என்பதனாலேயே தேர்வு செய்தால் பணி கிட்டிய நபர் மட்டுமே பயனடைவார் என்ற அடிப்படை சித்தாந்தத்தில் ஒரு தெளிவின்மை ஆகிய எல்லாமே எனக்கு பொட்டிலடித்தாற்போல இருந்தது.

இந்தக் கேள்விகளுக்கு முன்னால் நான் வேண்டாமென்று சொன்ன பள்ளியின் முதல்வர் என்னிடம் கேட்டுக் கொண்டவை மிகுந்த நாகரிகமானவைகளாகத் தெரிந்தது. அது ஒரு கிருத்துவப் பள்ளியாக இருந்தும் நான் கிருத்துவனல்ல என்பது தெரிந்தும் வந்திருந்தவர்களில் திறமையானவன் என்பதை மட்டுமே வைத்து என்னைத் தேர்வு செய்த அந்த வெளிநாட்டுப் பாதிரிமார்கள் எத்துனை போற்றத் தகுந்தவர்கள்..!


அதற்கப்புறமென்ன, நான் படித்தவன் என்கின்ற சிந்தனையையே நாட்கள் செல்லச் செல்ல இழக்க ஆரம்பித்தேன். எனது இளநிலைக் கல்லூரி ஆசிரியர், பழனியப்பன் என்பவர், எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் என்னை வழிநடத்தவும் அவரது அன்பு எனக்கு மிகுந்த உதவியாக இருந்தது. அந்தக் காலத்தில் அவரது அன்பும் ஆதரவும் இல்லாமலிருந்திருந்தால் நான் எப்போதோ depression க்கு பலியாகியிருப்பேன்.

காலையில் எழுந்து குளித்துவிட்டு அங்கிருக்கும் மாவட்ட நூலகத்திற்குச் சென்று கிடைக்கும் புத்தகங்கள் மற்றும் மாத, வார இதழ்களையும் நாளிதழ்களையும் படித்து முடித்துவிட்டு மாலை ஏழு மணிக்கு பேராசிரியரின் வீட்டிற்குச் செல்வேன். என்னை வரவேற்று பேசிக் கொண்டிருப்பார். இரவு ஒன்பது மணி வாக்கில்தான் வீடு திரும்புவேன். இரவுச் சாப்பாட்டுடன் என் வீட்டினர் மனமொடிந்து இருப்பர். அந்த ஒரு நேரச் சாப்பாடு கூட பெரும்பாலான நாட்களில் பேராசிரியரின் வீட்டில்தான். மறுநாளும் இதே சுற்று.

எத்தனையோ பள்ளிகள், கல்லூரிகளில் நேர்காணல் நடந்தது. ஆனால் அந்த நாடார்களுக்கும் வன்னியர் பெருமக்களுக்கும் தங்களது பள்ளி, கல்லூரிகளுக்கு பணியாற்ற தங்கள் சமூகத்தினர் தான் தேவைப்பட்டனரே ஒழிய அவர்களுக்கு திறமை தேவைப்படவில்லை. எனக்கு சமுதாயத்தின் மீதே வெறுப்பு வந்தது.

இப்படி இருக்கையில்தான் இந்தச் சமுதாயத்துடன் காலமும் சேர்ந்து கொண்டு என்னைச் சூதில் வீழ்த்துகிறது என நான் கண்டுகொள்ளும்படிக்கு அந்தச் சம்பவம் நடந்தது.

எனது பரிதாப நிலை கண்ட பேராசிரியர் எனது கல்வித் தகுதிக்கேற்ப ஒரு வேலை ஊட்டியில் பெற்றுத் தரும்படிக்கு தனக்குத் தெரிந்தவரிடம் சிபாரிசு செய்து அதன் படியே அங்கிருந்து எனக்கு நேர்முகத் தேர்வு வந்தது.

நேர்முகத் தேர்வும் நன்றாகவே நடந்தது. அது ஒரு semi government organization என்று நினைக்கிறேன். UPASI (United Planters Association of Southern India) என்பது அது. அதில் மிக முக்கியமான பொறுப்பைக் கொண்ட entomologist வேலை. பூச்சியியல் படித்திருந்ததனால் அந்த வேலை எனது படிப்பிற்குத் தொடர்புள்ளதாய் இருந்தது. அந்த நிறுவனத்தின் இயக்குனருக்கு என்னைப் பிடித்துப் போயிற்று. வெகுவாகப் பாராட்டினார். உடனே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்புவதாகச் சொன்னார்.

மிகுந்த மகிழ்வுடன் வீடு திரும்பியவன் பேராசிரியருக்கு நன்றியைச் சொன்னேன். வேலை கிடைத்துவிடும் என வீட்டிலுள்ளோரிடமும் சொன்னேன். பேராசிரியர் அந்த மலைப் பிரதேசத்தில் போய் வரச் சௌகரியமாக இருக்க புல்லட் ஓட்டக் கற்றுக் கொள் என்றார். கை நிறையச் சம்பளம், தங்குவதற்கும் சாப்பாட்டிற்கும் கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்..

கனவில் மிதந்தேன்.

நாட்கள் கடந்தன. வாரங்கள் கடந்தன. மாதமும் இரண்டாயிற்று. வேலைக்கான உத்தரவு வரவில்லை.

பேராசிரியர் அவரது நண்பரை விசாரித்த போதுதான் தெரிய வந்தது. UPASI யின் இயக்குனர் என்னைத் தேர்வு செய்து வேலைக்கான உத்தரவை தயார் செய்து அது கையொப்பத்திற்கு காத்திருந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்ந்தவர் அங்கேயே சிகிச்சை பலனளிக்காது இறந்து விட்டார்.

 
இதைக் கேட்டதும் இடி இறங்கினார்ப்போல் ஆகிவிட்டது."


அது வரை பேசிய நண்பர் அமைதியானார். அவரது முகம், நெஞ்சில் தேங்கியிருந்த சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.  நான் அமைதியாக அவரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் மீண்டும் வாய் திறக்கக் காத்திருந்தேன்.


இன்னமும் பேசுவோம்.

 
அன்பன்,
வேதாந்தி.

 
 

 
 
 

Wednesday, November 12, 2014

ஏழரைச் சனியும், எடுக்கும் முடிவுகளும்…




12.11.14


ஏழரைச் சனியும், எடுக்கும் முடிவுகளும்…

 
இது வரை உளவியல் பேசியவன் இப்போது உளருகிறானே எனப் பார்க்கிறீர்களா?

இது ஒரு வகையில் உண்மைதான். இறைவன் தனக்குள் இருக்கிறான் என ஒருவன் நம்பினால் அதற்கு எதிரான சக்தியும் தனக்குள் இருப்பதையும் ஒருவன் நம்பித்தான் ஆகவேண்டும். இதுதான் கடவுள் பாதி மிருகம் பாதி என்பது.


அதாவது ஒருவன் மனத்தெளிவுடன் இருப்பானேயானால் அவனது சிந்தனைகளும் செயல்களும் நிதானத்துடனும் தெளிவுடனும் இருக்கும். இந்த மனத் தெளிவு என்பது cause and effect பற்றி அறிந்திருப்பது மட்டுமல்ல. நம்மையும் நம்மை மீறிய சில காரியங்களையும் பற்றி அறிந்திருப்பதும்தான் நான் குறிப்பிடும் மனத் தெளிவு. இது குறித்து இன்னுமொரு சமயத்தில் விளக்கமாக பேசுகிறேன். இப்போது நான் சொல்ல வந்தது வேறு. எனது நண்பரது வாழ்வில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு.

அவர் அறிவியலில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு வந்த புதிது. 1978 ம் வருடம் என்று நினைக்கிறேன். 1979,80 களில் Pre University Certificate (PUC) system மாறி Higher Secondary System வந்திருந்த காலம். பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் நிறையத் தேவைப்பட்டனர்.அந்த நேரத்தில் வேலையில்லாக் கொடுமையும் அதிகம். கமலஹாசனின் வறுமையின் நிறம் சிவப்பு வெளிவந்து அது அன்றைய கால கட்டத்தை பிரதிபலித்ததால் சக்கை போடு போட்ட காலம். நண்பரது வீட்டிலும் வறுமை தன் கோர முகத்தை சன்னல் வழியே எட்டிக் காட்டிக் கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் அது எட்டி உள்ளே வந்து ஒவ்வொருவரிடமும் உரையாடலில் ஈடுபட்டுவிடும் என்கின்ற நிலைமை.


(Hard times by Lois Bryan)

ஒரு குடும்பத்தில், வறுமை வாசல் வழியாக வந்தால் அன்பும் சந்தோசமும் சன்னல் வழியாக பறந்துவிடும் என்று ஒரு பழமொழி உண்டு. நண்பரது வீட்டிலும் அது எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற நிலை. ஆனால் விதி வேலை செய்த விதத்தைப் பாருங்கள். வீட்டிலுள்ள அனைவருக்கும் தெரிந்த இந்த நிலைமை நண்பருக்கு தெரியவில்லை. அவரது தாயார், செல்லமாக வளர்ந்த பிள்ளை திடீரென வறுமையைக் கண்டு மனமொடிந்து விடுவான் என்று குடும்பத்தின் கடன் சுமையிலிருந்து எல்லாவற்றையும் மறைத்து வைத்திருந்தார். நண்பரும் தான் முது நிலை அறிவியல் படிப்பு படித்து முடித்து விட்டதனால் நல்லதொரு வேலை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.

இந்த நிலையில்தான் அவருக்கு ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளியிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. நண்பரும் சென்றார். வந்திருந்த 30 பேர்களில் அங்கிருந்த வெளிநாட்டு பாதிரிமார்கள் இவரைத் தேர்வு செய்தனர். உடனே அந்தப் பள்ளியின் முதல்வர் நண்பரை காத்திருக்கச் சொல்லி பணிக்கான ஆணையைக் கொடுத்தார். ஆனால் அவர் ஆணையை அறையில் அழைத்துக் கொடுக்கும் போது ஒரு நாகரிகமற்ற செயலைச் செய்தார். ஒரு மனிதனாகவும், ஒரு கல்வியாளராகவும், ஒரு கிருத்துவப் பள்ளியின் முதல்வராகவும் அவர் செய்த செயல் இன்றைக்கும் மனதை வருடுகிறது.


என் நண்பர் இரண்டு சோடி உடைகள் மட்டும் தான் வைத்திருந்தார். அவைகளையே மாற்றி மாற்றி அணிந்ததால் அவர் அணிந்திருந்த Pant முன்னம் பகுதியில் வெளுத்திருந்தது. சட்டையும் அப்படியே. மேலும் காலில் ஹவாய் செப்பலை அணிந்திருந்தார். 1970 களில் அது சாதாரணம். ஒருவன் ஹவாய் செப்பல் இல்லாமல் செருப்பு அணிகிறான் என்றால் கொஞ்சம் செல்வாக்கு உள்ளவன் என அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அந்தப் பள்ளியின் முதல்வர் என் நண்பரிடம்,” நாளையிலிருந்து நீங்கள்  பணிக்கு வந்து விடுங்கள். ஆனால் இப்படி பாத் ரூம் செப்பல் அணிந்து வரவேண்டாம். இது மிகவும் பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளி..” என்று சொல்ல நண்பர் மிகவும் சங்கடமான சூழ்நிலைக்குச் சென்று குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டார்.

பள்ளி முதல்வரின் அறையை விட்டு வந்ததும் இவரது துறை சார்ந்த ஒரு ஆசிரியர் இவரை அழைத்துக் கொண்டுபோய் அடுத்த நாள் பாடமெடுக்கத் தேவையான புத்தகங்களை இவருக்கு எடுத்துக் கொடுத்தார். மேலும் கால அட்டவணைப் பிரதியையும் கொடுத்தார். அதற்குப் பின் அந்த ஆசிரியர், “சார், இன்றைக்கு ஆடிட்டோரியத்தில் மூவி புரோக்கிராம் இருக்கிறது. பார்த்துவிட்டுச் செல்லலாமே..”என்றவுடன் நண்பரும் அந்த ஆசிரியருடன் ஆடிட்டோரியம் சென்று ஆசிரியர்களின் வரிசையில் அமர்ந்தார்.

மனம் திரையில் லயிக்கவில்லை. பள்ளி முதல்வர் சொன்ன வார்த்தைகள் நண்பரின் மனதில் சுற்றிச் சுழன்று புழுதியைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒரு மாணவன் நண்பரது அருகில் அமர்ந்திருந்த ஆசிரியரிடம் ஒற்றை விரலை நீட்டி, “சார், பாத்ரூம் போகனும்” என்றான்.

“பாத்ரூம்” என்ற வார்த்தையைக் கேட்டதுமே நண்பருக்கு யாரோ தன் மண்டையை பிளக்கிறார்ப்போல் இருந்தது.

“பாத்ரூம்” என்கின்ற வார்த்தைக்கு ‘குளியல் அறை’ எனும் பொருளோடு ‘கழிப்பிடம்’ என்கின்ற பொருளும் உண்டு என்று உறைத்தவுடன் நண்பருக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை.

சட சடவெனக் கிளம்பி ஆடிட்டோரியத்தை விட்டு வெளியேறினார்.

வீடு வந்து சேர்ந்த போதும் மனம் அடங்கவில்லை. ‘கழிப்பிடம் செல்ல போட்டுக் கொள்ளும் செப்பலை போட்டிருக்கிறான்’ என்று கீழ்த்தரமாக சொல்லிவிட்டார்களே என வெம்பினார், வெதும்பினார். தன் மீதே அவருக்கு ஒரு வெறுப்பு வந்தது.

உடனே தான் பள்ளியிலிருந்து கொண்டுவந்திருந்த புத்தகங்களை கையில் எடுத்துக் கொண்டு அருகில்  இருக்கும் தன் நண்பரையும் அழைத்துக் கொண்டு தலைமை அஞ்சலகம் நோக்கி நடை போட ஆரம்பித்தார்.

வழியெல்லாம் நண்பரிடம் ஒரே புலம்பல். நண்பர் சமாதானம் சொல்லியபடியே வர எதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை. “இரப்பா.. நாளை உன்னை அந்தப் பள்ளியைப் பற்றி நன்கு அறிந்த எனக்குத் தெரிந்த ஒருவரிடம் அழைத்துச் செல்கிறேன். அப்புறமாக ஒரு முடிவுக்கு வரலாம். அவசரப்படாதே…”என்றார். ஆனால் நண்பரது காதில் அது விழுந்ததாகத் தெரியவில்லை.

“அது ஒரு கிருத்தவ மெட்ரிகுலேசன் பள்ளியாதலால் டிரஸ் கோட் பற்றி மிகவும் அக்கறை கொண்டிருக்கலாம். எனவே அந்தப் பள்ளி முதல்வர் உன்னிடம் அக்கரை எடுத்துக் கொண்டு உன் ஆடையைப் பற்றி சொல்லியிருக்கலாம். கொஞ்சம் நிதானமாக இரு….”

“நீ சொல்கிறபடி என் மீது அக்கறை கொண்டிருந்தால், அல்லது உண்மையாலுமே கிருத்தவ கொள்கைகளில் அக்கறை கொண்டிருந்தால் என் ஏழ்மையை விமரிசித்திருக்கக் கூடாதல்லவா? டிரஸ் கோட் பற்றி நினைத்திருந்தால் பள்ளி முதல்வர் எனக்கு முன்பணமாக ஒரு தொகையைக் கொடுத்து நாளைக்கு காலணிகளை மாற்றி அணிந்து வரச் சொல்லியிருக்கலாம். புத்தாடை வாங்க உதவியிருக்கலாம். ஆனால் இதெல்லாம் செய்யாமல் என்னை கீழ்த்தரப்படுத்திவிட்டாரே.. அப்படியே அது பெரும் பணக்காரர்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளியென்றாலும் அவர்கள் காரில் வரும்போது, ஆசிரியன் என்பதால் நான் அதை விட விலை உயர்ந்த காரில்தான் வரவேண்டும் என்றால் அது நடக்குமா..? என்னை வகுப்பெடுக்கச் சொல்லி என் திறமையை மெச்சித்தானே அத்தனை பேரில் எனக்கு இந்த வேலையைக் கொடுத்தனர். அப்புறம் ஏன் இப்படி?”, எனப் பலவாராக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியபடி வந்தவர், தலைமை அஞ்சலகத்தை அடைந்தவுடன் தன் கையிலிருந்த புத்தகங்களை ஒரு பார்சலாக கட்டினார்.

மட மட வென ஒரு வெள்ளைத் தாளை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

“அய்யா, நான் உங்கள் பள்ளியில் பணிபுரிய தகுதியற்றவன். என்னிடம் நல்ல செருப்போ அல்லது ஆடையோ கிடையாது. எனவே அந்த வேலையை ஒரு செருப்புக் கடைக்காரனுக்கோ அல்லது துணிக்கடைக்காரனுக்கோ கொடுங்கள். அதுவே உங்களால் மெச்சப்படும்.” என எழுதி அதை அந்தப் புத்தகப் பார்சலில் வைத்து பள்ளித் தலைமை ஆசிரியருக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைத்தார்.

அவருடன் சென்ற நண்பர் மனம் ஒப்பாது அவரை அடுத்த நாள் அந்தப் பள்ளியைப் பற்றி நன்கு அறிந்த தனது இன்னொரு நண்பரிடம் அழைத்துச் சென்று நடந்ததைச் சொன்னபோது அந்த நண்பர் மிக்க வருத்தப் பட்டுச் சொன்னார், “அடாடா… அவசரப் பட்டு விட்டீர்களே. நீங்கள் பார்த்த நபர் பள்ளி முதல்வரல்ல. பள்ளி முதல்வர் வெளிநாடு சென்றிருக்கிறார். வர இரண்டு மாதங்களாகும். அவர் மிக்க நல்லவர். இனிமையானவர். திறமைக்கு மதிப்பளிக்கக் கூடியவர். நிச்சயமாய் அவர் உங்களுக்கு முன்பணம் அளித்தோ அல்லது வேறெந்த வகையிலோ உதவியிருப்பார். நீங்கள் சந்தித்த நபர் பள்ளி முதல்வர் பொறுப்பிலிருப்பவர். அவர் எப்போதுமே அப்படித்தான். மனிதரை மதிக்கத் தெரியாதவர். அவரது பேச்சை பெரிதாக எண்ணி நல்ல வேலையை இழந்து விட்டீர்களே… இது கிடைத்திருந்தால் நல்ல சம்பளம். உள்ளூரிலேயே தாய் தந்தையருடன் இருக்கலாம். அதுமட்டுமல்ல வருடம் ஒருமுறை வெளிநாடு செல்லும் சந்தர்ப்பமும் கிடைக்கும்….”

அடுக்கடுக்காய் அவர் சொல்லிக் கொண்டே செல்ல நண்பருக்கு அழுவதா இல்லை சிரிப்பதா எனத் தெரியவில்லை.

தன் எதிரில் இருந்த சூழலையும் தனது நிலையையும் சரியாக எடை போட்டு முடிவெடுக்காதபடிக்கு தன் மன நிலையை மாற்றியது எது? ‘பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ எனும் பழமொழியைத் தான் அறிந்தும்  தன்மானம் பெரிது என தன்னைத் தூண்டிச் சீண்டி மிகைப்படுத்தி முடிவெடுக்கச் சொன்னது எது?

தான் எடுத்த தவறான முடிவினால் எட்டு வருடங்கள் வேலையின்றி வறுமையின் பிடியில் குடும்பம் பரிதவிக்க கையறு நிலையில் தவித்தார்.

தெளிவான சிந்தனையும் பொறுமையும் இழந்து முடிவெடுத்த நண்பருக்கு உண்மையிலேயே ஏழரைதான்.



ஆனால் இதே நண்பருக்கு ஒரு வியப்பான அனுபவமும் அந்த எட்டு வருடங்கள் கழிந்தவுடன் நடந்தது. அந்த நேரத்தில் அனுபவம் அவரை பழுக்க வைத்திருந்தது. அதை அவரது வாய் மொழியாகவே அடுத்த பேச்சில் காண்போம்.

இதைத் தொடர: அஞ்ஞாதவாசமும் அதற்குப்பின் நடந்ததும்...!
 



அன்பன்,

வேதாந்தி.

 

 

 
Related Posts Plugin for WordPress, Blogger...