Followers

Friday, August 28, 2015

சமூக நீதின்னா இது தானா? நறுக்குன்னு நாலு கேள்வி…


28.8.15

சமூக நீதின்னா இது தானா? நறுக்குன்னு நாலு கேள்வி…



 
 
கடந்த 27.8.15 வியாழக்கிழமையன்று தந்தி தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. விவாதம் இட ஒதுக்கீடு பற்றியது. தந்தி தொலைக்காட்சியின் தலைமைச் செய்தியாளரான ரங்கராஜ் பாண்டே விவாதத்தை எடுத்து நடத்திச் சென்று கொண்டிருந்தார்.

அன்றைய தேதியில் அகமதாபாதில் ஹார்திக் படேல் குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டு முறையை விமரிசித்து நடத்திய போராட்டமும் போராட்டத்தால் விளைந்த கலவரத்தை ஒடுக்க அழைக்கப்பட்ட ராணுவமும், போராட்டத்தில் விளைந்த உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் மிகவும் சூடான செய்தியாக இருந்தது.

இங்கு நான் இட ஒதுக்கீடு பற்றியோ அல்லது சாதி பற்றியோ அல்லது தீண்டாமை பற்றியோ பேசவில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை.

எனது இளமைக்காலத்தில் குழுவாகச் சேர்ந்து கொண்டு ஆரியமும் திராவிடமும் பற்றி விவாதங்கள் நடக்கும். அப்போது யார் எதைச் சொல்கிறார்களோ அதுவே எங்களது அனுபவமாக எடுத்துக் கொண்ட காலமது. எங்கள் குழுவில் ஒருவர், பிராமணர்கள் எல்லாம் ஆரியர்களென்றும் அவர்கள் குழுவாக சேர்ந்து கொண்டு எளியவர்களான நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கின்றனர் என்றும் சொல்லுவார். காங்கிரசு அதற்கு துணை போகிறது என்பார். ‘நீங்கள் எந்த அலுவலகத்திற்குப் போனாலும் அங்கிருக்கும் பிராமணர் முதலில் உங்களிடம் பேச்சுக் கொடுத்து நீங்கள் பிராமணரா என்றறிய முயலுவார். அந்த முயற்சி தோற்றுப் போனால் உங்கள் அருகில் வந்து உங்கள் தோளில் கை போட்டு பூனூல் இருக்கிறதா என்றறியும் வகையில் முதுகை தடவிக் கொடுப்பார். இதெல்லாம் தெரிந்து கொண்டபிறகுதான் உங்கள் வேலையை செய்யலாமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுப்பார்’… என்றெல்லாம் சொல்லுவார்.

‘சமூக நீதி வேண்டும். எனவே நாம் திராவிடக் கட்சிகளையே ஆதரிக்க வேண்டும்’ என்பார்.

இது எங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான விவாதமாயிருந்ததால் நாங்களும் பதிலுக்கு காமராசரைப் பற்றிச் சொல்லுவோம்.

‘இப்போது கல்லூரிப் படிப்பு வரை கல்வி இலவசமாக கிடைக்கிறதே..இது இல்லாவிட்டால் நாமெல்லாம் படிக்க முடியாதே.. என்போம். அதுதான் உண்மையும் கூட. அது மட்டுமல்ல காமராசரின் மதிய உணவுத்திட்டம் எத்தனையோ பிள்ளைகளை காப்பாற்றி அவர்களுக்கு கல்வியும் அளித்ததும் இன்றைக்கும் மறுக்க முடியாத ஒரு உண்மை.

அதற்கு அவர் ‘இதெல்லாம் அரசின் வேலை. கல்வியைத் தருவது அவர்களது கடமை. எனவே அதனை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது’ என்பார்.

அதையெல்லாம் ஒரு வித மயக்கத்தோடு தேவ வாக்காய் கேட்போம்.

ஆனால் காலங்கள் மாறி எங்களுக்கும் வேலை கிடைத்து அலுவலகம் சென்று நகர வாழ்க்கையை அனுபவித்த போது எங்களுக்கு கிடைத்த அனுபவம் வேறு. எல்லாம் தலை கீழாக இருந்தது. குழு குழுவாக சமுதாய அமைப்பினரின் அச்சுறுத்துதலுக்கு ஆளாக வேண்டியிருந்தது. கிராமத்தில் மேட்டுக் குடியினர் செய்வதை விட நகரத்தில் இந்தக் கொடுமையான அச்சுறுத்துதலுக்கு எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியிருந்தது ஒரு புது அனுபவம். இதுவே வெறும் பேச்சுக்களை மட்டுமே நம்பி நாம் சித்தாந்தங்களை  பிடியாய் பிடித்து வளர்த்துக் கொள்ளலாகாது என்பதை உணர்த்தியது.

 
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாய்த் தெரிந்தது. காமராசர் அன்றைக்கு இலவசமாக கல்வியைத் தராமல் இருந்திருந்தாரானால் இன்று எந்தச் சமூகத்தினரும் முன்னேறி இருக்க முடியாது. இட ஒதுக்கீட்டை செயல் படுத்தினாலும் பயனின்றிப் போயிருக்கும்.

இன்றைய அரசு கல்வி தருவதை தனது கடமையாகக் கருதாதது ஒரு பெரிய சமுதாய இழப்பு. கல்வியை விட கண்ணும் கருத்துமாய் மதுக்கடைகளை ஆரம்பித்து குடிமகன்களை பெருமையோடு பொறுப்புடன் கவனித்துக் கொண்டிருப்பது மிகப் பெரிய சமுதாயக் கேடு.

 
ஆனால் அன்றைக்கு அரசு தந்த கல்வியை, ‘அது அவர்களது கடமை’ என்று போற்றலின்றி ஒதுக்கினோம்.

சாதி களைப் பற்றி வெளியே சொல்லாமல் சமுதாயக் கேடுகளை களைவதில் முனைப்பு காட்டியவரை அருமை பாராட்டாது விட்டோம். இதற்கு அந்த அரசை மதிப்பீடு செய்ய மற்றொரு அரசின் செயலைத் தெரிந்து வைக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனாலும் நம்பி அமர்த்தியவர்கள் சமுதாய நீதி பாராட்டுகிறோம் என்று சொல்லி குடும்பத்திற்கும் உறவிற்கும் நட்புக்குமாக போட்டி போட்டுக் கொண்டு சொத்தைச் சுரண்டிச் சேர்க்க அனுமதித்தபின் நமக்கு புத்தி வந்து என்ன பயன்?

சாதியை வலுவான ஆயுதமாக தெரிந்தெடுத்து மக்களை திசை திருப்பி குழு சேர்ப்பதற்கு சமீபமாக முயற்சிகள் நடக்கின்றன.

1976ல் மரங்களை வெட்டிப்போட்டு பாதைகளை அடைத்து வன்முறையையும் கலவரத்தையும் தூண்டி திராவிடக் கட்சிகளுக்கு தங்களது ‘பலத்தை’க் காட்டி தன்னை வளர்த்துக் கொண்டு மத்திய அமைச்சராகவும் இருந்து ஊழலிலும் சளைத்தவர்களல்ல என்று தங்களை வெளிப்படுத்தியவர்கள், ‘மாற்றம் வேண்டும். நாங்கள் முதலமைச்சராக வேண்டும்’ என்கின்றனர்.

நலிந்தோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் நாங்கள்தான் பிரதிநிதிகள் என்று சொல்லி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தவர்கள் இப்போது, ‘நாங்கள் ஒரு சாதிக் கட்சியல்ல. சமுதாய நீதியை நிலைநாட்டும் கட்சி’ என்று தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, ‘இனி கூட்டணி அமைத்தால் அரசிலும் பங்கு கேட்போம்’ என்கின்றனர். திடீரென எல்லோருக்கும் ரட்சகராக மாறிவிட்டனர்.

இத்தகைய கட்சியின் தலைவர்களெல்லாம் திரு.ரங்கராஜ் பாண்டேவிடம் சிக்கி பலமாக மூக்குடைபடுவதும் ஆனால் அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் அவர்கள் நகர்வதும் பார்க்க வியப்பாய் இருக்கும்.

அப்படித்தான் இருந்தது நான் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட விவாதம். பொருளாதார முன்னேற்றத்தையும் ஒரு அளவுகோலாக இட ஒதுக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளலாமா என்று திரு. பாண்டே கேட்ட போது பா ம கா வழக்கறிஞர் திரு. மணி ஆவேசத்துடன் மறுத்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திரு.வன்னியரசும் அதே வேகத்தோடு மறுத்தார்.

 
 
‘ஏன் பொருளாதார முன்னேற்றத்தை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளக் கூடாது? பொருளாதாரம் சாதிகளை புறக்கணித்து விடுமல்லவா? எனக்குத் தெரிந்த இரண்டு I A S அதிகாரிகளின் குடும்பம் கலப்புத் திருமணம் செய்து கொண்டு ஒரே I A S சாதியாகி விட்டார்களே.. எனவே பொருளாதார முன்னேற்றம் எல்லாவற்றையும் மாற்றிவிடுமே..’ என்றார்.

அதை மறுத்த திரு. வன்னியரசு சற்றே ஆவேசத்துடன், ‘இல்லை. நமது சமுதாயம் சாதிக் கட்டில் இருப்பதால் இங்கு சமூக நீதி மறுக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுவிட்டால் அவருக்கு உயர் சாதிக் காரர்கள் பெண் கொடுப்பார்களா?’ என்றார்.

அந்தச் சமயத்தில்தான் ரங்கராஜ் பாண்டே அதே வேகத்தில் நறுக்கென்று கேட்டார்.

‘அப்போ சமுக நீதிங்கறது அடுத்தவன் வீட்டுப் பொண்ணை கல்யாணம் பண்றதுதானா?’

 
 
பளிச் சென கேட்டுவிட்டு அதே வேகத்துடன் விவாதத்தில் நகர்ந்தார்.

ஆனால் என் மனதில் இருந்து அந்தக் கேள்வி நகரவில்லை. சமூக நீதி என்பது இதுதானா?

இதையெல்லாம் பார்க்கும்போதுதான் மனது பதறுகிறது. நல்ல தலைவர்களை போற்ற மறந்து விட்டோம். நாடு பிழைக்குமா?

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.
 
 
 
 

Saturday, August 22, 2015

காக்கா முட்டையும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைத் தத்துவமும்..


22.8.15

காக்கா முட்டையும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைத் தத்துவமும்..



பொதுவாகவே நான் திரைப்படங்களைப் பற்றி அவ்வளவாக எழுதுவதில்லை. அதற்கு ஒன்றும் பெரிய காரணங்கள் கிடையாது. ஒன்று ஜன ரஞ்சக சினிமாக்கள் மிகவும் சினிமாத்தனமாக இருக்கும், மற்றொன்று கலைப்படங்கள் புரியாமல் போய் விடவும் வாய்ப்புண்டு.

தொலைக்காட்சிகளில் வரும் கலந்துரையாடலின்போது திரைப்படத் துறையைச் சார்ந்த சிலர் சினிமாக்களில் வரும் வன்முறை, போக்கிரித்தனம் அல்லது பெண்களை கொச்சைப்படுத்துவது போன்றவைகளைப் பற்றி பேசும் போது தாங்கள் சமுதாயத்தை பிரதிபலிப்பதாகவும் எனவே குற்றம் தங்களிடம் இல்லை எனவும் சொல்வதைக் கேட்கும்போது எரிச்சலாக வரும்.

இருந்தாலும் முன்பு தூர் தர்ஷனில் இரவு நேரங்களில் வரும் தேசிய அளவில் பரிசுகள் பெற்ற படங்களைப்பார்த்து (ஆங்கிலத்தில் sub title களுடன்) நான் லயித்துப்போன சந்தர்ப்பங்களும் உண்டு. இத்தகைய படங்கள் மனிதர்களின் உயர்வான குணங்களை போற்றத் தவறுவதில்லை. எவரையும் தரம் தாழ்த்தி காட்சிப்படுத்துவதும் இல்லை.

அத்தகைய ஒரு சந்தர்ப்பமாக வாய்த்தது நான் ‘காக்கா முட்டை’ படம் பார்த்தது. தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்.

பிள்ளைகளை மிகவும் இயற்கையாக விட்டு படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

இரு சிறுவர்களை வைத்து ஒரு பெரும் வாழ்க்கைத் தத்துவத்தை இயல்பாக நம் முன்னே வைத்திருக்கிறார்.

நான் படத்தின் மற்ற செய்திகளை விளக்கி நேரத்தை வீணாக்காமல் கீழே குறிப்பிட்டவைகளை மட்டும் இயக்குனரை பாராட்டும் பொருட்டும்,  அனைவருக்கும் இந்த அழகான வாழ்க்கைத் தத்துவம் போய்ச் சேரும் பொருட்டும் சொல்லிச் செல்ல விரும்புகிறேன்.

வாழ்க்கைத் தத்துவமும் படத்தில் வரும் காட்சிகளும்:

1.   வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தனது அனுபவங்களைப் பொறுத்தும் அறிவைப் பொறுத்தும் சூழலின் உந்துதலைப் பொறுத்தும் ஒரு இலக்கை நிச்சயிக்கவேண்டும். படத்தில் சிறுவர்கள் பிட்சா சாப்பிடும் அனுபவத்தை அடைய விரும்புகின்றனர்.

 

2.   இலக்கை நிச்சயித்தபின்னர் இலக்கை நோக்கி விவேகானந்தரின் வாக்கைப் போல யாரையும் எதையும் எதிர்பாராது நாம் நகர ஆரம்பித்தால் வழி தானாக கிடைக்க ஆரம்பித்துவிடும். படத்தில் பிள்ளைகள் கரித்துண்டுகளை பொறுக்குவதில் ஆரம்பித்து குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவர்களை வீட்டில் சேர்ப்பது வரை எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

 



3. இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கம் நம் வாழ்வை ஊக்குவித்து நம்மை உயர வைக்க வேண்டுமே தவிர அதுவே ஒரு வெறியாகி நம்மை நெறி பிறழ வைக்கும் செயல்களில் ஈடுபடுத்தி நெறிகொண்ட பாதையினின்றும் நம்மை மாற்றிவிடக்கூடாது. படத்தில் பிள்ளைகள் மற்றவர்களைப் போல செல்போன் வழிப்பறிச் செயலில் ஈடுபடுமளவுக்குப் போய் பின்னர் அதைக் கைவிட்டுத் திரும்புவதும், அது மட்டுமல்லாது அவர்களது பணக்கார நண்பன், தான் ‘தின்று மீந்த’ பிட்சாவை தங்களுக்குத் தருகையில் அதை தன்மானத்துடன் வாங்க மறுப்பதும்,  கையில் காசு சேர்ந்ததும் அந்தக் காசையும் பிட்சா ஆசையையும் விட தனது தாய் பாட்டியின் இறுதிச் சடங்குக்காக பணமின்றித் தவிக்கும் போது அந்தக் காரியத்திற்கு உதவியாகவேண்டும் என்ற நிலைக்கு வந்து தாம் கொண்ட நோக்கத்தை விட மனிதாபிமானமே  மிகப்பெரியது என உணர்த்துவது.
 

 

4.   நாம் கொண்ட இலக்கில்  இடர்களைப்பாராது உறுதி கொண்டு நின்றோமானால் ஒரு கால கட்டத்திற்குப் பின்னர் நமது இலக்கு நம்மைத்தேடி வரும் அல்லது இலக்கை அடைவது மிக எளிதாக கைகூடும். படத்தில் பிள்ளைகளை விரட்டிய பிட்சா கடைக்காரரே மிகுந்த வரவேற்புடன் அவர்களை வரவேற்று அவர்களுக்கு பிட்சா அளித்து உபசரிப்பது மட்டுமல்லாது இனி வாழ்நாள் முழுதும் அவர்களுக்கு பிட்சா இலவசமாகவே அளிக்கப்படும் என்று சொல்வது.

 

5.   வாழ்வில் நாம் இலக்கை அடைந்த பிறகு அதில் நாட்டம் குறைந்து நமது மனநிலையே மாறிவிடும் சூழல் ஏற்படுவது உண்டு. இது எல்லோரது வாழ்விலும் பெரும்பாலும் நடக்கும் ஒரு நிகழ்வு. படத்தில் அதுவரை பிட்சா சாப்பிட பாடுபட்டவர்கள் பிட்சா கையில் கிடைத்து அதைச் சுவைத்ததுமே முகம் சுளித்து ‘ஐயே…! இதுதான் பிட்சாவா? உவ்வே..! எப்படிடா இவ்வளவையும் சாப்பிடுவது..?’ என்று முகம் சுளித்து, ‘இதுக்கு ஆயா சுட்ட தோசையே நல்லா இருந்திச்சு..’ என உணர்வது மிக முக்கியமான கட்டம்.

 

6.   மேற்சொன்னது நாம் வாழ்வில் இலக்கை தீர்மானிப்பதில் எத்துனை கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு சரியானதொரு எடுத்துக்காட்டு. வாழ்வின் பயணம் முழுவதும் இலக்கை அடைவதில் செலவழித்துவிட்டு பின்னர் இலக்கை அடைந்தபிறகு முட்டாள் தனமாக உணருவது நாம் வாழ்வையே எளிதில் இழப்பதற்கு சமமாகும். எனவேதான் நாம் நிலையான, மாறாத, எப்போதும் போற்றத்தகுந்ததான இலக்குகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அடைய விழைய வேண்டும். இது நம் வாழ்க்கைப் பாதையை மட்டுமல்லாது வாழ்வில் நாம் கொள்ளும் எல்லா முயற்சிகளையும் பெருமைப் படுத்தும் விதமாகவும் நாம் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பயனுறும்படியாகவும் முடியும்.

 

7.   இது மட்டுமல்லாது வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மையும் நமது சூழலையும் தங்களின் சுய நலத்திற்கு பயன்படுத்திக் கொள்வது மட்டுமன்றி நமது நோக்கையும், எண்ணங்களையுமே திசை திருப்பிவிட்டு நம் வாழ்க்கையை புரட்டிப் போடவும் தயங்க மாட்டார்கள் என்பது வாழ்வியல் உண்மை. படத்தில் இதை மற்ற கதா பாத்திரங்களை வைத்து போகிற போக்கில் இயக்குனர் சொல்லியிருக்கிறார்.

 

இயல்பான, லயிக்க வைக்கும் படம்.

 

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

 

 

Wednesday, August 19, 2015

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி X


19.8.15

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி X

 



 

7. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VII
8. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VIII

9. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IX



 
நண்பர் தொடர்ந்தார்.

“நான் அந்த மன அழுத்தத்திலிருந்து மீள சற்று நாட்களாயிற்று. FIR பதிவு செய்ததாலும், மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து அத்து மீறல்கள் பற்றி அறிவிக்கைகள் வந்ததாலும் கட்சிக்காரன் சற்று அடங்கிப் போயிருந்தான்.

கார் பார்க் குறித்து அவன் செய்திருந்த சூது எங்களுக்கு தெரியாது எனும் நினைப்பில் இருந்தான். நானும் சரியான நடவடிக்கை எடுக்கும் முன்னர் எதையும் வெளிப்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கையுடன் இருந்தேன்.

இதனிடையே குடியிருப்பின் விற்பனையாளரிடம் PROMOTER காவல் துறையினர் விசாரணை செய்தபடி இருந்தனர். அந்த நிலையில்தான் எங்களிடம் அவர் பேச விரும்புவதாக தகவல் வந்தது. ஒரு நடுநிலையாளரது வீட்டில் விற்பனையாளரை சந்தித்தோம்.

விற்பனையாளர் என்னைக் கண்டதும் ‘நீங்கள் என்ன என் மீது புகார் கொடுத்திருக்கின்றீர்கள்? எனக்கும் இந்த காலி இட அபகரிப்பு போலிப் பத்திரத்திற்கும் சம்பந்தம் இல்லை..’ என்றார்.

 ‘அதை நானோ அல்லது காவல் துறையோ சொல்ல வேண்டுமே தவிர நீங்கள் சொல்லக்கூடாது’ என்றேன் எரிச்சலுடன்.

நான் மிகுந்த கோபத்தில் இருக்கிறேன் என்று தெரிந்ததும் சற்று அடக்கமாக, ‘நானும் உங்களைப் போல கட்சிக்காரனால் பாதிப்படைந்திருக்கிறேன்.’ என்றார்.

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பேச்சை தொடர்ந்தேன்.

‘நீங்கள் கார் பார்க் என குறிப்பிட்டிருக்கும் இடத்தைத் தான் பத்திரம் தயாரித்து விற்பனை செய்திருக்கிறான். அதில் உங்களுக்கும் கூட்டு இல்லை என எப்படி நான் நம்புவது? இந்தக் குற்றத்தில் நீங்களும் ஒரு ACCESSORY தானே? எதை வைத்து அவனுக்கு கார் பார்க் விற்பனை செய்தீர்கள்?’ என்றேன்.

‘இல்லை. அப்படி இல்லை. ஏதோ தவறு நடந்து விட்டது..’ என்றார்.

அந்தச் சமயத்தில்தான் எனக்கு பொறி தட்டியது. உடனே நான், ‘அந்தத் தவறை சரி செய்து கொடுப்பீர்களா?’ என்றேன்.

‘நான் அதற்கு வழக்கறிஞரை ஆலோசித்துதான் பதில் சொல்லவேண்டும்’ என்றார்.

‘உங்களுக்கு நான் 15 நாட்கள் தருகிறேன். அதற்குள் இதற்கு ஒரு சுமுகமான முடிவை எட்டிவிட்டால் சரி. இல்லையேல் உங்கள் மீது வழக்கு தொடுப்பேன்’ என்று சொல்லிவிட்டு கிளம்பினோம்.

வீட்டிற்கு வந்தவுடன் மறுபடி எங்கள் குடியிருப்பின் பதிவு ஆவணங்களை ஆராய்ந்தேன்.

10 குடியிருப்பில் விற்ற 7 குடியிருப்புகளுக்கும் Schedule A and Schedule B  ஒரே மாதிரியாக குறிப்பிடப்பட்டிருந்தது. Schedule A என்பது எங்கள் குடியிருப்பின் மொத்த பரப்பளவின் அமைப்பும் இடமும் குறிப்பிடப்பட்டது. Schedule B என்பது ஒவ்வொரு குடியிருப்பின் எண் அதாவது Flat A or B or C  இப்படி குறிப்பிட்டு அந்த குடியிருப்பின் சொந்தக்காரர் Schedule A வில் கண்டிருக்கும் சொத்தில் அனுமதி வாங்கி கட்டப்பட்ட குடியிருப்பின் வரைபடத்தில் காட்டப்பட்ட பொது இடங்களையும் பொது வசதிகளையும் மற்றகுடியிருப்பு வாசிகளுடன் சேர்ந்து அனுபவிக்க உரிமை உண்டு எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.

அதே நேரம் ஏதோ ஒன்று தோன்ற விற்பனையாளர் எங்கள் மீது முதன் முதலில் போட்ட வழக்கின் AFFIDAVIT தேடி எடுத்துப் படித்தேன். அதில் விற்பனையாளர் நாங்கள் பொது இடத்தில் கார்களை நிறுத்தி அவருக்கு தொந்திரவு கொடுப்பதாகவும் உண்மையில் எங்களது குடியிருப்பில் கார் பார்க் இல்லையெனவும் மாநகராட்சி/CMDA அனுமதி பெற்ற வரைபடத்திலும் எந்த இடமும் கார் பார்க்குக்காக ஒதுக்கப்படவில்லை எனவும் எனவே நாங்கள் பொது இடத்தை கார் பார்க்கிற்காக உபயோகப் படுத்துவது தவறு எனவும் குறிப்பிட்டிருந்தார்.

 
 
 
இதைக் கண்ட உடன்தான் எனக்கு உயிர் வந்தது போலாயிற்று. இனி விற்பனையாளர் கார் பார்க்கை விற்றது உண்மையென்றாரென்றால் ஏற்கனவே நீதிமண்றத்தில் எங்களது குடியிருப்பு கார்பார்க் வசதியுடன் கூடியது இல்லை என்று அவர் சொன்னது பொய்யாகி நீதி மண்றத்தில் பொய்த்தகவல் கொடுத்த குற்றத்திற்கு ஆளாவார்.

இல்லையென்றால் இல்லாத ஒரு உரிமையை பொய்யாக கட்சிக்காரனுக்கு எழுதிக் கொடுத்த குற்றத்திற்கு ஆளாவார். ஆனால் இந்த இரண்டாவது குற்றம் கட்சிக்காரன் விரும்பினால் அவர் மீது வழக்கு தொடுக்க ஏதுவாகும். எனவே அவரது நிலை சிக்கலானது.

நான் நினைத்தது போலவே விற்பனையாளரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஆனாலும் நான் கவலைப்படவில்லை.

கையில் இருந்த ஆவணங்களை வைத்து விற்பனையாளருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் அவர் பொது இடத்தில் 4 அடிகளை குறைத்துக் குறிப்பிட்டும், கார் பார்க் உரிமையையும் சமீபத்தில் விற்பனை செய்த மூண்று வீடுகளின் ஆவணத்தில் தவறுதலாக SCHEDULE ல் குறிப்பிட்டதால் எங்களது உரிமை பாதிக்கப்படுவதாகவும் இந்த தவறுதலான விற்பனை ஆவணப்பதிவினால் சமீபத்தில் வாங்கியவர் 800 சதுர அடி பொது இடத்தை போலிப்பத்திரம் தயார் செய்து விற்றிருக்கிறார் எனவும் அதனை மிகுந்த சிரமத்துடன் நாங்கள் ரத்து செய்ததாகவும் பின்னாளில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமலிருக்கும் படிக்கு விற்பனையாளர் ஒரு RECTIFICATION DEED பதிவு செய்து எங்களது உரிமைகளை காப்பாற்ற கடமைப் பட்டிருக்கிறார் எனவும் ஆகவே உடனடியாக இந்தத் தவறுகளைத் திருத்தி திருத்திய ஆவணத்தை பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம். இந்தக் கடிதத்தை ஒப்புகைச் சீட்டுடன் கூடிய பதிவுத் தபாலில் விற்பனையாளருக்கு அனுப்பி வைத்தேன்.

விற்பனையாளரது நிலை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையானது.

கார் பார்க் இருக்கிறது,, நான் விற்றது சரிதான் என்றாரென்றால் போலிப்பத்திரம் தயார் செய்து விற்பனை செய்ததில் இவருக்கும் நோக்கமும் பங்கும் உண்டென்றாகி விடும்.

கார் பார்க்  இல்லையென்றால் கட்சிக்காரன் அவரை விடமாட்டான்.

நான் எதிர் பார்த்ததைப் போலவே விற்பனையாளரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

ஒரு மாதம் கழித்து ஒரு இளம் வழக்குரைஞரைப் பார்த்து இந்த வழக்கு குறித்து விவாதித்தேன்.

மிகவும் தயங்கினார். ஆனால் நான் அவரை ஊக்குவிக்கும் விதமாக , ‘ இதில் ஆர்க்யூமெண்ட்டுக்கே இடமில்லை. எல்லாவற்றிற்கும் ஆவணம் இருக்கிறது. This is a strong case with all the supporting evidences. You can win it like anything. வேண்டுமானால் யாரையேனும் சீனியரை கன்சல்ட் செய்தபின்னர் இந்த வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னேன்.

எனக்கு இளம் வழக்குரைஞர்தான் தேவைப்பட்டது.

அனுபவம் கொண்டவரிடம் விசாரித்தபோதுதான் இந்த வழக்கு நிற்காது என்றும் இந்த வழக்கை போட 80 லட்ச ரூபாய்க்கு மேல் வழக்குச் செலவாகும் என்றும் சொன்னார். அதில் எனக்கு சம்மதமில்லை. எனவே என் விருப்பப்படி வழக்கு பதிய இந்த இளம் வழக்குரைஞரைத் தேடி வந்தேன்.

ஒரு பதினைந்து நாட்கள் கழித்தபின்னர் அதே வழக்கறிஞரைப் பார்த்தோம். வழக்கை எடுத்துக் கொள்ளச் சம்மதித்தார். Complete affidavit draft ஐ தயார் செய்து கொடுத்தேன். Requesting for the direction to register a rectification deed by the Promoter in a bid to correct the above said mistakes தான் முக்கிய கோரிக்கையாக வைத்து வழக்கு பதியப்பட்டது.

Rectification Deed to correct the mistake என்பதால் வழக்குச் செலவாக நாங்கள் சொத்து மதிப்பிற்கு நீதி மண்றத்தில் பணம் கட்ட வேண்டி வரவில்லை.

முதல் பிரதி வாதியாக விற்பனையாளரையும் மற்ற பிரதிவாதிகளாக கட்சிக்காரன், அவனது மனைவி, அவனது தகப்பனார் ஆகியோரையும் சேர்த்தோம்.

வழக்கு நடந்த போது வேடிக்கையாக இருந்தது.

 
 
 
விற்பனையாளர் மிகப் பெரியதொரு வழக்கறிஞரை வைத்து வாதாடினார். அவரது வாதம் விற்பனையாளர் எந்த ஒரு கெட்டநோக்கோடும் கார் பார்க்கை கட்சிக்காரருக்கு கொடுக்கவில்லையென்றும் இது சாதாரணமாக ஒரு மேம்போக்காக ஆவணம் எழுதியதால் வந்த தவறென்றும் நிரூபிக்க முனைவதாக இருந்தது.

வழக்கு முடிந்து தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தது.

அனுமதி பெறப்பட்ட வரைபடத்தில் உள்ளபடியும் மற்ற வசதிகளும் நாங்கள் கேட்டுக்கொண்டபடி ஒரு திருத்த ஆவணம் விற்பனையாளரை பதிந்து தரச் சொல்லி தீர்ப்பாகியது.

எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் எங்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவு கிடைத்தது.

இப்போது கட்சிக்காரன் தான் இடித்துப் போட்ட கீழ் வீட்டைக் கட்டி முடிக்காமல் வேறிடத்தில் குடியிருக்கிறான். வழக்கு எங்களுக்கு சாதகமாக வந்ததில் கட்சிக்காரனுக்கு எங்களை விட எள்ளளவும் அதிக உரிமை பொது இடத்தில் இல்லை என முடிவானது.

எங்கள் குடியிருப்பில் எல்லோரும் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறோம்” என்று முடித்தார் நண்பர்.

பெரும் போராட்டமே நடத்தியிருக்கிறார் நண்பர் என்பதை உணர்ந்தேன்.

அது மட்டுமல்ல. சில நேரங்களில் பிரச்சினைகளிலேயே அதற்கான தீர்வும் இருக்கிறதென்பதற்கு இதை விட ஒரு சிறந்த நிகழ்வைச் சொல்ல முடியாதென நினைக்கிறேன்.


இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

 

 

 

Friday, August 14, 2015

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IX


14.8.15

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IX









7. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VII
8. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VIII

 

நண்பர் சொன்னதைக் கேட்ட எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இத்தனை சிக்கலானதாகவா இருக்கும்? இவர்கள் ஏதோ பழக்கப்பட்ட கொள்ளையர்களைப் போலல்லவா நடந்திருக்கிறார்கள். சொத்தை அபகரிப்பதில் மிகத் தேர்ந்த விற்பன்னர்களாய் இருந்திருக்கிறார்கள் எனப் புரிந்தது.

நண்பர் தொடர்ந்தார்.

“எனக்கு முதலில் இது தோன்றவில்லை. நான் இதை எதிர்ப்பார்க்காததில் ஆச்சரியமும் இல்லை.

போலிப்பத்திரப் பதிவை ரத்து செய்யும் வரை AIG அலுவலகத்திற்கு விடாமல் நடந்தேன். அதற்குப்பின்னர் அந்த ரத்து செய்ததை அண்ணாநகர் சார்பதிவாளர் தனது பதிவேட்டில் பதியும் வரை நடந்தேன். பின்னர் AIG யின் ஆணையில் கேட்டிருந்தபடி இந்த போலிப்பத்திரப்பதிவில் சம்பந்தப் பட்டவர்கள் மீது FIR பதிந்து நடவடிக்கை எடுக்கும்படி அண்ணாநகர் சார் பதிவாளர் அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளருக்கு ஒரு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்து அந்தக் கடிதம் அண்ணாநகர் காவல் ஆய்வாளரை சென்றடையும் வரை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நடந்தேன்.

ஏற்கனவே நாங்கள் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் கொடுத்திருந்த புகார் மனுவின் மீது காவல் நிலையத்தில் கட்சிக்காரன் மீது FIR பதியப்பட்டு விட்டதால் சார் பதிவாளரின் கடிதத்தை ஒரு கூடுதல் ஆவணமாக காவல் நிலையத்தில் எடுத்துக் கொண்டனர்.

எல்லாம் முடிந்தது.

இதில் என்ன ஓர் ஆச்சர்யமென்றால் கட்சிக்காரன் தனது பத்திரத்தை ரத்து செய்தது தவறான செயல் என்று மனு ஒன்று AIG க்கு கொடுத்திருந்தான். அதன் மீது மறு விசாரணை செய்ய எங்களுக்கு ஒரு அறிவிக்கை அனுப்ப AIG யத்தனிக்கையில் யாரோ ஒரு தி மு க வினர் அரசு அறிவித்திருக்கும் இந்த நடவடிக்கைகள் சட்டப்படி செல்லாது என வழக்குத் தொடுத்துவிட்டிருந்தனர். அந்தச் சமயத்தில் பெரும்பாலான தி மு க வினர் மீது - ஸ்டாலின் உள்பட -  இந்த நில அபகரிப்பு குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

எங்களது போலிப்பத்திரப்பதிவு ரத்து செய்யும்படிக்கான ஆணை எனது முயற்சியால் தாமதமின்றி வந்து அதன் செயலாக்கமும் தாமதமின்றி முடிந்து விட்டதால் நாங்கள் தப்பினோம்.

எங்களது போலிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டு FIR பதியப்பட்ட ஒரு வாரத்திலேயே தி மு க வினர் போட்ட வழக்கின் தீர்ப்பு வந்து அதன்படி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு கலைக்கப் பட்டது மட்டுமல்லாது AIG க்கு கொடுக்கப்பட்ட போலிப்பத்திரங்களை ரத்து செய்யும்  உரிமையும் திரும்பப் பெறப்பட்டது.

எங்கள் புகாரின் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவினரால் வழக்கு பதியப்படாமல் அண்ணாநகர் காவல் நிலையத்தில் FIR பதியப்பட்டதால் எங்களுக்கு இந்த மாற்றங்களினால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.

இவ்வளவும் நடந்தபிறகு கட்சிக்காரன் பதுங்கு குழியில் சென்றடங்கியதைப் போல சத்தமில்லாமல் பம்மிக் கொண்டான்.

சற்று ஓய்வு கிடைத்ததும் நடந்த நிகழ்வுகளை வரிசைப்படுத்திப்  பார்த்தேன். எங்காவது எதையாவது விட்டு விட்டோமா அல்லது ஏதேனும் செய்ய வேண்டியவைகள் இன்னமும் பாக்கி இருக்கின்றனவா என்று யோசித்தேன்.

இந்த முயற்சியின் போதுதான் மறுபடியும் எல்லா ஆவணங்களையும் பரிசீலிக்க நேர்ந்தது. கட்சிக்காரன் விற்பனையாளரிடமிருந்து தனது மனைவி பெயரிலும் தனது தகப்பன் பெயரிலும் வாங்கியிருந்த மூண்றாம் தளம் மற்றும் இரண்டாம் தளத்திலிருந்த வீடுகளை மாநகராட்சி ஆணையரிடமிருந்து கட்டிடங்களின் அத்து மீறல் குறித்து தனக்கு அறிவிக்கை வந்தவுடனேயே விற்றிருந்தான் அல்லவா? அந்த விற்பனை ஆவண நகல்களையும் அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றேன்.

எல்லா ஆவணங்களையும் கூர்ந்து ஆராய்ந்த போதுதான் அந்த வெடிகுண்டு கண்ணுக்குத் தெரிந்தது.

கட்சிக்காரனது மனைவியும் தகப்பனும் தங்கள் பெயரிலிருந்த வீடுகளை அப்படியே மற்றவர்களுக்கு விற்கவில்லை. மாறாக அந்த சொத்துக்களை செட்டில்மெண்ட் மூலமாக முதலில் கட்சிக்காரனுக்கு எழுதிவைத்து அதற்குப் பிறகு அவைகளை அவன் மூண்றாம் நபருக்கு விற்றிருக்கிறான்.

முதலில் இந்த தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையில் இருக்கும் சூட்சுமம் எனக்கு விளங்கவில்லை. பத்திரங்களை மறுபடி பார்த்த பிறகுதான் தெரிந்தது. அவனது மனைவியும் தந்தையும் கட்சிக்காரனுக்கு செட்டில் மெண்ட் செய்த கொடுத்த சொத்தில் ஆரம்ப விற்பனையாளர் அதாவது PROMOTER என்னவெல்லாம் உரிமைகளை அவர்களுக்கு கொடுத்திருந்தாரோ அவைகள் அத்தனையையும் கட்சிக்காரனுக்கு கொடுத்திருந்தனர். அதாவது வீட்டைச் சுற்றியுள்ள 4 அடிகள் பொதுவில் சேர்க்காமல் விட்டது மற்றும் பொது இடத்தில் தனி கார் பார்க் ஆகியவைகள் அப்படியே அவனுக்கு டிரான்ஸ்பர் ஆகியிருந்தன. ஆனால் கட்சிக்காரன் மறுபடி அவைகளை மூண்றாம் நபருக்கு விற்பனை செய்த ஆவணத்தில் இந்த கார் பார்க் அவருக்கு டிரான்ஸ்பர் ஆகவில்லை.

ஆக, தற்போதைய நிலையில் பார்த்தால் கட்சிக்காரனுக்கு தரைதளத்தில் உள்ள குடியிருப்பும், அதைச் சுற்றியுள்ள பொது இடத்தில் குறிப்பிடப்படாத 4 அடிகளும், தரை தள வீட்டிற்கு ஒரு கார் பார்க் கூடவே தனது மனைவி மற்றும் தந்தையின் மூலமாக தனக்கு செட்டில்மெண்ட் ஆனபிறகு தன்னிடமிருந்து போகாத மேலும் இரண்டு கார் பார்க்குகள், ஆக மூண்று கார் பார்க்குகள் ஆவணப்படி அவனது உரிமையில்  இருந்தது.

இவைகள் ஏறக்குறைய அவனது தரைதள வீட்டை ஒட்டியுள்ள காலியான பொது இடத்தில் அவனுக்கு முழுச் சுதந்திரத்தையும் கொடுத்தது. ஏனெனில் இவனது வீட்டையும் அடுத்து சாலையையும் ஒட்டி இருந்த குடியிருப்பின் பொது இடமான அந்த இடம்தான் கார் பார்க் இடமாக PROMOTER ஆல் குறிப்பிடப்பட்டு எழுதிக் கொடுக்கப்பட்டது. அந்த இடத்தைத்தான் தனது சொந்த இடமாக வளைத்துப் போட்டு கட்டியிருந்தான். அந்த இடத்தையும் சேர்த்துத்தான் 800 சதுர அடிகள் போலிப்பத்திரம் தயார் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

இவைகள் எல்லாவற்றையும் முறியடித்திருந்தாலும் இப்போது கார் பார்க் வடிவத்தில் கட்சிக்காரனுக்கு உரிமைகள் வந்து சேர்ந்திருந்தன.

கட்சிக்காரன் விற்பனையாளரிடமிருந்து கார் நிறுத்துமிடத்தை எழுதி வாங்கியது மிகப்பெரிய உள்நோக்குடன் என்பது மிகுந்த யோசனைக்குப் பிறகுதான் தெளிவானது.

இந்த கார் பார்க் விவகாரம் போர் நின்றபிறகும் அகற்றப்படாத கண்ணி வெடிகளைப்போல பதித்துவைக்கப்பட்டிருந்தது நாங்கள் யாருமே எதிர் பாராததுதான்.

 
 
அதிர்ச்சி, சோகம், வெறுப்பு, இயலாமை என எல்லா உணர்வுகளும் என்னைக் கலவையாகத் தாக்க நான் சோர்ந்து போனேன். அதற்குப் பின்னர் நான் மற்றவர்களிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டேன்.

எவ்வளவுதான் போராடுவது?

நான் பேச்சற்றுப் போன நிலையில் என் நிலையைப் புரிந்து கொண்டு என்னுடன் இருந்தவர்கள் எனக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்கள்.

‘விடுங்க சார். இவ்வளவு காரியம் பண்ணியிருக்கீங்க. இதற்கும் மேலே நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் மட்டும் மனமுடைந்து போகவேண்டாம் அது போதும். இந்த சொத்தே கிடைக்காமற் போனாலும் பரவாயில்லை. உங்கள் உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள்.’ என்று சொல்லி அவர்களாகவே பத்திரங்களை எடுத்துக் கொண்டு விசாரிக்க ஆரம்பித்தனர்.

அப்படித்தான் ஒரு வழக்கறிஞரைப் பார்த்தோம்.

அந்த வழக்கறிஞர், ‘PROMOTER கார் பார்க்கை விற்றிருக்கிறார். கட்சிக்காரன் வாங்கியிருக்கிறான். இதில் வழக்கு எங்கே இருக்கிறது? அவன் விற்றது செல்லாது எனச் சொல்ல முடியாது. அது மட்டுமல்ல இந்த வழக்கைத் தொடுத்தோமானால் சொத்து மதிப்பிற்கு ஈடாக வழக்கு செலவாகவே 80 லட்சங்களுக்கு மேல் நீதி மண்றத்தில் கட்டவேண்டியிருக்குமே..அது உங்களால் முடியுமா? மேலும் இந்த டிரான்சாக்சனை சேலஞ்ச் செய்யறது கஷ்டமும் கூட..’ என்று அவர் சொல்லச் சொல்ல என்னுடன் இருந்தவர்களுக்கு அப்போதுதான் நிலைமையின் விபரீதம் புரிந்தது. உறைந்து போயினர்.

வழக்கறிஞரைப் பார்த்துவிட்டு வரும்போது எல்லோரும் என்னையே பார்த்தனர். அவர்களது பார்வையில் ‘நான் ஏதாவது யோசனை வைத்திருப்பேன் என்ற எதிர்பார்ப்பு நிறையவே தெரிந்தது.

 
 
நான் வழியிலிருந்த அந்தோனியார் கோவிலின் கோபுரத்தைப் பார்த்தேன். ஆண்டவர் எனக்காக ஏதேனும் அற்புதம் செய்ய மாட்டாரா எனும் எதிர்பார்ப்பு என்னுள் எழுந்து நிரம்பியது.

என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. ஆண்டவர் என்னைக் கை விடவில்லை. இந்த எளியவனுக்கும் அற்புதம் ஒன்றைச் செய்தார்”

நண்பர் இத்துனை ஆபத்துக்களையும் எதிர்பாராமல் எதிர் கொள்ளவேண்டியிருந்ததை எண்ணி ஆச்சரியப்பட்டேன்.

நண்பர் தொடர்ந்த பேச்சில் சுவராசியத்தோடு ஆச்சரியமும் கூடியது.

நண்பர் தொடர்ந்தது அடுத்த பதிவில்.

பதிவைத் தொடர: தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி X

அன்பன்,

வேதாந்தி.

 

 
Related Posts Plugin for WordPress, Blogger...