Followers

Wednesday, October 15, 2014

பொருந்துமா…?

15.10.14

பொருந்துமா…?
என் நண்பரது பிள்ளைக்கு பத்து வயது இருக்கும்போது அவன் புரிந்த சாகசங்களை நினைவு கூர்ந்து அவனுக்கு ஒரு பரிசளிக்க என் நண்பர் நினைத்தார். அவன் பள்ளி சென்று வருவதாலும் இரட்டைச் செலவை குறைக்கும் விதமாகவும் அவனுக்கு பள்ளிச் சீருடை ஒன்றை உயர் ரக துணியில் தைத்துத் தர விரும்பினார்.

இந்த எண்ணம் தோன்றிய உடனே ஒரு தையல் காரரை அனுகி பையனையும் அழைத்துச் சென்று அளவு கொடுக்கவைத்து துணியையும் கொடுத்து வைத்தார். அவரது நேரம்... உடனே அவருக்கு இட மாறுதல் வந்தது. குடும்பத்துடன் வேற்றூருக்குச் சென்று தனது பணியைத் தொடர்ந்தார்.

கடமை தவறாத தையல்காரர் அவரது பிள்ளையை அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களுக்கான சட்டை தைத்து முடித்தாகிவிட்டது நீங்கள் உடனே வந்து பெற்றுக் கொள்ளலாம் என பல முறை அழைத்தார். ஆனால் பிள்ளையோ தனது தந்தை தனக்களித்த ஆடை தான் விரும்பாத பள்ளிச் சீருடை என்பதால் அந்த தையல்காரரை தட்டிக் கழித்தார்.


காலம் உருண்டோடியது. தந்தையும் அதை மறந்து விட்டார். சட்டைக்குரிய பிள்ளையும் இனி தான் அந்தச் சீருடை அணிய வேண்டியிருக்காது எனவே நினைத்தான். தையல்காரர் கடமை தவறாது பிள்ளையை அவ்வப்போது தொடர்பு கொண்டு சட்டையை நினைவூட்டிக் கொண்டிருந்தார்.

பதினெட்டு வருடங்கள் உருண்டோடின. 

திடீரென ஒருநாள் தையல்காரர் தான் தயாராக தைத்து வைத்திருந்த சட்டைத் துணியை எடுத்துக்கொண்டு எனது நண்பரது வீட்டிற்கே வந்து எதிரில் நின்றார். தையல்காரரை பார்த்தவுடனேதான் தான் தைக்கச் சொன்ன சீருடையைப் பற்றி நினைவு வந்தவராக, ‘’அடேடே வாங்க.. வாங்க.. “ என்று தையல்காரரை விசாரித்தவர் அவரது கையில் வைத்திருந்த சீருடையைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
“ஊரை விட்டு வந்தாலும் மறக்காம உங்க கடமையைச் செய்ய இத்தனை தூரம் வந்திருக்கிறீங்களே… உங்களை பாராட்டம இருக்க முடியல”, என்றார்.
 “பின்னெ சும்மாவா நீங்க எனக்கு தையல் கூலியா கொடுத்தத விட அதிகமா செலவுபண்ணி இங்க வந்தது எதுக்குங்கறீங்க… என் பேர் கெட்டுடக் கூடாது பாருங்க அதுக்குத்தான். இந்தாங்க உங்களுக்காக நான் தயாரித்த சட்டை. அளவு மாறாம தெச்சிருக்கேன். பிள்ளையை போட்டுப் பாக்கச் சொல்லுங்க. கண்குளிர பாத்துட்டுத்தான் போறதா இருக்கேன்..” என்று சொல்லி தன் கையிலிருந்த சட்டையைக் கொடுத்து பெருமிதத்தோடு கடமை தவறாமை தன் முகத்தில் மிளிர கையைக் கட்டிக் கொண்டு நின்றார்.

 
தனது தந்தையின் பேச்சுக்கு வெளிப்படையாய் எதிர்ப்பைக்காட்டத் துணிவில்லாமல் தன் கையில் திணிக்கப்பட்ட சட்டையை வெறித்துப் பார்த்தான் பிள்ளை. பதினெட்டு வருடங்கள் ஆனாலும் இந்தத் தையல்காரரை தவிர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம், பத்து வயதில் போட்டிருந்தால் பொருந்தியிருக்கும் சட்டை தான் கடத்திய பதினெட்டு வருடங்களில் தான் வளர்ந்து மாறுதலடைந்த பிறகு தனக்கு பொருந்தாமல் இருக்கும் நிலையில் தான் உடுத்தியே ஆகவேண்டிய சூழலின் நிர்ப்பந்தம் என பிள்ளை திகைத்துப் போயிருந்தான்.
தந்தையும் தையல்காரரும் பெருமிதத்தோடிருந்தனர்.
சட்டை பொருந்தவில்லை.
அது சரி… கதை பொருந்திச்சோ…!


இன்னமும் பேசுவோம்.

அன்பன்,
          வேதாந்தி.





 

4 comments:

  1. பதினெட்டு வருசமா வழக்கை இழுத்தடித்து விட்டு ,எங்களுக்கு வயசு அதிகம் ஆயுடுச்சு என்ற காரணம் சொல்லி ஜாமீன் கேட்கும் சூழ்நிலைக்கு கதை சரியாக பொருந்துகிறதே )
    த ம 1

    ReplyDelete
  2. எங்கயோ ரொம்ப இழுத்து முடிச்சு போட்டுட்டீங்களே..!

    ReplyDelete
  3. கடமை தவறாமை, பாதுகாத்தல், பொருளை உரியவரிடம் ஒப்புவித்தல், நாணயம், முயற்சி என்பன அனைத்தும் பொருந்துகிறதே அந்த சூழ்நிலையைப் பாருங்கள்

    ReplyDelete
  4. உண்மைதான் நண்பரே... ஆனால் அஜீரணக் குறைதீர்க்க தயாரித்த தீபாவளி லேகியத்தை அதீத பசியோடு இருக்கும்போது உண்ணவேண்டி வந்த சந்தர்ப்பம்தான் பொருந்தவில்லை.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...