Followers

Thursday, March 20, 2014

கடவுள் நம்மை குறையுடன் படைத்தாரா?


20.3.14

கடவுள் நம்மை குறையுடன் படைத்தாரா?

நமது வாழ்க்கையை தேர்வு செய்யும் நிலையில் நாம் உள்ளோமா? - 2

 
 
நான் ஏற்கனவே பேசியது போல சிலர் நமது ஊனங்களுக்கும், குறைகளுக்கும், நம்மிடையே உள்ள பற்றக் குறைக்கும் கடவுளைக் காரணம் காட்டி கடுமையான விமரிசனத்திற்குள்ளாக்குகிறார்கள். நன்கு வாழ்வதென்பது குறையில்லாமல் இருப்பதோ அல்லது எல்லாவகையிலும் நிறைவுடன் இருப்பதோ அல்ல. நம்மையும் நமது சூழலையும் புரிந்து கொண்டு இணக்கமுற வாழ்வதே வாழ்க்கை.

வாழ்க்கை என்பது நாம் முழுமையடையக் கற்றுக் கொள்வது. நாம் வாழும் காலம் அதற்காக நமக்குக் கொடுக்கப்பட்ட அவகாசம். நாம் வாழுமிடம் அதற்கான சூழல். இங்கு நமக்கான சுதந்திரம் கடவுளால் பறிக்கப் படவில்லை.  

God has preserved our Sovereignty. He does not have  control over our choices. He has not prevented our attempts to change anything or everything that is there. Like also He has not voiced out against our way of life, its rules but He lets us face the consequences and gives us a chance to understand life and learn from it.  At the same time we must know that He cannot take charge for our wrong choices and the mess we make out of it.

 
 
கடவுள் நம்மை முழுமையாகப் படைத்திருந்தாலும் நிறைவாக வைத்திருந்தாலும் அதனால் திருப்தியுறாது தனது மனதில் எழுந்த தீய  ஒவ்வாத எண்ணங்களுக்கு பலியாகி வாழ்வைத் தொலைத்த ஒரு நபரைப் பற்றி முந்தைய பேச்சில் கண்டோம் (நமது வாழ்க்கையை தேர்வு செய்யும் நிலையில் நாம் உள்ளோமா? – 1)

இன்றைய பேச்சில் அதற்கு மாறான ஒரு நிகழ்வைப் பார்ப்போம்.

தமிழ்நாட்டின் தென் பகுதியிலுள்ள ஒரு பல்கலைக் கழகம். அங்கு ஒரு மாற்றுத் திறனாளி, போலியோவால் வலது கால் முற்றிலும் செயலிழந்து போனவர். அவரால் நகர்வது சிரமம் என்பதால் அந்த பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் அமைச்சுப் பணி ஒதுக்கப்பட்டு தன் குறையையும் பொருட்படுத்தாது பணியாற்றி வந்தார். எல்லோருடனும் இனிமையாக பழகத் தெரிந்த அவரை விரும்பாதவர் யாரும் கிடையாது. அவர் தானும் மகிழ்வுடன் இருந்து தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்வுடன் வைத்திருந்தார்.

அவரது பின்புலமும் பெரிதாக சொல்லும்படி இல்லை. ஏழ்மையில் பிறந்தவர். அவரது வருமானத்தையே அவரது குடும்பத்தார் அனைவரும் நம்பியிருந்தனர். குடும்பம் சற்று பெரிது கூட. ஆனாலும் சிக்கனமாய் வாழத்தெரிந்தவர்கள் என்பதால் வாழ்க்கை குறையில்லாமல் ஓடியது.

இதை விட சிறப்பு என்னவென்றால் அவர் தனது குறையை ஒருபோதும் பெரிதாக நினைத்தது கிடையாது. யாரேனும் அவரது நிலை குறித்து பரிதாபப் பட்டு பேச ஆரம்பித்தால் சட்டென்று பேச்சை மாற்றிவிடுவார். தான் மறந்த குறையை மற்றவர்கள் தன்னிடம் நினைவூட்டிக் கொண்டே இருப்பதை விரும்பாதவர் தனது கவனத்தைத் திருப்ப பகுதிநேர வகுப்பில் சேர்ந்து பயில ஆரம்பித்தார். தான் நூலகத்தில் இருப்பதால் நூலகம் சார்ந்த படிப்பு படித்தார்.

 

காலம் செல்லச் செல்ல அவருக்கு அந்தப் படிப்பில் ஆர்வம் அதிகமானது. B.Lib முடித்துவிட்டு அப்படியே M.Lib தொடர்ந்தார். அவர் M.Lib முடிக்கவும் அந்த நூலகத்தில் இருந்த ஒரு நூலகர் ஓய்வு பெற்றதால் ஒரு நூலகருக்கான பணியிடம் காலியாகவும் சரியாக இருந்தது. இவருக்கு எல்லாத் தகுதியும் இருந்ததால் இவருக்கே அந்த நூலகர் பதவி கிடைத்தது. எத்துனை அழகான ஒரு உயர்வு!.

இதைவிட ஆச்சரியம். நூலகத்திற்கு வந்து போய்க்கொண்டு இருந்த ஒரு பெண் விரிவுரையாளர் இவரை விரும்ப ஆரம்பித்தார். இவர் நூலகரானதும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார் அந்தப் பெண்மணி. இதைக் கேட்டதும் சற்றே திகைத்துப் போனவர் சிலநாட்கள் பொறுத்து அந்தப் பெண்மணியின் நேசம் உண்மையானது எனப் புரிந்துகொண்ட பின்னால் தனது ஒப்புதலை அளித்தார். இருவருக்கும் திருமணமும் நடந்தது. அவரது இனிமையான குணம் அவர் தேடாமலே அவருக்குப் பொருத்தமான ஒரு இணையைச் சேர்த்து வைத்தது.

இது மட்டுமல்ல அதுவரை சாதாரணமாக ஊதியம் பெற்றுவந்தவர்கள் தங்களது திருமணம் முடிந்தவுடனே UGC ஊதியம் பெற்றார்கள். இருவருக்குமே புதிதாக அமல்படுத்தப்பட்ட UGC ஊதியம் கிடைத்தது. தம்பதியரை எனது பேராசிரியர் எனக்கு அறிமுகப் படுத்தி அவர்களது கதையைச் சொன்னபோது மிக்க மகிழ்ந்தேன். இருவருமே ஒருவருக்கொருவர் சரியான இணை.

 
 
வாழ்க்கையை சரியாகப் புரிந்து கொண்டு சரியான மன நிலையிலிருப்பவன் சரியான விருப்பத் தேர்வுகளைச் செய்து வெற்றி பெறுகிறான். மாறாக தனது சிந்தனையை தனது மனதில் எழும் ஒவ்வாத எண்ணங்களுக்கு பலி கொடுத்தவன் வாழ்வைப் புரிந்து கொள்ளாமல் வீழ்ந்து விடுகிறான்.

நமது ஊனங்களோ, நமது எதிரிகளோ அல்லது நமது பிறப்புச் சூழலோ நம்மை சிறைப்படுத்துவதில்லை. மாறாக நமது மனதில் எழும் விரும்பத் தகுந்த / ஒவ்வாத எண்ணங்களின் வீச்சே நமது சிந்தனையை நடத்தி நமது விருப்பத் தேர்வுகளை முடிவு செய்து வாழ்வை எதிர் கொள்ளச் செய்கிறது.

 இன்னமும் பேசுவோம்.

 அன்பன்,

வேதாந்தி.

 

2 comments:

  1. மாற்றுத் திறனாளிகளிடம் நாம் தான் பலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்... அந்தளவு தன்னம்பிக்கை அவர்களிடம் உள்ளது... "மனிதனின் உண்மையான ஊனம் எது ?" என்று ஒரு பதிவை எழுத வைத்ததே ஒரு கீரைக்காரர் தான்...

    நிகழ்வில் குறிப்பிட்ட நபர் யாரென்று தெரியவில்லை... அவருக்கு பாராட்டுக்கள்... அவரின் திடமான நேர்மறைச் சிந்தனையால் வாழ்வில் முன்னேறியது சிறப்பு...

    முடிவில் இரு பத்திகளும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எந்த குறை இல்லாமல் பிறந்து இருந்தாலும் முன்னேற வேண்டுமென்ற எண்ணம் இல்லாதவர்கள் எல்லாம் மனதளவில் மாற்று திறனாளிகள் தான் !
    த ம 3

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...