Followers

Monday, November 17, 2014

அஞ்ஞாதவாசமும், அதற்குப்பின் நடந்ததும்…!


17.11.14

அஞ்ஞாதவாசமும், அதற்குப்பின் நடந்ததும்…!


முன் நிகழ்வுக்கு: ஏழரைச் சனியும் எடுக்கும் முடிவுகளும்...!
எண்ணத் தெளிவில்லாமல், உணர்வுகள் மட்டுமே முன்னிலையில் நின்று உந்தி ஒரு முடிவெடுத்ததனால் எனது நண்பர் மிகுந்த கடுமையான காலங்களை ஆதரவின்றி கடக்க வேண்டியிருந்தது.
 
முடிவெடுப்பதைப் பற்றி ஏற்கனவே ஒரு பேச்சில் பேசியிருக்கிறேன். அதில் முக்கியமான முடிவுகள் எப்போதும் அறிவு சார்ந்தே எடுக்க வேண்டுமன்றி உந்துதலாலோ அல்லது உணர்வுகளின் மிகுதியாலோ ஒரு முடிவெடுப்பது சிக்கலை உருவாக்கும் என்பதையும் பார்த்திருக்கிறோம்.

நண்பரது நிலையும் அப்படியே ஆனது. அவரது முடிவில் உணர்வுகளே முதல் நிலை பெற்றது. அது மட்டுமல்லாமல் முடிவெடுக்கத் தேவையாண காரணிகளை மறுமுறையும் உறுதிப் படுத்திக் கொள்ள அவர் முயலவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான முடிவுகளுக்குத் தேவையான சிந்தனைக்கு ஒரு incubation time அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் அந்தச் சூழலை ஒரு பொறுமையுடன் அணுகியிருந்தாரென்றால் அவர் எடுத்த முடிவு வேறாயிருக்கலாம்.

எப்படியோ நடந்து விட்டது. அதற்குப் பின்னர் நண்பர் சந்தித்தவைகளை அவர் மொழியாகவே தருகிறேன்.

“நான் எடுத்த முடிவு தவறானது என்பது எனக்கு சற்று காலம் தாழ்த்தியே புலப்பட்டது. வறுமை தன் பிடியினை இறுக்க ஆரம்பிக்க எனது பெற்றோர் எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தனர்.

நேர் முகத் தேர்வுகள் வரும். ஆனால் அங்கு சென்றால் எனது சாதியைக் கேட்டனர். நான் தாழ்த்தப்பட்டவனென்றால் அரசாங்கம் எனை தத்தெடுத்துக் கொண்டிருக்கும். அல்லது சமுதாயத்தில் ஒரு வலிமையான சாதியைச் சேர்ந்தவனென்றால் அந்த சாதிக் கட்டமைப்பு எனைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கும். இது இரண்டும் இல்லாததால் நான் அவதிப் பட்டேன்.

ஒருமுறை கடலூர் அருகே உள்ள ஒரு பள்ளிக்கு மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. நேர்முகத் தேர்வில் வெட்கமின்றிச் சொன்னார்கள். “ இது பருவதராஜ குலத்தினர் நடத்தும் பள்ளி. எனவே எங்களுக்கு அந்தச் சமூகத்திலிருந்துதான் ஆட்கள் வேண்டும்..” என்றனர். “அப்படியென்றால் என்னை ஏன் நேர்முகத் தேர்வுக்கு அழைத்தீர்கள்?” என்றேன். “ அதுதான் procedure. அதனால் தான் அழைத்தோம்”, என்ற அவர்களைப் பார்த்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. அந்த நேர்முகத் தேர்வுக்கான பயணச் செலவுக்கு நான் எத்துனை சிரமப் பட்டிருப்பேன் என்பதை கொஞ்சமும் நினைத்துப் பாராத அநாகரிகம் மற்றும் தங்கள் சமூகத்தினர் படிக்கும் பள்ளிக்கு ஒரு நல்ல ஆசிரியரைப் போட்டால் வளரும் மாணவர்களில் அதிகமான பேர் பலனடைவார்கள் மாறாக தமது சமூகத்தைச் சார்ந்தவர் என்பதனாலேயே தேர்வு செய்தால் பணி கிட்டிய நபர் மட்டுமே பயனடைவார் என்ற அடிப்படை சித்தாந்தத்தில் ஒரு தெளிவின்மை ஆகிய எல்லாமே எனக்கு பொட்டிலடித்தாற்போல இருந்தது.

இந்தக் கேள்விகளுக்கு முன்னால் நான் வேண்டாமென்று சொன்ன பள்ளியின் முதல்வர் என்னிடம் கேட்டுக் கொண்டவை மிகுந்த நாகரிகமானவைகளாகத் தெரிந்தது. அது ஒரு கிருத்துவப் பள்ளியாக இருந்தும் நான் கிருத்துவனல்ல என்பது தெரிந்தும் வந்திருந்தவர்களில் திறமையானவன் என்பதை மட்டுமே வைத்து என்னைத் தேர்வு செய்த அந்த வெளிநாட்டுப் பாதிரிமார்கள் எத்துனை போற்றத் தகுந்தவர்கள்..!


அதற்கப்புறமென்ன, நான் படித்தவன் என்கின்ற சிந்தனையையே நாட்கள் செல்லச் செல்ல இழக்க ஆரம்பித்தேன். எனது இளநிலைக் கல்லூரி ஆசிரியர், பழனியப்பன் என்பவர், எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் என்னை வழிநடத்தவும் அவரது அன்பு எனக்கு மிகுந்த உதவியாக இருந்தது. அந்தக் காலத்தில் அவரது அன்பும் ஆதரவும் இல்லாமலிருந்திருந்தால் நான் எப்போதோ depression க்கு பலியாகியிருப்பேன்.

காலையில் எழுந்து குளித்துவிட்டு அங்கிருக்கும் மாவட்ட நூலகத்திற்குச் சென்று கிடைக்கும் புத்தகங்கள் மற்றும் மாத, வார இதழ்களையும் நாளிதழ்களையும் படித்து முடித்துவிட்டு மாலை ஏழு மணிக்கு பேராசிரியரின் வீட்டிற்குச் செல்வேன். என்னை வரவேற்று பேசிக் கொண்டிருப்பார். இரவு ஒன்பது மணி வாக்கில்தான் வீடு திரும்புவேன். இரவுச் சாப்பாட்டுடன் என் வீட்டினர் மனமொடிந்து இருப்பர். அந்த ஒரு நேரச் சாப்பாடு கூட பெரும்பாலான நாட்களில் பேராசிரியரின் வீட்டில்தான். மறுநாளும் இதே சுற்று.

எத்தனையோ பள்ளிகள், கல்லூரிகளில் நேர்காணல் நடந்தது. ஆனால் அந்த நாடார்களுக்கும் வன்னியர் பெருமக்களுக்கும் தங்களது பள்ளி, கல்லூரிகளுக்கு பணியாற்ற தங்கள் சமூகத்தினர் தான் தேவைப்பட்டனரே ஒழிய அவர்களுக்கு திறமை தேவைப்படவில்லை. எனக்கு சமுதாயத்தின் மீதே வெறுப்பு வந்தது.

இப்படி இருக்கையில்தான் இந்தச் சமுதாயத்துடன் காலமும் சேர்ந்து கொண்டு என்னைச் சூதில் வீழ்த்துகிறது என நான் கண்டுகொள்ளும்படிக்கு அந்தச் சம்பவம் நடந்தது.

எனது பரிதாப நிலை கண்ட பேராசிரியர் எனது கல்வித் தகுதிக்கேற்ப ஒரு வேலை ஊட்டியில் பெற்றுத் தரும்படிக்கு தனக்குத் தெரிந்தவரிடம் சிபாரிசு செய்து அதன் படியே அங்கிருந்து எனக்கு நேர்முகத் தேர்வு வந்தது.

நேர்முகத் தேர்வும் நன்றாகவே நடந்தது. அது ஒரு semi government organization என்று நினைக்கிறேன். UPASI (United Planters Association of Southern India) என்பது அது. அதில் மிக முக்கியமான பொறுப்பைக் கொண்ட entomologist வேலை. பூச்சியியல் படித்திருந்ததனால் அந்த வேலை எனது படிப்பிற்குத் தொடர்புள்ளதாய் இருந்தது. அந்த நிறுவனத்தின் இயக்குனருக்கு என்னைப் பிடித்துப் போயிற்று. வெகுவாகப் பாராட்டினார். உடனே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்புவதாகச் சொன்னார்.

மிகுந்த மகிழ்வுடன் வீடு திரும்பியவன் பேராசிரியருக்கு நன்றியைச் சொன்னேன். வேலை கிடைத்துவிடும் என வீட்டிலுள்ளோரிடமும் சொன்னேன். பேராசிரியர் அந்த மலைப் பிரதேசத்தில் போய் வரச் சௌகரியமாக இருக்க புல்லட் ஓட்டக் கற்றுக் கொள் என்றார். கை நிறையச் சம்பளம், தங்குவதற்கும் சாப்பாட்டிற்கும் கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்..

கனவில் மிதந்தேன்.

நாட்கள் கடந்தன. வாரங்கள் கடந்தன. மாதமும் இரண்டாயிற்று. வேலைக்கான உத்தரவு வரவில்லை.

பேராசிரியர் அவரது நண்பரை விசாரித்த போதுதான் தெரிய வந்தது. UPASI யின் இயக்குனர் என்னைத் தேர்வு செய்து வேலைக்கான உத்தரவை தயார் செய்து அது கையொப்பத்திற்கு காத்திருந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்ந்தவர் அங்கேயே சிகிச்சை பலனளிக்காது இறந்து விட்டார்.

 
இதைக் கேட்டதும் இடி இறங்கினார்ப்போல் ஆகிவிட்டது."


அது வரை பேசிய நண்பர் அமைதியானார். அவரது முகம், நெஞ்சில் தேங்கியிருந்த சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.  நான் அமைதியாக அவரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் மீண்டும் வாய் திறக்கக் காத்திருந்தேன்.


இன்னமும் பேசுவோம்.

 
அன்பன்,
வேதாந்தி.

 
 

 
 
 

4 comments:

  1. அடடா, எவ்வளவு வேதனைகள். மனம் வருந்துகிறது. அது என்ன "வலிமையான சாதியைச் சேர்ந்தவனென்றால் என்றால்"

    ReplyDelete
  2. எது நடக்க வேண்டுமோ - அது நடந்தே தீரும்...

    ReplyDelete
  3. mr.vdanthi do not give up.all persons face problems. do not blame best wishes.

    ReplyDelete
    Replies
    1. This is the experience of my best friend. He didn't give up. But these experiences changed his attitude and the out look of life which I feel the present generation needs most. That's why I am giving his experience so that people can see others lives and make best out of their own.
      Thank you for your visit.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...