Followers

Wednesday, November 12, 2014

ஏழரைச் சனியும், எடுக்கும் முடிவுகளும்…




12.11.14


ஏழரைச் சனியும், எடுக்கும் முடிவுகளும்…

 
இது வரை உளவியல் பேசியவன் இப்போது உளருகிறானே எனப் பார்க்கிறீர்களா?

இது ஒரு வகையில் உண்மைதான். இறைவன் தனக்குள் இருக்கிறான் என ஒருவன் நம்பினால் அதற்கு எதிரான சக்தியும் தனக்குள் இருப்பதையும் ஒருவன் நம்பித்தான் ஆகவேண்டும். இதுதான் கடவுள் பாதி மிருகம் பாதி என்பது.


அதாவது ஒருவன் மனத்தெளிவுடன் இருப்பானேயானால் அவனது சிந்தனைகளும் செயல்களும் நிதானத்துடனும் தெளிவுடனும் இருக்கும். இந்த மனத் தெளிவு என்பது cause and effect பற்றி அறிந்திருப்பது மட்டுமல்ல. நம்மையும் நம்மை மீறிய சில காரியங்களையும் பற்றி அறிந்திருப்பதும்தான் நான் குறிப்பிடும் மனத் தெளிவு. இது குறித்து இன்னுமொரு சமயத்தில் விளக்கமாக பேசுகிறேன். இப்போது நான் சொல்ல வந்தது வேறு. எனது நண்பரது வாழ்வில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு.

அவர் அறிவியலில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு வந்த புதிது. 1978 ம் வருடம் என்று நினைக்கிறேன். 1979,80 களில் Pre University Certificate (PUC) system மாறி Higher Secondary System வந்திருந்த காலம். பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் நிறையத் தேவைப்பட்டனர்.அந்த நேரத்தில் வேலையில்லாக் கொடுமையும் அதிகம். கமலஹாசனின் வறுமையின் நிறம் சிவப்பு வெளிவந்து அது அன்றைய கால கட்டத்தை பிரதிபலித்ததால் சக்கை போடு போட்ட காலம். நண்பரது வீட்டிலும் வறுமை தன் கோர முகத்தை சன்னல் வழியே எட்டிக் காட்டிக் கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் அது எட்டி உள்ளே வந்து ஒவ்வொருவரிடமும் உரையாடலில் ஈடுபட்டுவிடும் என்கின்ற நிலைமை.


(Hard times by Lois Bryan)

ஒரு குடும்பத்தில், வறுமை வாசல் வழியாக வந்தால் அன்பும் சந்தோசமும் சன்னல் வழியாக பறந்துவிடும் என்று ஒரு பழமொழி உண்டு. நண்பரது வீட்டிலும் அது எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற நிலை. ஆனால் விதி வேலை செய்த விதத்தைப் பாருங்கள். வீட்டிலுள்ள அனைவருக்கும் தெரிந்த இந்த நிலைமை நண்பருக்கு தெரியவில்லை. அவரது தாயார், செல்லமாக வளர்ந்த பிள்ளை திடீரென வறுமையைக் கண்டு மனமொடிந்து விடுவான் என்று குடும்பத்தின் கடன் சுமையிலிருந்து எல்லாவற்றையும் மறைத்து வைத்திருந்தார். நண்பரும் தான் முது நிலை அறிவியல் படிப்பு படித்து முடித்து விட்டதனால் நல்லதொரு வேலை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.

இந்த நிலையில்தான் அவருக்கு ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளியிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. நண்பரும் சென்றார். வந்திருந்த 30 பேர்களில் அங்கிருந்த வெளிநாட்டு பாதிரிமார்கள் இவரைத் தேர்வு செய்தனர். உடனே அந்தப் பள்ளியின் முதல்வர் நண்பரை காத்திருக்கச் சொல்லி பணிக்கான ஆணையைக் கொடுத்தார். ஆனால் அவர் ஆணையை அறையில் அழைத்துக் கொடுக்கும் போது ஒரு நாகரிகமற்ற செயலைச் செய்தார். ஒரு மனிதனாகவும், ஒரு கல்வியாளராகவும், ஒரு கிருத்துவப் பள்ளியின் முதல்வராகவும் அவர் செய்த செயல் இன்றைக்கும் மனதை வருடுகிறது.


என் நண்பர் இரண்டு சோடி உடைகள் மட்டும் தான் வைத்திருந்தார். அவைகளையே மாற்றி மாற்றி அணிந்ததால் அவர் அணிந்திருந்த Pant முன்னம் பகுதியில் வெளுத்திருந்தது. சட்டையும் அப்படியே. மேலும் காலில் ஹவாய் செப்பலை அணிந்திருந்தார். 1970 களில் அது சாதாரணம். ஒருவன் ஹவாய் செப்பல் இல்லாமல் செருப்பு அணிகிறான் என்றால் கொஞ்சம் செல்வாக்கு உள்ளவன் என அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அந்தப் பள்ளியின் முதல்வர் என் நண்பரிடம்,” நாளையிலிருந்து நீங்கள்  பணிக்கு வந்து விடுங்கள். ஆனால் இப்படி பாத் ரூம் செப்பல் அணிந்து வரவேண்டாம். இது மிகவும் பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளி..” என்று சொல்ல நண்பர் மிகவும் சங்கடமான சூழ்நிலைக்குச் சென்று குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டார்.

பள்ளி முதல்வரின் அறையை விட்டு வந்ததும் இவரது துறை சார்ந்த ஒரு ஆசிரியர் இவரை அழைத்துக் கொண்டுபோய் அடுத்த நாள் பாடமெடுக்கத் தேவையான புத்தகங்களை இவருக்கு எடுத்துக் கொடுத்தார். மேலும் கால அட்டவணைப் பிரதியையும் கொடுத்தார். அதற்குப் பின் அந்த ஆசிரியர், “சார், இன்றைக்கு ஆடிட்டோரியத்தில் மூவி புரோக்கிராம் இருக்கிறது. பார்த்துவிட்டுச் செல்லலாமே..”என்றவுடன் நண்பரும் அந்த ஆசிரியருடன் ஆடிட்டோரியம் சென்று ஆசிரியர்களின் வரிசையில் அமர்ந்தார்.

மனம் திரையில் லயிக்கவில்லை. பள்ளி முதல்வர் சொன்ன வார்த்தைகள் நண்பரின் மனதில் சுற்றிச் சுழன்று புழுதியைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒரு மாணவன் நண்பரது அருகில் அமர்ந்திருந்த ஆசிரியரிடம் ஒற்றை விரலை நீட்டி, “சார், பாத்ரூம் போகனும்” என்றான்.

“பாத்ரூம்” என்ற வார்த்தையைக் கேட்டதுமே நண்பருக்கு யாரோ தன் மண்டையை பிளக்கிறார்ப்போல் இருந்தது.

“பாத்ரூம்” என்கின்ற வார்த்தைக்கு ‘குளியல் அறை’ எனும் பொருளோடு ‘கழிப்பிடம்’ என்கின்ற பொருளும் உண்டு என்று உறைத்தவுடன் நண்பருக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை.

சட சடவெனக் கிளம்பி ஆடிட்டோரியத்தை விட்டு வெளியேறினார்.

வீடு வந்து சேர்ந்த போதும் மனம் அடங்கவில்லை. ‘கழிப்பிடம் செல்ல போட்டுக் கொள்ளும் செப்பலை போட்டிருக்கிறான்’ என்று கீழ்த்தரமாக சொல்லிவிட்டார்களே என வெம்பினார், வெதும்பினார். தன் மீதே அவருக்கு ஒரு வெறுப்பு வந்தது.

உடனே தான் பள்ளியிலிருந்து கொண்டுவந்திருந்த புத்தகங்களை கையில் எடுத்துக் கொண்டு அருகில்  இருக்கும் தன் நண்பரையும் அழைத்துக் கொண்டு தலைமை அஞ்சலகம் நோக்கி நடை போட ஆரம்பித்தார்.

வழியெல்லாம் நண்பரிடம் ஒரே புலம்பல். நண்பர் சமாதானம் சொல்லியபடியே வர எதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை. “இரப்பா.. நாளை உன்னை அந்தப் பள்ளியைப் பற்றி நன்கு அறிந்த எனக்குத் தெரிந்த ஒருவரிடம் அழைத்துச் செல்கிறேன். அப்புறமாக ஒரு முடிவுக்கு வரலாம். அவசரப்படாதே…”என்றார். ஆனால் நண்பரது காதில் அது விழுந்ததாகத் தெரியவில்லை.

“அது ஒரு கிருத்தவ மெட்ரிகுலேசன் பள்ளியாதலால் டிரஸ் கோட் பற்றி மிகவும் அக்கறை கொண்டிருக்கலாம். எனவே அந்தப் பள்ளி முதல்வர் உன்னிடம் அக்கரை எடுத்துக் கொண்டு உன் ஆடையைப் பற்றி சொல்லியிருக்கலாம். கொஞ்சம் நிதானமாக இரு….”

“நீ சொல்கிறபடி என் மீது அக்கறை கொண்டிருந்தால், அல்லது உண்மையாலுமே கிருத்தவ கொள்கைகளில் அக்கறை கொண்டிருந்தால் என் ஏழ்மையை விமரிசித்திருக்கக் கூடாதல்லவா? டிரஸ் கோட் பற்றி நினைத்திருந்தால் பள்ளி முதல்வர் எனக்கு முன்பணமாக ஒரு தொகையைக் கொடுத்து நாளைக்கு காலணிகளை மாற்றி அணிந்து வரச் சொல்லியிருக்கலாம். புத்தாடை வாங்க உதவியிருக்கலாம். ஆனால் இதெல்லாம் செய்யாமல் என்னை கீழ்த்தரப்படுத்திவிட்டாரே.. அப்படியே அது பெரும் பணக்காரர்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளியென்றாலும் அவர்கள் காரில் வரும்போது, ஆசிரியன் என்பதால் நான் அதை விட விலை உயர்ந்த காரில்தான் வரவேண்டும் என்றால் அது நடக்குமா..? என்னை வகுப்பெடுக்கச் சொல்லி என் திறமையை மெச்சித்தானே அத்தனை பேரில் எனக்கு இந்த வேலையைக் கொடுத்தனர். அப்புறம் ஏன் இப்படி?”, எனப் பலவாராக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியபடி வந்தவர், தலைமை அஞ்சலகத்தை அடைந்தவுடன் தன் கையிலிருந்த புத்தகங்களை ஒரு பார்சலாக கட்டினார்.

மட மட வென ஒரு வெள்ளைத் தாளை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

“அய்யா, நான் உங்கள் பள்ளியில் பணிபுரிய தகுதியற்றவன். என்னிடம் நல்ல செருப்போ அல்லது ஆடையோ கிடையாது. எனவே அந்த வேலையை ஒரு செருப்புக் கடைக்காரனுக்கோ அல்லது துணிக்கடைக்காரனுக்கோ கொடுங்கள். அதுவே உங்களால் மெச்சப்படும்.” என எழுதி அதை அந்தப் புத்தகப் பார்சலில் வைத்து பள்ளித் தலைமை ஆசிரியருக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைத்தார்.

அவருடன் சென்ற நண்பர் மனம் ஒப்பாது அவரை அடுத்த நாள் அந்தப் பள்ளியைப் பற்றி நன்கு அறிந்த தனது இன்னொரு நண்பரிடம் அழைத்துச் சென்று நடந்ததைச் சொன்னபோது அந்த நண்பர் மிக்க வருத்தப் பட்டுச் சொன்னார், “அடாடா… அவசரப் பட்டு விட்டீர்களே. நீங்கள் பார்த்த நபர் பள்ளி முதல்வரல்ல. பள்ளி முதல்வர் வெளிநாடு சென்றிருக்கிறார். வர இரண்டு மாதங்களாகும். அவர் மிக்க நல்லவர். இனிமையானவர். திறமைக்கு மதிப்பளிக்கக் கூடியவர். நிச்சயமாய் அவர் உங்களுக்கு முன்பணம் அளித்தோ அல்லது வேறெந்த வகையிலோ உதவியிருப்பார். நீங்கள் சந்தித்த நபர் பள்ளி முதல்வர் பொறுப்பிலிருப்பவர். அவர் எப்போதுமே அப்படித்தான். மனிதரை மதிக்கத் தெரியாதவர். அவரது பேச்சை பெரிதாக எண்ணி நல்ல வேலையை இழந்து விட்டீர்களே… இது கிடைத்திருந்தால் நல்ல சம்பளம். உள்ளூரிலேயே தாய் தந்தையருடன் இருக்கலாம். அதுமட்டுமல்ல வருடம் ஒருமுறை வெளிநாடு செல்லும் சந்தர்ப்பமும் கிடைக்கும்….”

அடுக்கடுக்காய் அவர் சொல்லிக் கொண்டே செல்ல நண்பருக்கு அழுவதா இல்லை சிரிப்பதா எனத் தெரியவில்லை.

தன் எதிரில் இருந்த சூழலையும் தனது நிலையையும் சரியாக எடை போட்டு முடிவெடுக்காதபடிக்கு தன் மன நிலையை மாற்றியது எது? ‘பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ எனும் பழமொழியைத் தான் அறிந்தும்  தன்மானம் பெரிது என தன்னைத் தூண்டிச் சீண்டி மிகைப்படுத்தி முடிவெடுக்கச் சொன்னது எது?

தான் எடுத்த தவறான முடிவினால் எட்டு வருடங்கள் வேலையின்றி வறுமையின் பிடியில் குடும்பம் பரிதவிக்க கையறு நிலையில் தவித்தார்.

தெளிவான சிந்தனையும் பொறுமையும் இழந்து முடிவெடுத்த நண்பருக்கு உண்மையிலேயே ஏழரைதான்.



ஆனால் இதே நண்பருக்கு ஒரு வியப்பான அனுபவமும் அந்த எட்டு வருடங்கள் கழிந்தவுடன் நடந்தது. அந்த நேரத்தில் அனுபவம் அவரை பழுக்க வைத்திருந்தது. அதை அவரது வாய் மொழியாகவே அடுத்த பேச்சில் காண்போம்.

இதைத் தொடர: அஞ்ஞாதவாசமும் அதற்குப்பின் நடந்ததும்...!
 



அன்பன்,

வேதாந்தி.

 

 

 

6 comments:

  1. தொடரட்டும் பகிர்வு!

    ReplyDelete
  2. அநேகமாய் தன்மானம் என்பதையே எட்டு வருடங்களில் மறந்து விட்டாரோ ?
    த ம 2

    ReplyDelete
  3. வானத்தைப் படைத்தவன் புழுதியையும் படைத்துள்ளான். வேறென்ன சொல்ல!

    ReplyDelete
  4. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  5. it is surprising that this man could not understand the message of the principal in charge not to use the bathroom chappal. probablythat incident happened in eighties but the present generation would not mind such remarks but would have appeared in good modest dress.shoe. well keepit up.

    ReplyDelete
    Replies
    1. That is the content of this essay. Even though he was an educated man and very much in good nature to understand the mind of others, time has played the trick. He was emotionally pushed to take this vital decision.

      Yes. Naturally the present generation would not mind such remarks as also the chances available to earn is also very much different from that period of eighties.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...