Followers

Monday, November 24, 2014

துன்பமும், தொடர்ந்ததும்…!


24.11.14

துன்பமும், தொடர்ந்ததும்…!



சற்று நேரம் அமைதியாய் இருந்த நண்பர் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவந்து பேச்சைத் தொடர்ந்தார்.

“UPASI யில் வேலை கிடைத்துவிடும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்ததால் அந்த ஏமாற்றத்தைத் தாள முடியவில்லை. மனமொடிந்து போனேன். பேராசிரியர் என்னைத் தேற்ற மிகவும் சிரமப்பட்டார். அவரும் சற்று கலங்கித்தான் போனார். அந்த UPASI இயக்குனர் இறந்த பிறகு அடுத்த இயக்குனரை நியமிக்க ஆறுமாதங்களுக்கு மேலாகி விட்டதால் அந்த தேர்வுப் பட்டியலையே நிராகரித்து விட்டனர்.

நான் இதைப் பற்றி பேசும் போது நடந்ததை அப்படியே சொல்கிறேனேயன்றி சுவாரசியத்துக்காகக்கூட கிஞ்சித்தும் உண்மையல்லாதவற்றை சொல்லவில்லை. இவை அத்தனையும் என் வாழ்வில் அப்படியே நடந்தவைகள். நடந்தவைகளை இப்போது நினைத்தாலும் என்னாலேயே நம்ப முடியவில்லைதான்.

நான் எதிர்பார்த்த வேலை எனக்குக் கிடைக்கவில்லை என்பதை அறிந்த எனது பெற்றோர், இனி இவனுக்கு வேலை கிடைக்காது என முடிவுக்கு வந்தனர். திருமணமாவது நடக்கட்டுமென்று அதற்கான முயற்சி எடுத்துக் கொண்டனர். எங்களது உறவினரில் ஒருவர், தன் பெண்ணை நான் மணந்து கொண்டால் எனக்கு சொந்தமாக ஒரு சாயத் தொழிற்சாலை வைத்துத் தருவதாகச் சொன்னார். பெண் அழகாய்த் தான் இருந்தார். ஆனால் எனக்கு மனமொப்பவில்லை. கையில் காசில்லாமல் இன்னொருத்தியை எதை நம்பி கைப்பிடிப்பது

மிகவும் குழம்பிப் போனேன்.

அந்தக் காலம் மிகக் கொடுமையான காலம்.

அது நான் எனது நம்பிக்கையை மட்டுமல்ல சுயத்தையும் இழந்த காலம். பராரியைப் போல் தெருக்களில் சுற்றினேன். என்னுடன் இருந்த நண்பர்கள் அனைவரும் அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப வேலை கிடைத்து வெளியூர் சென்றுவிட்டனர். நான் தனிமைப் படுத்தப் பட்டேன்.

மனமுடைந்து விடுவேனோ என்று எனது நிலை கண்டு தாங்கொனாது எனது நண்பர் கோபால் என்பவர், TWAD Board ல் அப்போதுதான் அவருக்கு பொறியாளராய் வேலை கிடைத்து இருந்தது, எனக்கு மாதாமாதம் நூறு உரூபாய்கள் அனுப்பி வைத்தார். அவர் மனம் கோணலாகாதென நானும் இரண்டு மூண்று மாதங்கள் பணம் பெற்றுக் கொண்டு பிறகு நாசூக்காய் அவருக்குத் தெரியப்படுத்தி அவர் பணம் அனுப்பிவைப்பதை தவிர்த்தேன்.

இந்த நிலையில் இன்னுமொரு கொடுமை எனக்கு நடந்தது. வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு கிடைக்கும் அரசின் நிவாரணத் தொகையாக மாதம் நூறு உரூபாய் ஸ்டேட் பேங்கில் அதற்கென என்னால் ஆரம்பித்து வைக்கப்பட்ட எனது கணக்கில் இட்டு வைக்கப் பட்டது. அதை ஒரு நாள் எனது நேர்முகத் தேர்வுக்கான செலவுக்காக எடுக்கச் சென்றபோது எனது கணக்கிலிருந்த அத்தனை பணத்தையும் ( அதுவரை ஒரு மூவாயிரம் உரூபாய்கள் சேர்ந்திருக்கும்) அந்த வங்கியில் பணி புரிந்த எனது நண்பரின் அண்ணார் பொய்க் கையெழுத்து போட்டு எடுத்திருந்தார்.

நான் பணம் எடுக்கச் சென்றபோது எனது கணக்கில் பணம் இல்லையென்றதும் திகைத்துப் போனேன். என் நண்பரின் அண்ணன் “ நான் தான் பணத்தை எடுத்து விட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக் கொடுத்து விடுகிறேன். இது குறித்து மேலாளரிடம் புகார் செய்யவேண்டாம்” எனக் கெஞ்சினார்.

பெருமாளும் அனுமாரும் என் நினைவுக்கு வர, எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.

எல்லாம் கைவிட்டுப் போன நிலையில் நான் இருந்தபோது என் மனம் சூன்யமாகிப் போனது. அப்போது எனக்குத் தெரிந்த வழி இரண்டுதான். ஒன்று, தற்கொலை செய்து கொள்வது. இரண்டாவது, எதையும் எதிர் நோக்காமல் உயிர் வாழ்வது.

தற்கொலை செய்து கொண்டால் நான் படித்த படிப்பு பயனற்றுப் போய்விடும் எனத் தோன்றியதால் அதைக் கைவிட்டேன்.

அதனாலேயே நான் படித்த படிப்பு மற்ற யாருக்கேனும் பயன்படட்டும் என நினைத்தேன்.

சற்று நிதானத்துடன் யோசித்தபோது எனக்கு ராமகிருஷ்ணா மடத்தினர் நடத்தும் பள்ளி நினைவுக்கு வந்தது. அவர்களது பள்ளி ஒன்று அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் தகவல் எனக்குத் தெரிந்தது. அதுமட்டுமல்ல அங்குள்ள பள்ளியில் ஆசிரியர் பற்றாக் குறையும் உள்ளது எனவும், அங்கு போய் பணி புரிய பணியாளர் யாரும் அத்தனை எளிதில் ஒப்புதல் கொடுப்பதில்லை எனவும் கேள்விப் பட்டேன். உடனே சென்னை கிளம்பினேன். மயிலாப்பூரிலுள்ள விவேகானந்தா கல்லூரிக்கு அருகிலுள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கு வந்தேன். அங்கிருந்தவர்களிடம் எனது நிலையைச் சொன்னேன். அவர்கள் அருகில் விரித்திருந்த பாயில் அமரச் சொன்னார்கள்

ஆசிரமத்தின் முக்கியமான நபருக்காக காத்திருந்தேன்.

சற்று நேரம் கழித்து ஒரு சாமியார் வந்தார். அவரைக் கண்டதும் எழுந்து நின்று கை கூப்பி வணக்கம் சொன்னேன்.

சாமியார்,“சொல்லுங்கள் என்ன வேண்டும்?” எனக் கேட்டார்

“நான் அறிவியலில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்கிறேன். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள உங்களது பள்ளியில் பணி புரிய விரும்புகிறேன். இதை சேவையாகவே செய்ய விரும்புகிறேன். தாங்கள் எனக்கு அதற்கான உத்தரவைத் தரவேண்டும்…” என்றேன்.

என்னைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தவர் மௌனமாக இருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு கண்களை மூடிக் கொண்டார். பதிலேதும் சொல்லவில்லை.

அவர் தயக்கம் காட்டியதால் நானே சற்று நேரம் கழித்து பேசினேன். “அய்யா, கல்விச் சேவை மட்டுமல்ல வேறெந்தச் சேவையாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள நான் சம்மதிக்கிறேன்,” என்றேன்.

பட்டென கண்ணைத் திறந்தவர், “உமது பெற்றோர் உள்ளனரா?” என்றார்.

“ஆமாம் அய்யா…”, என்றேன். அதைக் கேட்டதும் மறுபடி கண்களை மூடிக் கொண்டார்.

மறுபடி அமைதி. அதற்குப் பிறகு கண்களை விழித்தவர் என்னை ஆசீர்வதிப்பதைப் போல் கையை வைத்துக் கொண்டு,

“You have not received your call..” எனச் சொல்லி என்னை ‘எழுந்து போகலாம்’ என்பதைப் போல் சைகை காட்டினார்…

சம்மணம் போட்டு பாயில் அமர்ந்திருந்தவன், சாமியார் சொன்னதைக் கேட்டதும் உறைந்து போனேன்.

அவ்வளவுதானா? எல்லாம் முடிந்து விட்டதா?

உடம்பெல்லாம் சில்லிட்டுப் போனது. மெல்ல முக்கலுடன் எழுந்தவன் மிகுந்த துக்கத்துடன் மடத்தை விட்டு வெளியே வந்தேன்.

ஓ…வென அழவேண்டும் போலிருந்தது. கடற்கரைக்குச் செல்ல பேருந்தில் அமர்ந்தேன். கடற்கரையை அடைந்து கால் மணலில் புதைந்தபோதும் எனக்கு உணர்வில்லை. மரத்துப் போனது போலிருந்தது.

எதிரில் விரிந்து பரந்திருந்த கடலையும் அதைத் தழுவியபடி எழுந்து என்னை நோக்கி நுரைத்து வந்த அலைகளையும் பார்த்தபடி நின்றிருந்தேன். நான் ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பது எனக்குப் புரிந்தது.”

நண்பரது வாய்மொழி வார்த்தைகள் உள்ளார்ந்த உணர்வுகளுடன் வெளிவந்ததால் அதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் மனதைப் பிசைந்தது.

நண்பர் தொடரக் காத்திருந்தேன்.

மீண்டும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.


 

3 comments:

  1. நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறேன்...

    ReplyDelete
  2. எனக்கும் மனதைப் பிசைகிறது, நண்பரே. உங்கள் பதிவின் நடையை பாராட்ட ஏனோ மனம் இடம் தரவில்லை. அடுத்த பதிவில் சந்திப்போம்.

    ReplyDelete
  3. well the gentleman would have agreed for that marriage . he also seems to be RECKLESS and irresponsible in allowing his specimen signature to be copied by his friend and withdrew cash from his account. in the bank......

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...