Followers

Tuesday, June 30, 2015

மூடிய வழிகளும் திறந்த கதவுகளும்…


30.6.15

மூடிய வழிகளும் திறந்த கதவுகளும்…

 
நமது அனுபவங்கள் தாம் நமக்கு வழிகாட்டிகள். நமது அனுபவங்களில் நாம் அடையும் தெளிவுகள்தான் நமது முதிர்ச்சிகள்.

நான் பேசுவதைக் கேட்கும் பலர் நான் இல்லாத கடவுளுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்பர். சில நாகரிகமானவர்கள், மனிதனின் உழைப்பு இல்லையென்றால் அவனுக்கு கிடைக்கும் பலனுமில்லை எனும்போது உழைப்புதானே கடவுள் என்று நிதர்சனமாக தாங்கள் கருதும் கருத்தை முன் வைப்பர்.

உண்மைதான். ஆனால் நீங்கள் இருபது வருடம் உழைத்த உழைப்பு வீணாய்ப்போவதையும், வெறும் இருபது நிமிட சிந்தனை மிகப் பெரிய பலனைக் கொடுப்பதையும் அனுபவித்திருக்க மாட்டீர்கள் அல்லது பார்த்திருக்க மாட்டீர்கள் என்றே சொல்லுவேன்.

இதை நான் அவர்களைக் குறித்த குறையாய்ச் சொல்வதில்லை. நான் கடவுள் எனும்போது அவர்களுக்கு கடவுள் என யாரோ கற்பித்தவைகள் தாம் நினைவுக்கு வருகின்றன. அல்லது தாம் படித்த செய்திகள்தாம் நினைவுக்கு வருகின்றன. அல்லது தமக்குள் தாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள் வெறும் கேள்விகளாய் இருப்பதனாலேயே அவர்கள் அந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருக்கிறது.

 
ஒரு நல்ல செய்தி என்னவென்றால் அவர்கள் தேடுதலைத் தொடங்கி விட்டார்கள் என்பதே. தேடுதல் என்பது ஏதேனும் ஒரு புள்ளியிலிருந்துதான் ஆரம்பித்தாக வேண்டும். அதிலிருந்து அவர்கள் வாழ்வை அதன் புரிதலை அதிகரிக்கும் போது தானாகவே தெளிவு வந்துவிடும்.

எனக்குத் தெரிந்து ஆத்திகராக வாழ்வை ஆரம்பித்த எத்துனையோ பேர் நாத்திகராகவும், நாத்திகராக வாழ்வை ஆரம்பித்த எத்துனையோ பேர் ஆத்திகராகவும் வாழ்வின் இறுதியில் வந்து நின்றிருக்கின்றனர்.

இந்தத் தேடலும் புரிதலும் முழுதாக முடியாவிட்டால் இந்த வாழ்வின் அனுபவங்கள் அவர்களது புரிதலுக்கு போதுமானதாக இருந்திருக்காது என்பதே எனது எண்ணம்.

எனக்கு பதினைந்து வயதிருக்கும்போது தந்தை பெரியார் எனது பள்ளிக்கு வந்து நிறைய செய்திகளைச் சொன்னார். எல்லாவற்றையும் கேள்வி கேட்கவேண்டும் என்பதை எனக்குச் சொல்லித்தந்ததே அத்தகைய சொற்பொழிவுகள்தான். அப்போது என்னுடனிருந்த எனது நண்பன் கிருத்தவ கூட்டங்களுக்கும் சொற்பொழிவுகளுக்கும் சென்று கொண்டிருந்தான். நான் அவனை கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். அவனிடம் தெளிவு இல்லை. ஒரு கட்டத்தில் அவன் கடவுள் இல்லை என்று சொல்ல ஆரம்பித்தான். ஆனால் நான் அவனிடம் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு வாழ்வின் அனுபவங்களில் பதில் கிடைத்த காலகட்டத்தில் நான் ஆத்திகனாக மாறியிருந்தேன்.

இதுதான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது புரிந்து கொள்ளவேண்டிய ஒன்றே தவிர விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியதொரு பொருள் அல்ல.

வாழ்க்கையை முயற்சிகள், வெற்றிகள் மற்றும் தோல்விகளாய் மட்டுமே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் ஒரு வழிகாட்டுதலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை.

இதற்கு ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்கிறேன்.

இது நடந்து முப்பத்தைந்து வருடங்கள் இருக்கும். அது ஒரு ஏழைக் குடும்பம். தனது குடும்பத்தின் முன்னேற்றத்தைக் கருதி வெகு பாடுபட்டு படித்து PUC யில் 70 சதம் மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அவர் தனது குடும்ப நிலை கண்டு லயோலா கல்லூரியில் Physics பட்டப் படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தார். அவரை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்க்கெல்லாம் இடம் கிடைத்திருந்தது ஆனால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளானார். வேறு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கவில்லை. செய்வதறியாது கலங்கிப் போனார்.

அப்போதுதான் திருச்சியில் REC (Regional Engineering College) யில் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பம் கோரி அழைப்பு வந்திருந்தது. உடனே அவர் அதற்கு விண்ணப்பித்தார். லயோலா கல்லூரியில் இடம் கிடைக்காதவருக்கு REC யில் உடனே இடம் கிடைத்தது. அதில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போதே இரண்டாம் வருடத்தில் TCS campus interview வில் செலக்ட் ஆகிவிட்டார்.

கல்லூரிப் படிப்பு முடித்தவுடனே TCS ல் வேலை. இரண்டு வருடம் கழித்து ஒரு Project க்காக US சென்றவர் அங்கேயே ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்கான வாய்ப்பு வந்தவுடன் தனது TCS வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

இப்போது அவர் Green Card Holder. அவரது பிள்ளைகள் University of California, Berkley யில் மருத்துவப் படிப்பு படிக்கின்றனர்.

தனது 18ம் வயதில் தான் கொண்ட முயற்சியின் தோல்வி தனது வாழ்வின் வழிகாட்டுதலாய்த்தான் வந்தது என்பது அவருக்கு இப்போதுதான் புரிந்தது. அந்த வயதில் அதை ஒரு தோல்வியாகத்தான் அவர் பார்த்தார். இப்போதுதான் அவருக்கு ஒரு தெளிதல் கிடைத்திருக்கிறது.

 
 
காத்திருத்தலும் கவனித்தலும் வாழ்வில் நமது பார்வையை நெறிப்படுத்தும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமல்லவா?

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

 

 

6 comments:

  1. உணர வேண்டியது உணரவும் வேண்டும்... அதற்கு சந்தர்ப்பமும் வர வேண்டும்...

    ReplyDelete
  2. விழுவது தவறல்ல.

    விழும் ஒவ்வொரு முறையும் வீறு கொண்டு எழாமல் இருப்பது தவறு.

    தங்களின் பதிவு - வாழ்விற்கான பாடம்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  3. இன்று இல்லை எனப் படுகிறது ,ஒரு நாள் உண்டுன்னு பட்டால் கும்பிட்டு போறேன் ,அவரவர் உணர்வுக்கு மரியாதை தருவதே ,மரியாதையான செயல் :)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஜீ...

      நாமாக உணரவேண்டுமே தவிர எந்த ஒரு எண்ணங்களும் திணிக்கப்படக்கூடாது. இந்தப் பதிவு வாழ்வை உணர்தலைப் பற்றியது; அது நமக்குக் காட்டும் வழிகளை அறிதலைப்பற்றியது ஜீ..

      God Bless You

      Delete
  4. //காத்திருத்தலும் கவனித்தலும் வாழ்வில் நமது பார்வையை நெறிப்படுத்தும் //
    உண்மை!உன்னை நம்பு.அப்போது நீ கடவுளையும் நம்புகிறாய்!

    ReplyDelete
  5. அனுபவங்கள் மனிதனின் வாழ்க்கை நிலையை மாற்றி அமைக்கும் திறன் படைத்தது என்ற கருத்து உண்மைதான் ஐயா.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...